Showing posts with label மனசு. Show all posts
Showing posts with label மனசு. Show all posts

அலுப்பே நெருங்காதே

முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின், அதை ஓட்டுவது எப்படி இருந்தது? முதன் முதலில் வாங்கிய நோக்கியா 1100 தொலைத்த தூக்கங்கள் எத்தனை? முதன் முதலில் குடித்த பாதி பாட்டில் பீர், கால் டம்ளர் ரம் - இவைகள் தந்த போதை இப்போது எதிலும் கிடைக்காதது ஏன்? பள்ளி நண்பர்களுடனான முதல் சுற்றுலா, கல்லூரி நண்பர்களுடனான கடைசி சுற்றுலா ஏக்கம் தருவது ஏன்? முதல் பணியில் வெற்றிகரமாக செய்த சிறு வேலை தந்த மகிழ்ச்சி எங்கே? முதல் பதிவு, முதல் பின்னூட்டம் தந்த கிளுகிளுப்பு இப்போது எப்படிக் கிடைக்கும்?

எந்த ஒரு விசயத்திலும், முதலில் இருக்கும் சுவாரஸ்யம் கடைசி வரை இருப்பதில்லை. எனது வீட்டில் மொத்தம் நான்கு அறைகள். எனது ஒரு வயது குழந்தை, நாள் முழுதும் அதற்குள்தான் சுற்றிச் சுற்றி வருகிறாள். திங்கள் முதல் வெள்ளி வரை அந்த அறைகள்தான். நடக்கிறாள், ஓடுகிறாள், விழுகிறாள், அழுகிறாள், பாடல் கேட்கிறாள், பார்க்கிறாள், என்னுடன் விளையாடுகிறாள், சிரிக்கிறாள். சில நேரங்களில், ஒரு பொருளை கைகளில் வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பல கோணங்களில் பார்க்கிறாள். வீட்டுச் சாவியைக் கொடுத்தால், ஒரு மணி நேரம் வரை அந்த ஆராய்ச்சி நடக்கும். சிறு வயதில் நானும் இப்படித்தான் ஒரே இடத்தில் உட்கார்ந்து அலுக்காமல் சிறு செயல்களைச் செய்துகொண்டு இருந்திருப்பேன், என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.



Share/Bookmark
Read More!

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை பதிவு எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. ஏன் எழுதுவது நின்று போனது என்று யோசித்துப் பார்க்கிறேன், சரியாகத் தெரியவில்லை, அதைப் பற்றி மேலும் யோசித்து அறிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு எழுதுவது சிறிது குறைந்தது. குழந்தை பிறந்த பிறகு படிப்பதும் குறைந்தது. குழந்தையைப் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். வெர்னிகா. ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்வதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும், அவள் நடந்து கொள்ளும் விதம், புதிது புதிதாக அவள் பார்ப்பது, கற்றுக்கொள்வது, பிரதிபலிப்பது என்று ரசித்துக்கொண்டே இருக்கலாம். இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டாள். காலையில் எங்காவது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பரப்பி வைப்பதுதான் இப்போது பிரதான வேலை. பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. திரும்பவும் எடுத்து அடுக்கி வைப்பது நமது வேலைகளில் ஒன்றாகிவிட்டது. சென்ற வாரம் வேளாங்கண்ணி சென்று மொட்டை போட்டு காதி குத்தி வந்தோம்.

வேளாங்கண்ணி இப்போது எனது பார்வையில் புதிதாகத் தெரிகிறது. மற்றவர்கள், அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள். ஒருவேளை எனக்கு சில அகக் கண்கள் திறந்திருக்கலாம். கடைகளில் எல்லாம் அதிக விலை. ஒரு தண்ணீர் பாக்கட் 3 ரூபாய்க்கு பேருந்து நிலையம் அருகில் வாங்கினேன். விலைக்குத் தகுந்த தரமான உணவை எங்கும் பார்க்கவில்லை. பேருந்து நிலையத்தின் உள்ளேயே டாஸ்மாக். பயணிகள் காத்திருக்கும் இடம்தான் பாராக இருக்கிறது. கோவிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டேபோகலாம். சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு அரசு அலுவலகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இதைக் கவனிக்கவேண்டிய பாதிரியார்கள் என்ன சேவை செய்கிறார்களோ தெரியவில்லை. வேளாங்கண்ணி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதினால் நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்கள்தான் அதிகமாக இருக்கும். புனிதப் பயணம் என்று சென்று மனத்தாங்களோடுதான் திரும்பி வரவேண்டியிருக்கிறது.

சமீபத்தில் பார்த்த படங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் கலகலப்பு திரையரங்கில் பார்த்தேன். ஓகே ஓகே ஆரம்பம் முதல் கடைசி வரை தொய்வு இல்லாமல் சென்றது. சந்தானம்தான் காரணம். கலகலப்பு ஆரம்பத்தில் தொங்கியது. ஆனால் பின்பாதி சேர்த்து வைத்து சமன் செய்தது. ஆனால் சந்தானம் ஒருவரே காரணம் என்று சொல்ல முடியாது. இரண்டையும் ஒப்பிட்டால் கலகலப்பில்தான் வயிறு வலிக்க சிரித்தேன். ஆனால் நல்ல படம் என்று பார்த்தால் அது ஓகேஓகேதான்.

அடுத்து சில ஆங்கிலப் படங்கள் பற்றி. கடைசியாகப் பார்த்த படங்கள்: Avengers, Safe House மற்றும்  Prometheus. Avengers பற்றிச் சொல்லவே வேண்டாம், அட்டகாசம். ஆனால் அது பற்றிய கருந்தேள் கண்ணாயிரம் எழுதிய தொடர் பதிவுகள் அதை விட அட்டகாசம். Safe House: சமீபத்தில் இதைப் போன்ற மிகசிறந்த விருவிருப்பான திரைக்கதை மிகுந்த படத்தைப் பார்த்ததே இல்லை என்ற உணர்வைக் கொடுத்த படம். The Bourne வகையறா என்றாலும் புதிதாக இருந்தது. Prometheus பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. சுத்த போர். ஒரு வேளை தமிழில் பாத்ததால் அப்படி இருக்கலாம். ஆங்கிலத்தில் மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்.

மேலும் சில படங்கள் பற்றி: Contraband, இதில் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் தொய்வில்லாத படம். The Divide என்ற படம் ஒன்று பாத்தேன். தூக்கத்தைக் கெடுத்த படம். Blindness வகையறா... உலகம் அழிந்த நிலை. தப்பித்த சில பேரின் மன நிலைகளைப் பிரதிபலிக்கும் படம். The Awakening என்று ஒரு படம். The Sixth Sense வகைப் படம். கடைசி இடத்தில் அவிழ்க்கப்படும் முடிச்சு, திரும்பவும் படத்தை ஆரம்பத்தில் இருந்து நம்மைப் பார்க்க வைக்கும், நன்றாகத்தான் இருந்தது.

என்னதான், நா ரொம்ப பிசி, என்று ஒப்புக்குச் சொன்னாலும், சிலருடைய பதிவுகளை எப்போதுமே படிக்கத் தவறுவது இல்லை. கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன் மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் ஆகியோரது பதிவுகளை எப்போதுமே படிப்பதுண்டு. கூகுள் பிளஸ் ஒரு நாளைக்கு சில வேளைகள் சென்று நாட்டு நடப்பதைத் தெரிந்துகொள்கிறேன். ஆனால் எதையும் எழுதுவது இல்லை, எதற்கும் பதிலிடுவதும் இல்லை. எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்!

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!

ஏதோ ஒன்னு

படிக்கவும் முடியல, எழுதவும் முடியல. சில நேரம் படிக்காம படுக்கவும் முடியல. ஒரு சில விசயங்களைப் பழகிட்டோம்னா திரும்ப விடுறது எனக்கு கொஞ்சம் கஷ்டம். அது எல்லாமே ஒரே மாதிரியா இருக்காது.

இப்போ காபி குடிக்கிறத எடுத்துக்கலாம். வீட்டுல இருக்குறவரைக்கும் காலைல எந்திரிச்ச உடனே காபி குடிக்கனும்போல இருக்கும். அம்மா கேட்டவொடனே குடுக்கலைனா சண்டையே வரும். அந்த சமயத்துல எங்காவது வெளியூரு போயிருந்தா, காலைல எந்திரிச்சவொடனே எங்கயாவது தேடிப்பிடிச்சாவது குடிக்கிறது பழக்கம். அப்புறம் சென்னை வந்ததுக்கு அப்புறம் பேச்சலர் வாழ்க்கைல அது எப்படி காணாமப் போச்சுன்னே தெரியல. அதப் பத்தி கவலப்படுறதும் கிடையாது. அதே நேரம், காலைல எந்திரிச்ச உடனே கிடைச்சதுனாலும் குடிக்கிறதுதான், அதப் பத்தி அப்பவும் சரி பின்பும் சரி, கவலைப்படுறது இல்லை. இது ஒரு வகையாச்சா?

இப்போ சிகரெட் குடிக்கிறத எடுத்துக்கலாம். பழக்கமாகிப்போச்சு. விடனும்னு தோனுது. சில நாள் விட்டுப்பாக்குறது. அப்றம் ரெண்டு நாள் அடிச்சுப் பாக்குறது. விட்டதும் ஒரு சந்தோசம், அப்றம் ஏக்கம். சரின்னு அடிச்சுப்பாத்தா, ஏதோ ஒரு இழப்பு. இப்படி ஒரு பழக்கம். விட்டாலும் இழுக்கும், பிடிச்சாலும் கவலைப்படவைக்கும்.



இதுல படிக்கிறது, எழுதுறதுன்னு ரெண்டு புதுசா வந்து தொத்திக்கிச்சு. ஆரம்பத்துல படிச்சுட்டு மட்டுமே இருந்தேன். அது காப்பி குடிக்கிற மாதிரி. படிக்க வாய்ப்பு கிடைக்கலைனாலும், கிடைச்சாலும் அவ்வளவா கண்டுக்கிறதே இல்லை. முடிஞ்சா படிப்போம், இல்லன்னா அடுத்த நாள் படுச்சுக்கலாம். அப்றம் வந்தது எழுதுறது, இது சிகரெட் குடிக்கிற மாதிரி ஆகிப்போச்சு. எழுத நேரம் ஒதுக்குனா வேலை சில கெட்டுப்போகும்னு தெரியும். இருந்தாலும் எழுதினேன். அப்றம் கொஞ்ச காலம் நிறுத்திவச்சேன். சில நேரங்கள்ல அப்படியே கை துருதுருன்னு வரும். வேணாம்டா எழுத வேணாம், புடிச்சா திரும்ப விட முடியாதுன்னு மனசு சொல்லும்.

ஆனா பாருங்க, இன்னொரு பக்கம் பல பல தலைப்புகள் மனசுக்குள்ள தோனிக்கிட்டே இருக்கும். மாசத்துக்கு ஒன்னு எழுது, வாரத்துக்கு ஒன்னு எழுது, உன் கண்ட்ரோல்ல வச்சுக்கன்னு இன்னொரு பக்கம் சொல்லும். சில நேரம் எழுத ஆரம்பிச்சு பாதியிலயே டிராப்ட்ல போட்டு வச்சுடுவேன். போட்டது போட்டதுதான் சேந்துகிட்டே இருக்கும். யாருக்குத் தெரியும் இது கூட டிராப்ட்லயே கிடந்தாலும் கிடக்கலாம். அப்படி கிடக்காம இருக்கனும்னா ஒரே வழிதான் இருக்கு. இதுக்கு மேல கொஞ்சம் கூட யோசிக்காம டக்குன்னு PUBLISH POST பட்டன க்ளி

Share/Bookmark
Read More!

காட்டுநிற நாட்கள்

கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் என வாழ்க்கையை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம் (க.மு., க.பி.) என்கிறான் நண்பனொருவன். ஏனென்றால் கல்யாணத்திற்குப் பின் பெரிய மாற்றம் இருக்குமாம். மேலும் அவன் கூறியது... ”கல்யாணத்திற்குப் பின் ஒரு ஆணின் சுதந்திரம் அனைத்தும் பறிபோய்விடும். ஆனால் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் கிடைக்கும். கல்யாணம் ஆன முதல் இரு மாதங்களுக்கு உன்னை வெளியில் பார்க்கவே முடியாது. பின் சில நேரங்களில் பார்க்கலாம். சில வருடங்கள் கழித்து நீயே என்னை போன் செய்து அழைப்பாய் - மாப்ளஎங்கயாவது பாருக்கு போய் பேசலாம்டா என்று”.

இன்னொரு நண்பன் கூறியது... ”கல்யாணத்துக்கு அப்புறம்தாண்டா நா ஜாலியா இருக்கேன். அன்னைக்கி மட்டும் இவளப் புடிக்கலன்னு சொல்லிருந்தேன்னா இவ்வளவு சந்தோசமா இருந்திருக்கவே மாட்டேன். என் பிரண்ட்ஸ் எல்லாத்தையும் அவ பிரண்ட்ஸ் மாதிரி பழகுறா. எல்லாரும் நா குடுத்துவச்சவன்னு சொல்றாங்கடா...”.

வாங்க வாங்க, வந்து கிணத்துல விழுந்துருங்க...

வாய்யா, வந்து இந்த வருத்தப்படும் வாலிபர் சங்கத்துல வந்து சேந்துக்க...

கல்யாணத்துக்கு அப்புறம்தான்யா உனக்கு வாழ்க்கையே இருக்கு, அது ஒரு சுகமான சுமை...

அப்படி இப்படின்னு அவங்கவங்க கருத்துக்களை நம்ம மேல அள்ளித் தெளிச்சுக்கிட்டே இருக்காங்க. இதுல, பிரபல பதிவர் ஒருத்தர், கல்யாணம் ஆனதுல இருந்து, குழந்தை பிறக்குற வரை என்ன நடக்கும்னு வெளாஆஆஆஆவரியா புட்டு புட்டு வச்சாரு. அப்படியே அசந்து போயிட்டேன், மனுசனுக்கு இவ்வளவு அடியா அனுபவமா?

சரி சரி, வரப்போறவ எப்படி இருக்குறாங்கிறதப் பொருத்துத்தான் நம்ம வாழ்க்கை அமையும்னு ஒரு முடிவா இருந்துட்டேன். அதுலயும் ஒருத்தன் வந்து ஒரு குண்டத்தூக்கிப் போட்டான்.”டேஏஏஏய், இவ வரும்போது என்ன மெண்டாலிட்டில இருந்தா தெரியுமா? கொஞ்சம் கூட மெச்சுரிட்டியே இல்லடா. அப்றம், கொஞ்ச கொஞ்சமா நம்ம வழிக்கு கொண்டுவந்தேன். எல்லாம் நம்ம கைலதான் மாப்ள இருக்கு...”.

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. ஆனா இவன் சொன்னதுல ஒன்னு எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. எல்லாம் நம்ம கைலதான் இருக்கு. ஆனா அவளுக்கும் கை இருக்குன்னு நெனச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. அந்த அளவுக்குப் போகாது. அப்படியே போனாலும் “போய்க்கிட்டேஏஏஏ இருடா ஏனாஓனா”ன்னு போய்கிட்டே இருப்போம்ல.

கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பதைக் கொஞ்சம் தள்ளி வைக்கலாம். கல்யாணத்திற்கு முன்பு செய்த ஒருசிலவற்றை செய்ய இயலாது எனபது நூத்துக்கு நூறு உண்மை. அப்படி என்ன செய்திருப்போம்? பெருசா ஒன்னும் இல்லை. நினைத்ததை, நினைத்த நேரத்தில் செய்திருப்போம். எப்போதும் முதுகில் ஒரு பை. அதில் சில அத்தியாவசியப் பொருட்கள். நகரத்தின் ஒரு மூலையில் இருக்கும்போது, இன்னொரு மூலையிலிருந்து அழைப்பு வரும். “நைட்டு வந்துர்றேன் மாப்ள”, என்றபடி அலுவகத்திலிருந்து வழக்கமான பாதை மாறிப்போகும் வண்டி. இரு நாட்களாக வீட்டுக்குச் வீட்டுக்கு அறைக்குச் செல்லவில்லையென்றாலும் கவலைப்படாத மனம். ஞாயிரு விடுமுறை கொண்டாடச் சென்று, செவ்வாய் மாலை அறை திரும்பும் அசால்ட்டு. இவையெல்லாம் விட்டுவிடுவேன் என்றல்ல, இவை என்னை விட்டுவிட்டுப் போய்விடும்.

இப்படி நினைத்ததைச் செய்வது என்ன பெரிய விசயமா? என்ற சந்தேகம் வரலாம். அப்படியல்ல, இப்படி நினைத்ததைச் செய்த சில காரியங்களை நினைத்தால் இப்போதும் மனது லப்டப்லப்டப் என வேகமாக அடித்துக்கொள்ளும், ஓரத்தில் புன்முறுவல் பூக்கும், இனி இப்படி செய்யக்கூடாது என்ற உறுதிகொள்ளும். அதுபோன்று என்னவெல்லாமோ செய்தோம். அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போதுதான் இப்படியொரு தலைப்பு மனதில் தோன்றியது.

காட்டுநிற நாட்கள்...

-அதி பிரதாபன்.


Share/Bookmark
Read More!

ஆறு கேள்விகள் ஏழு பதில்கள்

ஒருவனுக்கு ஒருத்தி
என்றான்
ஏனென்றேன்
ஒழுக்கமென்றான்
ஒருத்தி இறந்தால்
என்றேன்
இன்னொருத்தியென்றான்
ஒருவன் இறந்தால்
என்றேன்
ஒருத்திதானென்றான்
சமனில்லை என்றேன்
ஒழுக்கமென்றான்.

ஒருவனுக்கு ஒருத்தி
என்றாள்
ஏனென்றேன்
விருப்பமென்றாள்
ஒருத்தி வெறுத்தால்
என்றேன்
இன்னொருத்தனென்றாள்
விரும்பினாலும் கூட
சேர்த்துக்கொண்டாள்
ஒருத்தியின் அவனுக்கு
என்றேன்
அவன் விருப்பம்
என்றால்
சமநிலையோ?

சமநி(ல்)லை.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

தூக்கம் உன் கண்களை...

ஒரு நாள் இரவு, வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெகு நேரம் பேசிய பின்பு, ”காலையில் எழுதிருக்கனும், நா தூங்குறேன்”, என்றார். சரி என்று கணினியிடம் திரும்பினேன். இரண்டு பின்னூட்டங்கள் படித்திருப்பேன், திரும்பிப் பார்த்தால் நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில். கொடுத்துவைத்தவர். இப்படித்தான் சிலபேர். நினைத்தவுடன் தூங்கிவிடுவர். நமது கதையோ வேறு. இரவு 12 மணிக்குமேல் தூங்கலாமென முடிவெடுத்தபின், படுக்கையில் ஒரு அரை மணி நேரம் புரண்டபின்தான் தூக்கம் வரும். அதுவும் நல்ல காற்று வீச வேண்டும். வெளிச்சம் இருக்கக் கூடாது, போன்ற நிபந்தனைகளுடன்.

