பெங்களூரில் சில நம்பிக்கைகள்

ஒரே நாளில் இரு வெவ்வேறு மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் ஒரு துருவம் என்றால் இன்னொருவர் எதிர் துருவம்.

குக்கரில் விசில் வருவதில்லை. கேஸ்கெட்டை மாற்ற வேண்டும் என்றார் தங்கமணி. அழைத்துக்கொண்டு மெயின் ரோடு அருகே இருக்கும் கடைக்குச் சென்றேன். கேஸ்கெட்டையும் எடுத்துச் சென்றிருந்தோம். அது ஒரு ஹிந்திவாலா கடை. கொண்டுவந்தது கொடுத்ததும் உள்ளே சென்று, கொஞ்ச நேரம் தேடிய பின், ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். நான் ஒன்றன்மேல் ஒன்று வைத்துப் பார்த்தேன். அவன் கொடுத்தது கொஞ்சம் பெரிதாக இருப்பதுபோல் இருந்தது. கேட்டதற்கு, சரியாய் வரும், இல்லையென்றால் திரும்ப வாங்கிக்கொள்கிறேன் என்றான் அந்தப் பையன்.

வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சந்தேகப்பட்டபடி கொஞ்சம் பெரியதுதான். மறுநாள் கொண்டுபோய் கொடுத்ததற்கு, மீண்டும் தேடி எடுத்து இன்னொன்றைக் கொடுத்தான். அதையும் ஒன்றன்மேல் வைத்துப் பார்த்து, கொஞ்சம் பெரிதாக இருக்கிறது என்றேன். கொஞ்சம் மேலே நகர்த்தி  சரியாக இருக்கிறது என்றான். இப்போது கீழே சரியாக இல்லை. அதைச் சொன்னதற்கு, சரியாக வரும் மூடியைக் கொண்டுவந்தால் காசை திரும்பத் தருகிறேன் என்றான்.

கண்முன்னே நடக்கிறது. நன்றாகத் தெரிகிறது சரியில்லை என்று. எந்த தைரியத்தில் இப்படியெல்லாம் செய்கிறான் என்று தெரியவில்லை. ஐம்பத்தைந்து ரூபாய்தானே, இதற்காக திரும்பியா வரப்போகிறார்கள் என்ற நினைப்பாக இருக்கும். இப்படியே எவ்வளவு சம்பாதிப்பான். ஒரு ரூபாயாக இருந்தாலும் திருப்பி வாங்கித்தான் நமக்குப் பழக்கம்.

பெங்களூர் வந்ததிலிருந்தே இந்த சில்லரை விசயம் கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருக்கிறது. வாடிக்கையாளரை, பணக்காரன் என்று நினைக்கிறார்களா, அல்லது அவர்கள் பணக்காரர்களா தெரியவில்லை. ஒன்று இரண்டு எல்லாம் தருவதும் இல்லை, எந்த பதிலும் சொல்வதும் இல்லை. கேட்டாலும், சில்லரை இல்லை என்றுதான் பதில் வருகிறது. எந்த அளவுக்கு வடிக்கையாளர்கள் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது இங்கு வாழ.

பத்து ரூபாய் சில்லரை இல்லையென்றால், அடுத்த வாரம் தாங்க எனச் சொல்லும் கறிக்கடை பாயும் இதே ஏரியாதான். இருநூற்றி இருபது ரூபாய் பில்லைப் போடுவிட்டு, முன்னூறு கொடுத்தால், சில்லரை இல்லையென்று இருநூறு எடுத்துக்கொள்ளும் மெக்கானிக்கும் இதே ஏரியாதான். இவற்றையெல்லாம் எப்போதாவதுதான் பார்க்கிறேன். சில்லரையை ஆட்டயப் போடுபவர்களைத் தினமும் சந்திக்கவேண்டியதிருக்கிறது.

இவனை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று, வீட்டிற்குச் சென்று, மூடியை எடுத்துவந்து, சரியில்லை என்று மாட்டிப் பார்த்தாயிற்று. அவனும் செம கடுப்பில் இருந்தான். சில்லரை இல்லை, 45 கொடுங்க 100 தருகிறேன் என்றான். முந்தை நாளும் இதே கதைதான், சில்லை இல்லையென, 55 சரியாக வாங்கினான். சில்லரை விசயத்தில் சரவணபவனை அடித்துக்கொள்ளமுடியாது. 45 கொடுத்து 100 வாங்கிவந்தேன். அந்தப் பக்கம் இன்னொரு கடை இருக்கிறது, அங்கே செல்லலாம் என்றார் தங்கமணி. என்ன இருந்தாலும் விசில் வராதது இன்னும் பிரச்சனைதானே.

இன்னொரு கடைக்குச் சென்றோம். அதே மாதிரியான பாத்திரக்கடை.  அதே மாதிரி ஹிந்திவாலா. ஆனால் அதேமாதிரி கூட்டம் இல்லாமல் இல்லை. முன்னால் மூன்றுபேர் நின்றுகொண்டிருந்தார்கள். இருந்தாலும் என்ன என்றார், கேஸ்கெட் என்றோம், காத்திருக்கச் சொன்னார். இருவரை அனுப்பிவிட்டு நம்மிடையே வந்தார். இன்னொருவருக்கு சில தட்டுகளைக் கொடுத்துப் பார்க்கச் சொல்லியிருந்தார்.

வாங்கிப் பார்த்துவிட்டு, கேஸ்கெட் நன்றாகத்தான் இருக்கிறது, ஏன் மாற்றுகிறீர்கள் என்றார், விசில் வரவில்லை என்றோம். தண்ணீர் ஓரங்களில் வடிகிறதா என்றார், இல்லை என்றார் தங்கமணி. தண்ணீரில் நனைத்து உபயோகியுங்கள் ஒழுங்காக வரும் என்றார். தங்கமணி தயங்கினார். மூடியை வாங்கிப் பார்த்தார். சேப்டி வால்வை சோதித்தார், அதுவும் நன்றாக இருக்கிறது என்றார். உபயோகித்துப் பாருங்கள், சரியில்லை என்றால் சேப்டி வால்வு மாத்திப் பார்க்கலாம் என்றார்.

தங்கமணி, பரவாயில்லை இப்பவே அதை மாற்றித்தாருங்கள் என்றார். இருபது ரூபாயை ஏன் வீணாக்குகிறீர்கள், உபயோகித்துப் பாருங்கள் என்றார். தங்கமணி வற்புறுத்தவே, அதை மாற்றிக்கொடுத்தார். இவரும் இதே ஏரியாவில்தான் கடை வைத்திருக்கிறார். பெங்களூரை நினைத்து ஏறிய டென்சனையெல்லாம் குறைத்து அனுப்பினார். இவர்களைப் போன்றவர்கள்தான் நான் இன்னும் இங்கே இருக்கக் காரணம். இவர்களுக்கெல்லாம் நன்றி.

-பெஸ்கி.


Share/Bookmark

0 ஊக்கங்கள்: