தூக்கமில்லா நோயும் சில உண்மைக் கனவுகளும்


இந்தப் படத்துக்கும் நமக்கும் ரொம்ப நாளா ஒரு கனெக்சன். சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி நம்ம நண்பன் நம்மல சைடு போஸ்ல பாத்துட்டு, நீ அந்தப் போஸ்டர்ல இருக்குற மாதிரியே இருக்கன்னு ஒரு பிட்டப் போட்டான். போதாக்குறைக்கு அவன் ஒரு ஹாண்ட் தேர்ந்த கணினிக் கலைஞன் வேற. நம்மல அபப்டி நில்லு, இப்படித் திரும்பு, கொஞ்சம் குனி அப்டின்னு ஆங்கிள் ஆங்கிளா போட்டோ எடுத்து அப்படியே ஒரு வேலை பண்ணிக் காட்டினான். அதான் இது...
அப்பவே சொன்னான், இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அப்டின்னு. அப்பல்லாம் நமக்கு படம் பாக்குறதுல ஆர்வம் இருந்தாலும், புடிச்சது என்னவோ ஒரு ஓபனிங் சாங், கொஞ்சம் பைட்டு, அஞ்சு பாட்டு, அதுல ஒன்னு குத்து (படம் முடியிறதுக்கு முன்னாடி), ஒன்னு மெலொடின்னு இருக்குற தூயத் தமிழ் படங்கள் மட்டுமே. தமிழ் மேல அவ்ளோ பற்று. அப்படியே இன்கிலீசுப் படம் பாத்தாலும், ஒன்னு ஜாக்கிசானுக்காக இருக்கும். இல்லைனா ஏதாவது பெரிய மிருகம் வரனும். அப்பத்தான் பாப்பேன். அப்படி இருந்த காலத்துல அவன் சொன்னத அவ்வளவா கண்டுக்கல. ஏன்னா, ஹீரோ தெரியலன்னா அந்தப் படத்தப் பாக்குறது தெய்வக்குத்தமா இருந்துச்சு.

அப்றம் கொஞ்ச நாள் கழிச்சு, அதே போஸ்டர ஒரு தமிழ்ப் படத்துக்குக் காப்பி அடிச்சிருக்குறதாச் சொன்னான். நம்ம ஆளு பண்ண அளவுக்கு பெர்பெக்ட்டா அது இல்ல. இதுல நம்ம ஆளுக்கு ஒரு பெரும. அப்பவும் இந்த படத்தப் பத்தி சொன்னான். நமக்கு லேசா ஒரு ஆச. சரி, பாக்கலாமேன்னு அவன் கிட்ட கேட்டேன். தேடிப் பாத்துட்டு அந்த டிவிடி தொலைஞ்சு போச்சுன்னு சொல்லிட்டான். சரின்னு விட்டுட்டேன்.

திரும்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு படம் வந்துச்சு, மந்திரப் புன்னகை. படம் இன்னும் பாக்கல. ஆனா அதோட கதை இந்த கதைய ஞாபகப்படுத்துச்சு. இப்ப முன்னாடி மாதிரி இல்ல. மகா மொக்க படம் கிடச்சாலும் சப் டைட்டிலோட இருந்தா உக்காந்து பாக்குற பக்குவம் வந்துருச்சு. ஏற்கனவே டிசம்பர்ல இந்தப் படம் டிவிடி வாங்கிப் பாத்ததுல பாதிதான் பாக்க முடிஞ்சது. அந்த வெறி வேற, ஒரு வழியா வேற ஒரு வழியா எடுத்து, நேத்துதான் பாத்தேன். தேடுனது வீண் போகல. இதுவும் ஒரு வித்தியாசமான படம்தான்.

ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் கதாநாயகன், இன்னும் கொஞ்சம் மெலிந்தால் காணாமல் போய்விடும் அளவுக்கு எழும்பும் தோலுமாக. தூங்காத வியாதி, ஒரு வருடமாகத் தூங்கவில்லை. அதனால் ஏற்படும் விளைவுகளே காட்சிகள். அதே தொழிற்சாலையில் வேலை செய்யும் இன்னொருவனால் பிரச்சனை வருகிறது. சொன்னால் யாரும் ஏற்கவில்லை, தொழிற்சாலையில் அப்படி ஒருவன் வேலை செய்ததற்கான ரெக்கார்டே இல்லை. அடிக்கடி சந்திக்கும் அவனால் வரும் தொல்லைகள். அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் எனத் தேடிப்போகும்போது வரும் திருப்பங்கள். இதுதான் படம்.



கதாநாயகன் கிறிஸ்டியன் பேல். இதற்கு முன்னால் காஸ்ட் அவே (Cast Away) படத்தில் டாம் ஹாங்க்ஸ் உடம்பை கூட்டிக் குறைத்து நடித்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஆனால் இதில் அதற்கும் மேல், இப்படி உடம்பைக் குறைக்க முடியுமா என்று நம்பவே முடியவில்லை.சில நேரங்களில் அந்த உடம்பைப் பார்த்தால் பயமாகக் கூட இருக்கிறது. எப்படித்தான் இப்படியெல்லாம் நினைத்த மாதிரி கூட்டி/குறைக்கிறாரோ தெரியவில்லை.

படத்தோட வெற்றியே, வித்தியாசமான படம்னு தெரிஞ்சு உக்காத்தாலும், ஒவ்வொரு காட்சிக்குப் பின்னாடி ட்விஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சிருந்தும், கடைசியில எல்லாத்துக்கும் விடை இருக்கும்னு தெரிஞ்சிருந்தும் நான் எதிர்பாக்காத முடிவுகள், ஆச்சர்யப்படவைத்த முடிவுகள் கொண்ட, வித்தியாசமான, கணிப்புக்கு வெளியே இருக்கும் திரைக்கதைதான். அதற்கும் மேல், படம் முடிந்த பின்னாலும், ஒவொரு காட்சிக்கும் முடிச்சுப் போட்டு சிந்திக்கும் (வழக்கம்போல) ஒரு மனநிலையை ஏற்படுத்துகிறது படம், முக்கியமாக அந்த ஹேங்மேன் விளையாட்டு, காப்பி ஷாப், சில கதாப்பாத்திரங்கள்.

பார்க்கவேண்டிய படம்.

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!

தென்மேற்குப் பருவக்காற்று

நேற்று தென்மேற்குப் பருவக்காற்று பார்க்கச் சென்றிருந்தேன். பதிவர் வண்ணத்துப்பூச்சி சூர்யா அழைத்தார். பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக் காட்சி என்றும், பதிவர்களை அழைத்திருப்பதாகவும் சொன்னார். Four Frames எனது அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்ததால் வசதியாகப் போயிற்று. கிளம்பும் வேளையில் தூறல் ஆரம்பித்தது. இருந்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்திலும், பதிவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும் கிளம்பிவிட்டேன். பலர் தூறல் காரணமாக வரவில்லை. இருப்பினும், பிரபல பதிவர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜாக்கிசேகர், சூர்யா, காவேரி கணேஷ், சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட சுரேகா ஆகியோர் வந்திருந்தனர். மற்ற அனைவரும் பத்திரிக்கையாளர்கள் என்று நினைக்கிறேன், எனக்கு யாரையும் தெரியவில்லை. சூர்யாதான் ஒவ்வொருவர் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்.
டைட்டில் சாங் அருமை. பாடல் மட்டுமல்ல, காட்சிகளும்தான். “கள்ளிக்காட்டில் பொறந்த தாயே...”, கிராமத்து தாய்மார்களின் ஸ்டில் படங்களுடன் வந்தது அருமையாகவும் வித்தியசமாகவும் இருந்தது. அது முதலே திரை முழுவதும் தேனி மாவட்டத்தில் செந்நிறம். அந்த நிறமே என்னை கிராமத்தில் இருப்பது போன்று உணர்வைத் தந்தது. பல தாய்மார்களின் படங்களுடன் கடைசியில் படத்தின் முதல் நாயகி சரண்யாவின் படத்துடன் பாடல் முடிகிறது. பாடலும் படங்களுமே இது ஒரு அம்மாவைப் பற்றிய படம் என்பதைச் சொல்லியது.

படம் ஆரம்பித்த முதல் அரைமணி நேரம் கலங்கிப் போனேன். மிக மிக நாடகத்தனமான காட்சிகள், ஒன்றுக்கொன்று ஒட்டாத காட்சிகள். தெரியாத்தனமா வந்துட்டோமோ என்று எனக்கு பயம். இருந்தாலும் அந்த பயம் போனதே தெரியாமல் காட்சிகளைக் கொண்டுசென்றிருப்பது ஆச்சர்யம்.

இளம் வயதிலேயே விதவையான தாய், தனது மகனைப் பாடுபட்டு வளர்க்கிறாள். மகன் மீது அவ்வளவு பாசம். மகன் வழக்கம்போல வெட்டியாக ஊர் சுற்றும் பிள்ளையாக இல்லாமல், ஆடு மேய்த்துக்கொண்டும் சிறிது சேட்டை செய்துகொண்டும் இருக்கிறான். பூச்சில்லாமல் செங்கல் சுவருடன் நிற்கும் வீடு. அதை மகன் கல்யாணத்திற்காக வாங்கும் பணத்தில் பூசி விடலாம் என்ற எண்ணம் அம்மாவுக்கு. தனது தூரத்து உறவில் அம்மா இல்லாத பெண்ணுக்குப் பேசி வைக்கிறாள்.

ஆடி திருடும் கும்பல் ஒன்று இரவு நேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு பல்வேறு ஆடுகளைத் திருடிக்கொண்டிருக்கிறது. படம் ஆரம்பிப்பதே ஆடு திருவதில்தான். வெயில் பட ஆரம்பம்போல ஒரு உணர்வு. அந்த கும்பல் ஒரு முறை நமது கதாநாயகன் பாதுகாக்கும் ஆட்டு மந்தையில் திருடுகிறது. இருவர் குழுவுக்குமான சண்டையில் கதாநாயகன் கும்பலில் ஒருவரைப் பிடித்துவிட, மறைப்பை விலக்கி முகத்தைப் பார்த்தால் பெண், கதாநாயகி. அதிர்ச்சியில் உறைந்துபோன நாயகன் அவளை விட்டுவிடுகிறான். இந்த நேரத்தில்தான் வழக்கம்போல காதல் வந்து நுழைகிறது.

இவளை அவன் தேட, அதே சமயம் அவளுடைய அடிதடி அண்ணன்கள் இவனைக் குறிவைக்க, பின்பு அண்ணன்கள் சிறைக்குச் செல்ல, பின்பு இவர்களுக்குள் காதல் வளர, பேசி வைத்த கல்யாணம் நிற்க, அன்னை மகனின் காதலை எதிர்க்க, வெளிவரும் அண்ணன்மார்களும் நாயகன்மேல் கொலைவெறியுடன் எதிர்க்க, திருட்டுக் கல்யாணத்திற்கு நாயகன் ஏற்பாடு செய்ய, கடைசியில் என்ன ஆனது என்பதே கதை.

படத்தின் சிறப்பம்சங்கள் பல. அதிலும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் தேர்வும் அவர்களின் நடிப்பும். முதலில் அம்மா சரண்யா. சில காட்சிகள் மூலம் அருமையாக அவரது குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வெகுளி, மகன் மீதுள்ள பாசம், உழைப்பு, கோபம் என ஒவ்வொன்றும் நமக்குப் புரியவைக்கப்பட்டிருக்கிறது.

கதாநாயன், கதாநாயகி கதாப்பாத்திரங்களும் அழகாகப் பொருந்திப்போகின்றன. கதாநாயகனின் நண்பன் கதாப்பாத்திரம் அருமையோ அருமை, நகைச்சுவைக்காக. பல இடங்களில் அவனின் வசனங்கள் சிரிக்கவும் கைதட்டவும் வைக்கின்றன. கதாநாயகியின் அண்ணனும் டெர்ரராக நமது மனதில் இடம் பிடிக்கிறார். சில காட்சிகள் வந்தாலும் அந்த பெண் போலீஸ் அதிகாரி கூட மனதில் ஒட்டிக்கொள்கிறார். கதாநாயகனுக்காக முதலில் பேசி முடிக்கப்படும் பெண், என் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டாள், அவளது பேச்சு அருமை அருமை... இன்னும் மனதில் நிற்கிறது. அவளிடைய அப்பாவும் மனதில் நிற்கிறார். கதாப்பாத்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் சிறந்த படமாக இது எனக்குப் பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு அருமை, முன்பே சொன்னதுபோல கரிசல் நிறம் திரை முழுதும் அழகாக விரிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பல பிற நாட்டுப் படங்களைத் திருடிப் படம் எடுக்கும் சூழலில் இப்படி சொந்த சரக்கை அளித்திருப்பது மகிழ்ச்சி. இசை அருமை, கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மற்றும் ஏடி கள்ளச்சி மனதில் நிற்கிறது. இன்னொரு பாடல் அருமையாக இருந்தாலும், ரிதம் படத்தின் தனியே தன்னந்தனியே பாடலின் தழுவலாக இருப்பதால் பிடிக்காமல் போயிற்று.

கற்பனையாக ஆடிப்பாடும் பாடல் காட்சிகள் ஒன்றும் படத்தில் கிடையாது. மற்றும் தேவையில்லாத குத்துப்பாடல்களும் கிடையாது. இயக்குனருக்கு இதற்காக மிகப்பெரிய நன்றி. மேலும் இப்போது வரும் பல கிராமத்துப் படங்கள் பருத்திவீரனையோ அல்லது சுப்ரமணியபுரத்தையோ ஞாபகப்படுத்துவதாகவே இருக்கின்றன. ஆனால் இந்தப் படம் அப்படியில்லாமல் இருப்பது இயக்குனர் மேல் மேலும் நம்பிக்கையைத் தந்துள்ளது. இனி வரும் கிராமத்துப் படங்களில் சில இந்தப் படத்தை ஞாபகப்’படுத்தலாம்’.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் படத்தின் பலங்களாகக் கருதலாம். படத்தின் பெரும் குறைகளாக நான் கருதுவது, முதலில் வரும் அந்த நாடகத்தனமான காட்சிகள். பெரும் அயர்ச்சியையும் பயத்தையும் தருகின்றன. அடுத்து சில கதாப்பாத்திரங்கள் பேசும் வசனங்கள். வாயசைப்பு ஒரு விதமாகவும் வசனங்கள் வேறு விதமாகவும் இருக்கின்றன, அதுவும் க்ளோசப் காட்சிகளில். ஏதோ டப்பிங் படம் பார்க்கும் உணர்வைப் பல இடங்களில் தருகின்றன. அடுத்து சில லாஜிக் ஓட்டைகள். இப்படி இந்தப் படத்தில் ப்ளஸ் மற்றும் மைனஸ்கள் சரி சமமாக இருக்கின்றன. ஆனால் அருமையான காட்சிகளுக்காகவும், கதாப்பாத்திர வடிவமைப்புகளுக்காகவும், சினிமாத்தனமில்லாத சிறந்த முடிவுக்காகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

(2) வீட்டு புரோக்கர்

வீடு தேடுதல் (1) ன் தொடர்ச்சி...

அடுத்து புரோக்கர்கள். இவர்களை நான் விரும்புவதே இல்லை. நான் பார்த்த பல புரோக்கர்களில் இருவரைத்தான் மனிதர்களாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவர்கள் வாயைத் திறந்தால் வார்த்தைக்குப் பதிலாக பொய்தான் வந்து விழும். அதிலும் ஒரு மாத வாடகையை கமிசனாகக் கேட்பார்கள். அதற்குத் தகுந்த உழைப்பு இருக்கிறதா என்றால், இல்லை. மனதிற்குப் பிடித்தமான சரியான வீட்டைக் காண்பித்து, நல்ல விலைக்கு முடித்துக் கொடுத்தால் இவர்கள் கேட்கும் விலை நியாயமானதுதான். ஆனால் இவர்கள் செய்வதோ தலைகீழ். நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டவும் மாட்டார்கள், விலையையும் நன்றாக ஏற்றிவிடுவார்கள். பின் எதற்குத்தான் இந்த பெருந்தொகைக் கமிசனோ தெரியவில்லை.
இவர்களிடம் முதல் பிரச்சனை, நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டமாட்டார்கள். பார்க்கிங், தண்ணி வசதி, எத்தனை அறைகள், அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என அரை மணி நேரம் மூச்சு விடாமல் சொல்லியிருப்போம். இருந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அவர்கள் கையில் இருக்கும் அனைத்து வீட்டிற்கும் ஊர்வலம் கூட்டிச் செல்வார்கள். நாமோ ஆபீஸில் பெர்மிசனோ, லீவோ போட்டு வந்திருப்போம். தேவையில்லாமல் நமது நேரத்தை வீணடிப்பார்கள். இரண்டாவது வீட்டுக்குப் போன பின் நமக்கே கண்ணைக் கட்டும். ”நான் சொன்ன மாதிரி வீடு இருக்கா இல்லையா?” என்று கொஞ்சம் முகம் கடுப்பாகும் நமக்கு. “அடுத்த வீடு கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் சார்”, என்று மனசாட்சியே இல்லாமல், திரும்பவும் மொக்கையாக ஒரு வீட்டைக் காட்டுவார் பாருங்கள், அப்படியே அந்த வீட்டு நிலையில் முட்டிக்கலாம் போலத் தோனும்.

