Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

டிவி வாங்குவது எப்படி

ஊட்டி நண்பர் ஏற்கனவே சொல்லியிருந்தார். ஊரிலிருந்து ஒரு "கலைஞர் டிவி"யைக் கொடுத்துவிட்டிருக்கிறார்கள், நண்பர் ஒருவரிடம் இருக்கிறது, சென்று வாங்கவேண்டும் என்று. இரண்டு வாரத்திற்கு முன்னால் கிளம்பலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. வெள்ளி இரவு மறுநாள் போகலாம் என பேசிக்கொண்டோம். மறுநாள் காலை கல்லூரியில் படித்த நண்பனின் நிச்சயதார்த்தம். அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தேன். மழை வேறு. வீட்டிற்கு கிளம்பவும் மழை விடவும் சரியாக இருந்தது. வழக்கம்போல மழைவிட்ட டிராபிக். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

அப்போதுதான் நண்பர் போன் செய்தார், இப்போது போகலாமா என்று. டிராபிக் அதிகமாக இருக்கிறது, இன்று வேண்டாம், நாளை போகலாம் என்றேன். என்ன நினைத்தாரோ, மாலை அவரே கிளம்பிவிட்டார், பேருந்தில் போகலாமென்று. சரி, நானே வருகிறேன் என்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். வழக்கம்போல டிராபிக். இங்கு, எப்போது எப்படி டிராபிக் இருக்குமென்று கனிக்கவே முடியாது. பீக் அவர் என்று நினைத்து வரும்போது குறைவாக இருக்கும். சில நேரம் இரவு பதினோரு மணிக்கு முட்டிக்கொண்டு நிற்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த ஹைபர் சிட்டி சிக்னலைக் கடப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.



Share/Bookmark
Read More!

கடந்த வெள்ளிக்கிழமை

இந்த வெள்ளியும் வழக்கம்போல விடிந்தது. முந்தைய நாள் மாலை மழை பெய்தபடியால் அன்றும் பெய்யும் என்றே தோன்றியது. அதனால் அன்று காரில் கிளம்பினேன். அதற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை, உடன் பணிபுரியும் தோழி ஒருவருக்குப் பிறந்தநாள் என்று மதிய உணவுக்கு வெளியில் செல்லவேண்டியது இருந்தது. மூன்று மணி நேரம் காலி. வந்த பின்னும் அங்கே இங்கே என்று சிலருக்கு உதவி செய்தபடியால், என்னுடைய வேலைகளை முடிக்க இயலவில்லை. அதனால் வெள்ளிக்கிழமை அந்த வேலைகளையும் சேர்த்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் என்னை புகுத்திக்கொண்டேன்.

அந்த முந்தைய நாள் மதிய உணவு பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். எப்படித்தான் அப்படித் திண்கிறார்களோ? என்ன முறையோ அது? ஒன்றும் புரியவில்லை. ஸ்டார்ட்டர் என்று சொல்லி வகை வகையாக அடுக்கித் திண்கிறார்கள். இதில் முதலில் ஒரு சூப்பும் கடைசியில் ஒரு மேங்கோ லஸ்ஸியும் அடக்கம். நானும் சூப்பில்தான் ஆரம்பித்தேன், ஆனால் லஸ்ஸி வரைக்கும் வர முடியவில்லை. அதற்குள் வயிற்றுக்குள் இடம் இல்லை. அதன் பிறகுதான் மெயின் கோர்சாம். முடியல. யாரோ ஆர்டர் செய்த சிக்கன் பிரைடு ரைசில் கொஞ்சம் சாப்பிட்டேன். ஆர்டர் செய்யும்போதே சொன்னேன், வீணாக்கினால் எனக்குப் பிடிக்காது, குறைவாகச் சொல்லுங்கள் என்று. அப்படி இருந்தும் ஒரு புலாவ் அப்படியே இருந்தது.

பக்கத்தில் இருந்த கல்கத்தாக்காரனிடம் சொன்னேன், நான் இப்படியெல்லாம் சாப்பிடுவது இல்லை, எங்கள் ஊரில் நேரடியாக மெயின் கோர்ஸ்தான். சில நேரங்களில் இந்த ஸ்டாட்டர்களைச் சாப்பிடுவதும் உண்டு, ஆனால் அதை நாங்கள் சைடு டிஸ் என்று சொல்லுவோம் என்றேன். பயலுக்குப் புரிந்துவிட்டது. மேலும் கேட்டேன், இது என்ன வழக்கம் என்று, அவனுக்கும் தெரியவில்லை எப்படி இதுபோன்று சாப்பிடப் பழகினானென்று. ஆனால், கொஞ்சம் சரக்கு உள்ளே சென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த உணவகத்தில் ஆல்ககால் அனுமதி கிடையாது.



Share/Bookmark
Read More!

ஒரு வழியா ஊருக்குப் போனேன்

வலையுலகில் மேய்ந்துகொண்டிருக்கும்போது சில நேரங்களில் ஓரங்களில் வரும் கிளப் மகிந்த்ரா அல்லது வேறு ஏதாவது டூர் விளம்பரத்தைப் பார்ப்பேன். நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைவதில்லை என எண்ணியதில்லை. இப்போதுதான் புரிகிறது. வீட்டிலிருப்பவர்கள்தான் வெளியே செல்ல திட்டமிட வசதியாய் இருக்கும். வெளியே இருக்கும் நமக்கு விடுமுறை கிடைத்தால் வீட்டிற்குச் செல்லத்தான் திட்டமிடத்தோன்றுகிறது. வீட்டைவிட்டு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன, திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன, ஆனால் நான் மாறவேயில்லை. இப்போதும் விடுமுறை வந்தால் பெற்றோர் இருக்கும் இடத்திற்குத்தான் செல்லத்தோன்றுகிறது.

சென்னையில் ஐந்து வருடங்களுக்கு மேல் குப்பை கொட்டியாகிவிட்டது. இப்போது பெஙளூரிலிருந்து. சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வது எவ்வளவு சுலபமென்று இப்போதுதான் தெரிகிறது. இங்கு வந்தும் இரு முறை சென்று வந்துவிட்டேன். ஆனால், இந்த முறை பல சிரமங்கங்களுக்கிடையே செல்ல நேர்ந்தது.



Share/Bookmark
Read More!

அலுப்பே நெருங்காதே

முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின், அதை ஓட்டுவது எப்படி இருந்தது? முதன் முதலில் வாங்கிய நோக்கியா 1100 தொலைத்த தூக்கங்கள் எத்தனை? முதன் முதலில் குடித்த பாதி பாட்டில் பீர், கால் டம்ளர் ரம் - இவைகள் தந்த போதை இப்போது எதிலும் கிடைக்காதது ஏன்? பள்ளி நண்பர்களுடனான முதல் சுற்றுலா, கல்லூரி நண்பர்களுடனான கடைசி சுற்றுலா ஏக்கம் தருவது ஏன்? முதல் பணியில் வெற்றிகரமாக செய்த சிறு வேலை தந்த மகிழ்ச்சி எங்கே? முதல் பதிவு, முதல் பின்னூட்டம் தந்த கிளுகிளுப்பு இப்போது எப்படிக் கிடைக்கும்?

எந்த ஒரு விசயத்திலும், முதலில் இருக்கும் சுவாரஸ்யம் கடைசி வரை இருப்பதில்லை. எனது வீட்டில் மொத்தம் நான்கு அறைகள். எனது ஒரு வயது குழந்தை, நாள் முழுதும் அதற்குள்தான் சுற்றிச் சுற்றி வருகிறாள். திங்கள் முதல் வெள்ளி வரை அந்த அறைகள்தான். நடக்கிறாள், ஓடுகிறாள், விழுகிறாள், அழுகிறாள், பாடல் கேட்கிறாள், பார்க்கிறாள், என்னுடன் விளையாடுகிறாள், சிரிக்கிறாள். சில நேரங்களில், ஒரு பொருளை கைகளில் வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பல கோணங்களில் பார்க்கிறாள். வீட்டுச் சாவியைக் கொடுத்தால், ஒரு மணி நேரம் வரை அந்த ஆராய்ச்சி நடக்கும். சிறு வயதில் நானும் இப்படித்தான் ஒரே இடத்தில் உட்கார்ந்து அலுக்காமல் சிறு செயல்களைச் செய்துகொண்டு இருந்திருப்பேன், என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.



Share/Bookmark
Read More!

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை பதிவு எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. ஏன் எழுதுவது நின்று போனது என்று யோசித்துப் பார்க்கிறேன், சரியாகத் தெரியவில்லை, அதைப் பற்றி மேலும் யோசித்து அறிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு எழுதுவது சிறிது குறைந்தது. குழந்தை பிறந்த பிறகு படிப்பதும் குறைந்தது. குழந்தையைப் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். வெர்னிகா. ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்வதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும், அவள் நடந்து கொள்ளும் விதம், புதிது புதிதாக அவள் பார்ப்பது, கற்றுக்கொள்வது, பிரதிபலிப்பது என்று ரசித்துக்கொண்டே இருக்கலாம். இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டாள். காலையில் எங்காவது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பரப்பி வைப்பதுதான் இப்போது பிரதான வேலை. பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. திரும்பவும் எடுத்து அடுக்கி வைப்பது நமது வேலைகளில் ஒன்றாகிவிட்டது. சென்ற வாரம் வேளாங்கண்ணி சென்று மொட்டை போட்டு காதி குத்தி வந்தோம்.

வேளாங்கண்ணி இப்போது எனது பார்வையில் புதிதாகத் தெரிகிறது. மற்றவர்கள், அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள். ஒருவேளை எனக்கு சில அகக் கண்கள் திறந்திருக்கலாம். கடைகளில் எல்லாம் அதிக விலை. ஒரு தண்ணீர் பாக்கட் 3 ரூபாய்க்கு பேருந்து நிலையம் அருகில் வாங்கினேன். விலைக்குத் தகுந்த தரமான உணவை எங்கும் பார்க்கவில்லை. பேருந்து நிலையத்தின் உள்ளேயே டாஸ்மாக். பயணிகள் காத்திருக்கும் இடம்தான் பாராக இருக்கிறது. கோவிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டேபோகலாம். சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு அரசு அலுவலகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இதைக் கவனிக்கவேண்டிய பாதிரியார்கள் என்ன சேவை செய்கிறார்களோ தெரியவில்லை. வேளாங்கண்ணி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதினால் நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்கள்தான் அதிகமாக இருக்கும். புனிதப் பயணம் என்று சென்று மனத்தாங்களோடுதான் திரும்பி வரவேண்டியிருக்கிறது.

சமீபத்தில் பார்த்த படங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் கலகலப்பு திரையரங்கில் பார்த்தேன். ஓகே ஓகே ஆரம்பம் முதல் கடைசி வரை தொய்வு இல்லாமல் சென்றது. சந்தானம்தான் காரணம். கலகலப்பு ஆரம்பத்தில் தொங்கியது. ஆனால் பின்பாதி சேர்த்து வைத்து சமன் செய்தது. ஆனால் சந்தானம் ஒருவரே காரணம் என்று சொல்ல முடியாது. இரண்டையும் ஒப்பிட்டால் கலகலப்பில்தான் வயிறு வலிக்க சிரித்தேன். ஆனால் நல்ல படம் என்று பார்த்தால் அது ஓகேஓகேதான்.