காற்று என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. சிலருக்கு மின்விசிறி இல்லாமல் தூக்கமே வராது. காற்றுதான் காரணம் என்று நினைக்க வேண்டாம். அந்த மின்விசிறியில் காற்றே வராது. கொர கொர என்று சத்தம்தான் வரும். அந்த சத்தம் நின்றுவிட்டால் உடனே விழித்துவிடுவார்கள். எனது நண்பன் சுரேஷ் நான்கு பேருடன் ஒரு வீட்டில் வசித்துவந்தான். இரவு வெகு நேரம் கழித்துதான் வீட்டிற்கு வருவான். வந்து பார்த்தால் மின்விசிறி உள்ள அறையில் மற்ற நால்வரும் படுத்துவிடுவர். அவன் மின்விசிறியில்லாத அடுத்த அறையில்தான் படுக்கவேண்டும். ஆனால் காலை மட்டும் இந்த அறைக்குள் நீட்டியிருப்பான், காற்றுக்காகவாம். எப்போதாவது மின்விசிறியை அனைத்தால் போதும், உடனே எழுந்து போடச்சொல்வான். ”ஏண்டா, அங்கதான் காத்தே வராதே, அப்புறம் எதுக்கு ஃபேன்”, என்று கேட்டால், பதில் சொல்லத்தெரியாது. மின்விசிறி ஓடினால்தான் தூக்கம் வருமென்பது அவனது நினைப்பு.

சிலருக்கு போர்த்தினால்தான் தூக்கம் வரும், குளிர்காலத்தில் மட்டுமல்ல. கொளுத்தும் வெயில்காலத்தில் கூட சிலர் போர்த்திக்கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறேன். குளிர் காலத்தில் மின்விசிறியையும் போட்டு நடுக்கத்துடன் போர்த்திக்கொண்டு தூங்குவர் சிலர். மின்விசிறியை அனைத்தால் தூக்கம் வராது. சிலருக்கோ மல்லாந்து படுத்தால்தான் தூக்கம் வரும், சிலருக்கு வலதுபுறம் சரிந்து, சிலருக்கு இடதுபுறம்.

சிலருக்கு கட்டிலில் படுத்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு தலையணை இல்லாமல் தூக்கம் வராது. சிலருக்கு வெளிச்சம் இல்லாமல் இருந்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு சப்தம் ஏதும் இருந்தால் தூக்கம் வராது. சிலருக்கு குறிப்பிட்ட சபதம் கேட்டால்தான் தூக்கம் வரும், சிலருக்கு குறிப்பிட்ட சப்தங்கள் மட்டும் தொந்தரவைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, குறட்டை சத்தம் கேட்டால் ஒன்றும் தொந்தரவில்லை. அதே நபருக்கு சுவற்றில் மாட்டியிருக்கும் நாட்காட்டி (அல்லது ஏதாவது தாள்) உரசும் சப்தம் கேட்டால் தூக்கம் வராது. சிலருக்கு தூங்குவதற்கு முன் ஒரு சிகரெட் குடித்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கோ தண்ணி. சிலருக்கு வேறு வகை போதை.

இன்னும் சில வித்தியாசமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவனுக்கு பக்கத்தில் இருப்பவர் மேல் கால் போட்டால்தான் தூக்கம் வரும். பயந்த சுபாவம் உள்ளவனென்று நினைக்கிறேன். பக்கத்தில் யாரேனும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இன்னோருவன், சின்ன வயதில் பக்கத்தில் இருப்பவரின் காதைப் பிடித்துக்கொண்டுதான் தூங்குவானாம். பல தடவைகள் இப்படி அம்மாவின் காதைப் பிடித்து கம்மலை கழட்டிவிட்டிருக்கிறான். இதேபோல சின்ன வயதில் சிலர் கை சூப்பிக்கொண்டுதான் தூங்குவர். விரலை எடுத்தால் போதும் டபக்கென்று விழித்துக்கொள்வர். எப்படித்தான் தூங்கும்போது தெரியுமோ தெரியவில்லை. இன்னோரு நண்பன் காலை(மட்டும்தான்) ஆட்டிக்கொண்டேதான் தூங்குவானாம்.

இதில் பொதுவான சில விசயங்களும் இருக்கின்றன. புதிய இடத்தில் தூக்கம் சரியாக வராது. பேருந்து பிரயானத்தில் சன்னலோரம் இருந்தால் தூக்கம் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. அதிக உடல்வலியுடன், தூக்கமே இல்லாது இருக்கும்போது தூங்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த சூழ்நிலையிலும் தூக்கம் அமோகமாக வரும்.