சிலர் இதற்குக் கூட கமிசன் கேட்பார்கள். இவ்வளவுக்கும் நமது வண்டியில்தான் வந்திருப்பார். முதலில், சொந்தமாக ஒரு வண்டியில்லாமல் நமது வண்டியில் தொற்றிக்கொள்ளும் புரோக்கரை நம்பவே வேண்டாம். பின், முதலிலேயே கண்டிப்பாக சொல்லிவிடனும், லீவு போட்டுட்டு வரேன், நான் சொன்ன மாதிரி வீடு காட்டலைனா நீதான் என் சம்பளத்தைத் தரனும் என்று. அவ்வாறு தர மாட்டார் என்றாலும் தேவையில்லாத அலைச்சலைத் தவிர்க்கலாம். வீடு முடிந்தால்தான் கமிசன் என்பதையும் முதலிலேயே பேசிவிடவேண்டும். இதெல்லாம் சரிவராது சார், வேற ஆளப் பாத்துக்க சார் என்றெல்லாம் படம் காட்டுவார்கள். யோசிக்கவேண்டாம், தாராளமாக வேறு ஆளைப் பார்க்கலாம். அந்த ஏரியாவில் யாரைப் பார்த்தாலும் இவரும் கூட வருவார்.

மேலும் கமிசன் தொகை ஒரு மாத வாடகை என வழக்கமாகச் சொல்வார்கள். அதை நாம் குறைத்துப் பேசலாம். சிலர் மட்டுமே அதற்கு ஒத்துப்போவார்கள். சிலர் குழுவாக அமைந்து வீடுகளைப் பார்த்துவைத்துக்கொண்டு நமக்குக் காட்டுவார்கள். சில புரோக்கர்கள் இப்படிக் குழுவாகச் செயல்படாமல் தனித்து இருப்பர். இந்த மாதிரி இருப்பவர்கள் விலையைக் குறைத்துக்கொள்வார்கள். இவர்கள் நேர்மையாகவும்ம், சரியான வீட்டைக் காட்டும் வாய்ப்பும் அதிகம்.
பெரும்பாலான புரோக்கர்கள் பகுதி நேரமாக இதைச் செய்வார்கள். சிலர் முழு நேரமாகச் செய்தாலும் அலுவலகம் என்றெல்லாம் எதுவும் இருக்காது. ஆனால், சில ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர்கள் அவர்களுக்கென ஒரு அலுவலகம் வைத்திருப்பார்கள். இடம், வீடு வாங்குவது மற்றும் விற்பது முதன்மையாக இருந்தாலும் வாடகை வீடு பிடித்துக் கொடுப்பதும் சிறிய அளவில் செய்வார்கள். நான் பார்த்தவரையில் இவர்களை நம்பலாம். தேவைக்கேற்ற வீட்டைக் காட்டுவார்கள், கமிசனும் பேசிக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் யாரையாவது கைகாட்டி அனுப்பினால் நம்ப இயலாது.

பெரும்பாலும் புரோக்கர்களைத் தவிர்த்துவிடவேண்டும். முந்தைய பதிவில் சொன்ன வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடித்தாலே வீடு கிடைத்துவிடும். அப்படிக் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவசரமான சூழ்நிலையில் மட்டுமே புரோக்கர்களை நாடிச் செல்லலாம்.

இப்போது நாம் பார்க்கும் வீடுகளில் ஒன்று பிடித்துப் போகிறது. அதன்பின்பு என்னவெல்லாம் கவனிக்கவேண்டும் என்பதை அடுத்து பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!