அடுத்து சில ஆங்கிலப் படங்கள் பற்றி. கடைசியாகப் பார்த்த படங்கள்: Avengers, Safe House மற்றும்  Prometheus. Avengers பற்றிச் சொல்லவே வேண்டாம், அட்டகாசம். ஆனால் அது பற்றிய கருந்தேள் கண்ணாயிரம் எழுதிய தொடர் பதிவுகள் அதை விட அட்டகாசம். Safe House: சமீபத்தில் இதைப் போன்ற மிகசிறந்த விருவிருப்பான திரைக்கதை மிகுந்த படத்தைப் பார்த்ததே இல்லை என்ற உணர்வைக் கொடுத்த படம். The Bourne வகையறா என்றாலும் புதிதாக இருந்தது. Prometheus பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. சுத்த போர். ஒரு வேளை தமிழில் பாத்ததால் அப்படி இருக்கலாம். ஆங்கிலத்தில் மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்.

மேலும் சில படங்கள் பற்றி: Contraband, இதில் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் தொய்வில்லாத படம். The Divide என்ற படம் ஒன்று பாத்தேன். தூக்கத்தைக் கெடுத்த படம். Blindness வகையறா... உலகம் அழிந்த நிலை. தப்பித்த சில பேரின் மன நிலைகளைப் பிரதிபலிக்கும் படம். The Awakening என்று ஒரு படம். The Sixth Sense வகைப் படம். கடைசி இடத்தில் அவிழ்க்கப்படும் முடிச்சு, திரும்பவும் படத்தை ஆரம்பத்தில் இருந்து நம்மைப் பார்க்க வைக்கும், நன்றாகத்தான் இருந்தது.

என்னதான், நா ரொம்ப பிசி, என்று ஒப்புக்குச் சொன்னாலும், சிலருடைய பதிவுகளை எப்போதுமே படிக்கத் தவறுவது இல்லை. கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன் மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் ஆகியோரது பதிவுகளை எப்போதுமே படிப்பதுண்டு. கூகுள் பிளஸ் ஒரு நாளைக்கு சில வேளைகள் சென்று நாட்டு நடப்பதைத் தெரிந்துகொள்கிறேன். ஆனால் எதையும் எழுதுவது இல்லை, எதற்கும் பதிலிடுவதும் இல்லை. எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்!

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!

(2) வீட்டு புரோக்கர்

வீடு தேடுதல் (1) ன் தொடர்ச்சி...

அடுத்து புரோக்கர்கள். இவர்களை நான் விரும்புவதே இல்லை. நான் பார்த்த பல புரோக்கர்களில் இருவரைத்தான் மனிதர்களாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவர்கள் வாயைத் திறந்தால் வார்த்தைக்குப் பதிலாக பொய்தான் வந்து விழும். அதிலும் ஒரு மாத வாடகையை கமிசனாகக் கேட்பார்கள். அதற்குத் தகுந்த உழைப்பு இருக்கிறதா என்றால், இல்லை. மனதிற்குப் பிடித்தமான சரியான வீட்டைக் காண்பித்து, நல்ல விலைக்கு முடித்துக் கொடுத்தால் இவர்கள் கேட்கும் விலை நியாயமானதுதான். ஆனால் இவர்கள் செய்வதோ தலைகீழ். நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டவும் மாட்டார்கள், விலையையும் நன்றாக ஏற்றிவிடுவார்கள். பின் எதற்குத்தான் இந்த பெருந்தொகைக் கமிசனோ தெரியவில்லை.
இவர்களிடம் முதல் பிரச்சனை, நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டமாட்டார்கள். பார்க்கிங், தண்ணி வசதி, எத்தனை அறைகள், அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என அரை மணி நேரம் மூச்சு விடாமல் சொல்லியிருப்போம். இருந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அவர்கள் கையில் இருக்கும் அனைத்து வீட்டிற்கும் ஊர்வலம் கூட்டிச் செல்வார்கள். நாமோ ஆபீஸில் பெர்மிசனோ, லீவோ போட்டு வந்திருப்போம். தேவையில்லாமல் நமது நேரத்தை வீணடிப்பார்கள். இரண்டாவது வீட்டுக்குப் போன பின் நமக்கே கண்ணைக் கட்டும். ”நான் சொன்ன மாதிரி வீடு இருக்கா இல்லையா?” என்று கொஞ்சம் முகம் கடுப்பாகும் நமக்கு. “அடுத்த வீடு கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் சார்”, என்று மனசாட்சியே இல்லாமல், திரும்பவும் மொக்கையாக ஒரு வீட்டைக் காட்டுவார் பாருங்கள், அப்படியே அந்த வீட்டு நிலையில் முட்டிக்கலாம் போலத் தோனும்.

சிலர் இதற்குக் கூட கமிசன் கேட்பார்கள். இவ்வளவுக்கும் நமது வண்டியில்தான் வந்திருப்பார். முதலில், சொந்தமாக ஒரு வண்டியில்லாமல் நமது வண்டியில் தொற்றிக்கொள்ளும் புரோக்கரை நம்பவே வேண்டாம். பின், முதலிலேயே கண்டிப்பாக சொல்லிவிடனும், லீவு போட்டுட்டு வரேன், நான் சொன்ன மாதிரி வீடு காட்டலைனா நீதான் என் சம்பளத்தைத் தரனும் என்று. அவ்வாறு தர மாட்டார் என்றாலும் தேவையில்லாத அலைச்சலைத் தவிர்க்கலாம். வீடு முடிந்தால்தான் கமிசன் என்பதையும் முதலிலேயே பேசிவிடவேண்டும். இதெல்லாம் சரிவராது சார், வேற ஆளப் பாத்துக்க சார் என்றெல்லாம் படம் காட்டுவார்கள். யோசிக்கவேண்டாம், தாராளமாக வேறு ஆளைப் பார்க்கலாம். அந்த ஏரியாவில் யாரைப் பார்த்தாலும் இவரும் கூட வருவார்.

மேலும் கமிசன் தொகை ஒரு மாத வாடகை என வழக்கமாகச் சொல்வார்கள். அதை நாம் குறைத்துப் பேசலாம். சிலர் மட்டுமே அதற்கு ஒத்துப்போவார்கள். சிலர் குழுவாக அமைந்து வீடுகளைப் பார்த்துவைத்துக்கொண்டு நமக்குக் காட்டுவார்கள். சில புரோக்கர்கள் இப்படிக் குழுவாகச் செயல்படாமல் தனித்து இருப்பர். இந்த மாதிரி இருப்பவர்கள் விலையைக் குறைத்துக்கொள்வார்கள். இவர்கள் நேர்மையாகவும்ம், சரியான வீட்டைக் காட்டும் வாய்ப்பும் அதிகம்.
பெரும்பாலான புரோக்கர்கள் பகுதி நேரமாக இதைச் செய்வார்கள். சிலர் முழு நேரமாகச் செய்தாலும் அலுவலகம் என்றெல்லாம் எதுவும் இருக்காது. ஆனால், சில ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர்கள் அவர்களுக்கென ஒரு அலுவலகம் வைத்திருப்பார்கள். இடம், வீடு வாங்குவது மற்றும் விற்பது முதன்மையாக இருந்தாலும் வாடகை வீடு பிடித்துக் கொடுப்பதும் சிறிய அளவில் செய்வார்கள். நான் பார்த்தவரையில் இவர்களை நம்பலாம். தேவைக்கேற்ற வீட்டைக் காட்டுவார்கள், கமிசனும் பேசிக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் யாரையாவது கைகாட்டி அனுப்பினால் நம்ப இயலாது.

பெரும்பாலும் புரோக்கர்களைத் தவிர்த்துவிடவேண்டும். முந்தைய பதிவில் சொன்ன வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடித்தாலே வீடு கிடைத்துவிடும். அப்படிக் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவசரமான சூழ்நிலையில் மட்டுமே புரோக்கர்களை நாடிச் செல்லலாம்.

இப்போது நாம் பார்க்கும் வீடுகளில் ஒன்று பிடித்துப் போகிறது. அதன்பின்பு என்னவெல்லாம் கவனிக்கவேண்டும் என்பதை அடுத்து பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

மதுரை அனுபவங்கள்

சென்ற வாரம் மதுரைக்குச் சென்றிருந்தேன். பெரிதாக மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. முன்பு, 2006ல் ஒரு ஆறு மாதங்கள் அண்ணாநகரில் இருக்கும் சுகுணா ஸ்டாப்புக்கு அருகில் தங்கியிருந்தேன். ஓட்டல் சாப்பாடாக இருந்தாலும், அங்கிருந்த நாட்கள் சுக அனுபவமாக இருந்தது. அவ்வளவு அருமையான ஓட்டல் சாப்பாடு, சென்னை வந்த பிறகுதான் தெரிகிறது. இப்போது ஆரப்பாளையம் அருகே உள்ள, தங்கமணியின் அண்ணன் ஒருவருடைய கல்யாணம். அவர் உறவினர்கள் வீட்டில் தங்கச் சென்றுவிட்டார், எனக்கு அவர்களிடத்தில் அவ்வளவு பழக்கம் இல்லாததால் ஆரப்பாளையம் அருகிலிருக்கும் லாட்ஜ் ஒன்றில் தங்கினேன்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலிருந்தது அந்த சிவபாக்யா லாட்ஜ். அந்த சுற்று வட்டாரத்தில் அது ஒன்றுதான் இருக்கிறது போல! மிக மிக அதிக விலை, மிகச் சிறிய அறைகள். சுத்தம், கேட்டால் கூடக் கிடைக்கவில்லை. மதுரை மக்கள் ரொம்ப நல்லவர்கள் என்று எல்லோரிடமும் சொல்வேன், அங்கேதான் இதுபோன்ற வியாபாரிகளும் இருக்கிறார்கள். ரூம் சர்வீஸ் பரவாயில்லை. அவ்வப்போது எதுவும் வேண்டுமா என அவர்களே வந்து வந்து கேட்டுக்கொள்கிறார்கள். எது சொன்னாலும் உடனுக்குடன் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

அடுத்து மதுரை ரோடு. பாதாளச் சாக்கடைக்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள். இதில் அதிக மழை வேறு. எங்கும் சகதி, குண்டு, குழி. நடக்கவும் சிரமம், வண்டியில் போகவும் சிரமம். ஆனால் எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லவே இல்லை. இத்தனை வருடங்களுக்குப் பின்பும் அதே டிராபிக் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. மதுரை வளரவே இல்லையா? வரும்போது கோரிப்பாளையம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் நெரிசல். ஆரப்பாளையம் பக்கம் அவ்வளவாக இல்லை. பல இடங்களில் சிக்னல் எரியவே இல்லை. ஆனாலும் முட்டல் முனகல் இல்லாமல் மக்கள் சென்றார்கள். சென்னையைப் போல வலதுபுறம் ஏறிச் சென்று எதிரே வருபவரையும் மறித்து யாரையும் போக விடாமல் செய்யும் போக்கு இங்கு இல்லை.
அடுத்து சரக்கு. மதுரையில் ஒரு கடையில் கூட ஒரிஜினல் சரக்கு இல்லை போலிருக்கிறது. பீர் எல்லாமே டூப்ளிகேட். ஏதோ புளித்தண்ணீரைக் குடித்தது போல இருக்கிறது. இதற்கு சென்னை டூப்ளிகேட் சரக்கு எவ்வளவோ பரவாயில்லை, குடிக்கும் அளவுக்காவது இருக்கும். இங்கு மிகவும் மோசம், வேறு ஏதேனும் தொழிற்சாலை உற்பத்தி போலிருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம். ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் பார்கள் கண்டு அசந்துவிட்டேன். அவ்வளவு சுத்தம். லாட்ஜில் இருந்த அறையை விட இங்கு சுத்தம் அதிகம் என்றால் பாருங்கள். ஏசி பார் அருமை. உள்ளே புகை பிடிக்கக் கூடாது. அதற்காக, ஏசி அறை கதவுக்கு வெளியே, வரிசையாக நாற்காலிகளும், ஒவ்வொன்றிற்கும் முன்னால் ஒரு ஸ்டூலும் போடப்பட்டிருக்கின்றன. ஒவ்வோரு ஸ்டூலிலும் ஒரு ஆஷ் ட்ரே, ஏசி அறையிலிருந்து வந்து அமர்ந்து அடிப்பதற்காக. அருமை அருமை. நல்ல கவனிப்பு, சரக்கைத் தவிர அனைத்தும் அருமை.