அதிலும் கல்யாணம் ஆன சிலரிடம் கேட்டேன். ஒருத்தருக்கு மனைவியை வயிற்றோடு கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வருமாம். இன்னொருத்தருக்கு மார்போடு அனைத்துத் தூங்கும் பழக்கமாம். இன்னொருவர் காலை தூக்கிப் போட்டுக்கொண்டுதான் படுப்பாராம். ஒன்று மட்டும் உறுதி, கல்யாணமானவர்கள் மனைவியைக் கட்டிப் பிடித்துக்கொண்டுதான் தூங்குகிறார்கள். :)

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

நிறம் மாறும் குணங்கள்

சிறு வயதில் பேய்ப்படம் பார்ப்பது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும். அன்றைய தினங்களில் (3 - 6 வகுப்புகள் படிக்கும்போது) டிவி டெக் வாடகைக்கு எடுத்துப் படம் பார்க்கும் வழக்கம் ஒன்று உண்டு. ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்தால் 4-5 கேசட்டுகளை வாங்குவார்கள். அதில் ஒரு ஆங்கில ஆக்சன் படமோ பேய்ப்படமோ கட்டாயம் இருக்கும். ஆக்சன் படம் என்றால் ஜாக்கிசான், புரூஸ்லி படம். பேய்ப்படம் என்றால் இவில் டெட். அவ்வளவுதான் அப்போதைய ஹாலிவுட் அறிவு.

யார் வீட்டிலாவது பேய்ப்படம் (இவில்டெட்) ஓடுகிறது என்றால் கட்டாயம் நமது விஜயம் அங்கு இருக்கும். வேறெதுவும் கற்பனை செய்துவிட வேண்டாம். நானும் ரவுடிதான் எனக் காட்டிக்கொள்ளவே. மற்றபடி எங்க வீட்டிலேயே அதிபயங்கர பயந்தாங்கொள்ளி நான்தான். ஏதோ ஆர்வத்தில் டிவி முன்பு அமர்ந்துவிடுவேன். பேய் கூட இன்னும் வந்திருக்காது. பின்னணி இசைக்கே பயம் வந்து தொற்றிக்கொள்ளும். விரல்களால் கண்களை மூடிக்கொள்வேன். சத்தம் குறைவாக இருக்கும்போது, மெதுவாக விரல்களை விலக்கி, சிறு இடுக்கு வழியே பார்ப்பேன். சத்தம் கொஞ்சம் கூடினால் போதும் விரல்களையும் கண்களையும் சேர்த்து மூடிக்கொள்வேன். பயங்கர சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்னும் இரு கைகள் இருந்தால் நலம் எனத் தோன்றும்.

15 நிமிடத்தில் மனம் திக் திக் என அடிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் ஒரு நிமிடம் கூட பார்த்திருக்க மாட்டேன். மெதுவாகத் திரும்பி பக்கத்திலிருக்கும் (எனது வயதுடைய) மணியைப் பார்ப்பேன். அவன் ஆ என்று வாயை (கண்களையும்தான்) பிளந்து பார்த்துக்கொண்டிருப்பான். ஆச்சர்யமாய் இருக்கும். நம்மால் ஏன் முடியவில்லை? அடுத்த 5 நிமிடத்தில் வீட்டிலிருந்து ஏதும் அழைப்பு வருமா என மனம் ஏங்கும். வராத பட்சத்தில், அடுத்த 2வது நிமிடத்தில் பிறந்திருக்காத காரணத்திற்காக வீட்டிலிருப்பேன்.

அதோடு முடிந்தால் பரவாயில்லை. சாதாரணமாகவே இருட்டு என்றால் பயம். அதுவும் பேய்ப்படம் பார்த்த (கேட்ட) அடுத்த ஒரு வாரத்திற்கு மிகவும் பயமாய் இருக்கும். கொல்லைப்புறத்தில் தனியே ஒன்னுக்கு போகக்கூட பயம். அம்மா வந்து பின்னால் நின்றால்தான் வரும். அப்பப்போ திரும்பி அம்மா இருக்காங்களான்னு பார்ப்பதும் உண்டு. “ஆம்பளப் புள்ள, இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்கியே!”, என்று அம்மா திட்டுவார்கள். அப்படியே நாட்கள் ஓடிற்று.

இன்று நிலைமையே தலைகீழ். வீட்டில் பேய்ப்படம் தனியே. தூக்கம் தனியே. வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது என்று இரவு விளக்கு கூட போடுவது கிடையாது. இப்போது அதே கொல்லைபுறத்தில் அம்ம குரல் கேட்கிறது, “லைட்டப் போட்டுட்டு போனா என்னடா?”.

நினைத்துக்கொள்வேன். சிறு வயதில் சிலருக்கு பயம் இருக்கும். வளர வளர சரியாகிவிடுமென்று, சென்ற மாதம் வரை.

சென்ற மாதம் ஒரு நாள், தங்கை அழைத்தாள்..
”என் கூட அந்த ரூமுக்கு வாயேன்”
”எதுக்கு?”
”தண்ணி குடிக்கனும்”, போனேன்.
”??? அதுக்கு எதுக்கு நான்?”
”இருட்டா இருக்குல்ல, பயமா இருக்கு”
எனக்கு இருந்த அதே பயம், கேட்டேன்
”பேய்ப்படமெல்லாம் பாப்பியா?”
”பாப்பேனே”
”எப்படிப் பாப்ப, பயமா இருக்காதா?”
”இருக்கும். கைய வச்சு இப்படி மறச்சிக்கிட்டு பாப்பேன்.”

இன்னும் சில கேள்விகள். அப்படியே ஒத்துப்போகின்றன.
”சின்ன வயசுலயும் இதே மாதிரிதானா?”
”ஆமா”
”மாறலையா?”
”இல்லையே, அப்படியேதான் இருக்கு!”
ஓஹோ, அப்போ சிலருக்கு குணம் மாறாது போலருக்கு.

இன்னொரு நாள், அதே தங்கை. மதிய உணவு நேரம்...
”அண்ணா, இத எடுத்துக்க”
”வேணாம்”
”ஏன், நான் எது குட்த்தாலும் வாங்கவே மாட்டேங்குற?”
”அட. உன்கிட்ட மட்டும் இல்ல. யார் தட்டுலயும் கை வைக்க மாட்டேன். சின்ன வயசுல இருந்தே இப்படித்தான்.”

இதுவும் என்னை பல நேரங்களில் யோசிகக் வைக்கும். சிறு வயதில் எனது சாப்பாட்டில் யாரும் கை வைப்பது பிடிக்காது. அப்படி வைத்தால் சாப்பிட மாட்டேன். யாரும் எனக்கு ஊட்டிவிட்டதாய் ஞாபகமே இல்லை. இப்போது மற்றவர்கள் எனது சாப்பாட்டை எடுத்தால் ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால், இன்னும் அடுத்தவர் சாப்பிடுவதை எடுத்து சாப்பிடத் தயங்குகிறேன். மற்ற நண்பர்கள் அடுத்தவர் உணவை எடுத்துச் சாப்பிடும்போதெல்லாம் நினைப்பேன், நமக்கு ஏன் இது கூச்சமாகவே இருக்கிறது என்று.


”நான் கூட சின்ன வயசுல அப்படித்தான் இருந்தேன். ஆனா, இப்போ மாறிட்டேன். எப்படின்னு தெரியல!”, என்றாள் அவள்.

எதையும் முடிச்சுப் போட்டு இதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை. எனக்கு மாறிய குணம் அவளுக்கு ஏன் மாறவில்லை? அவளுக்கு மாறுவது எனக்கு ஏன் மாறவில்லை? குணம் மாறுதலின் குணம் பாலினம் சார்ந்ததா? சூழ்நிலை சார்ந்ததா? மரபணு சார்ந்ததா? என்று பார்த்தால், மூன்றும்தான் என்றே தோன்றுகிறது. இது சரியெனில், இவ்வுலகில் எவரும் நிரந்தரமான நல்லவருமில்லை, நிரந்தரமான கெட்டவருமில்லை.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!