குரு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வெளியிலிருந்து பார்க்க பழைய தியேட்டர் போலிருந்தது. நார்நியா 3டியில், டிக்கட் விலை 80, 100 என்றார்கள். சென்னை கமலா தியேட்டரில் கூட இந்த அளவு விலை இல்லை. இங்கு தாறுமாறாக இருப்பது கண்டு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் டிக்கட் கொடுக்கும் கருவியெல்லாம் நன்றாக இருந்தது, அதிலிருந்து வந்த டிக்கட்டும் சதயம், கமலா டிக்கட் போன்ற தாளில், அதே போல, அட, சீட் நம்பர் கூட இருந்தது. அதையெல்லாம் யார் கண்டுகொள்ளப் போகிறார் என்று உள்ளே சென்றால் ஆச்சர்யம். அருமையான அரங்க சீரமைப்பு. சிறப்பான சீட்கள், சீட்டில் இருக்கும் எண் முறைப்படி அமரவைக்கப்படுகிறார்கள். அருமையான ஏசி. சென்று உட்கார்ந்தவுடன் மெனுவுடன் நம்மை அனுகும் வாலிபர்கள். ஆர்டர் செய்தால் நமது சீட்டுக்கே சாப்ப்பிடும் பொருட்கள் வந்து சேரும். சென்னையை விடக் கூடுதலான வசதியாகத் தெரிந்தது எனக்கு இது. டிஜிட்டல் அது இது என்று படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரே விளம்பரம். பரவாயில்லை, நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அரங்கின் நீளம் அதிகமாக இருந்ததால் படம்தான் மிக மிகச் சிறியதாகத் தெரிந்ததாகத் தோன்றியது. குரு திரையரங்கம் இப்போது சென்னை திரையரங்குகள் தரத்தில் இருப்பது குறித்து மகிழ்ச்சி.

மதுரையில் நான் கண்ட மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த விசயம், கண்வலி. பாதிப்பேர் கண்கள் ரத்தச் சிவப்பாக இருக்கின்றன, ரத்தசரித்திரம் பட விளம்பரத்திற்காக யாரோ செய்த சதியோ எனத் தோன்றியது, அல்லது அனைவரும் அதைப் பார்த்திருக்கலாம். பயந்து ஒதுங்கினால் சாதாரணமாகச் சொல்கிறார்கள், “அதெல்லாம் சரியாப்போச்சு, கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும், பயப்படாதீங்க”.

மதுரையிலிருந்து சிவகாசி சென்றேன் பேருந்தில். அது ஒரு தனியார் பேருந்து. ஏறி, மூன்று பேர் இருக்கும் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன். இன்னொரு புறம் ஒருவர் வந்து அமர்ந்தார். கண்ணில் ஒரு கூலிங்கிலாஸ். அப்போதே உசாராயிருக்கவேண்டும். ஓரளவு பேருந்து நிறைந்துகொண்டிருந்தது. எங்களது இருக்கைக்கு ஒருவர் வந்து, ஓரத்தில் இருந்தவரிடம் கேட்டார்.
“கொஞ்சம் தள்ளி உக்காருங்க”
ஓரத்திலிருந்தவர் கண்ணாடியைக் கழற்றி,
“கண்ணுவலி எனக்கு, வேற இடத்துக ஒக்காந்துக்குறிங்களா”
“எனக்கும் கண்ணுவலிதான், பராவால்ல தள்ளுங்க”
நான்,
“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”.

மதுரையில் திருமணத்தைப் பதிவு செய்யவென இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தேன். வேலை நடக்கவே இல்லை. அதைப் பற்றிய தனி சிறப்புப் பதிவு அடுத்து வரும்.

குறிப்பு: முன்பு போல படங்களுடன் எழுத முடியவில்லை. சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதையாவது வித்தியாசமாகப் பார்த்து, படம் எடுக்க மொபைலை எடுத்தாலே நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார் தங்கமணி. அதனால் மதுரையில் எடுத்த ஏதோ சில படங்களி இணைத்துள்ளேன்.
படம் எடுக்க முடியவில்லையே என மிகவும் வருந்திய விசயம். தலதளபதி போல “கேப்டனின் விஜய்” என்ற டீக்கடை பெயர்ப் பலகை.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

வீடு தேடுதல் (1)

ஏதோ ஒரு காரணத்துக்காக வீடு மாத்தனும்னு முடிவு பண்ணிருவோம். அடுத்து வீடு தேடனும். எப்படியெல்லாம் தேடலாம்? பேப்பர் விளம்பரம், இணையம், தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தல் மற்றும் புரோக்கர்கள்.

வழக்கமான பேப்பர்களில் வாடகை வீடு பற்றிய விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளுக்கு ஃப்ரீ ஆட்ஸ்தான்(Free Ads) சரி. சென்னையில் வியாழன்தோறும் கடைகளில் கிடைக்கும். இப்போது இங்கும் புரோக்கர்கள் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். விளம்பரம் பார்த்து போன் செய்தால் பத்துக்கு எட்டு புரோக்கர்கள் கொடுத்த விளம்பரமாகத்தான் இருக்கின்றன. அதனாலென்ன என்கிறீர்களா? புரோக்கர் மூலம் வரும் பிரச்சனைகள் அடுத்து பார்க்கலாம். முடிந்தவரை வீட்டு உரிமையாளர் கொடுத்த விளம்பரமாகப் பார்த்து போன் செய்யவேண்டும், விளம்பரத்திலேயே போட்டிருக்கும் புரோக்கர்கள் வேண்டாமென்று.

முதலில் நமக்கு தேவையான ஏரியாவில் வந்திருக்கும் விளம்பரங்கள் அனைத்தையும் அலச வேண்டும். ஏதாவது விளம்பரம் நமக்குத் தோதாக இருக்கும்பட்சத்தில் அதை பேனா கொண்டு வட்டமிட்டுக்கொண்டே வரவேண்டும். தேர்ந்தெடுத்தல் முடிந்த பின் ஒவ்வொருவருக்காக போன் செய்ய வேண்டும். பேசும்போது நமது பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துவிட்டு, அவர் கொடுத்த விளம்பரம் பற்றிச் சொல்லிப் பேச ஆரம்பிப்பது நல்லது. சிலர் பல இடங்களில் விளம்பரம் கொடுத்திருப்பர். சிலர் வீட்டு போன் நம்பரைக் கொடுத்திருப்பார்கள், வீட்டில் விளம்பரம் கொடுத்ததே தெரியாத மனைவியோ (அல்லது கணவனோ) போன் எடுத்தால், தலையும் புரியாமல் காலும் புரியாமல் ஒரு கால் வீணாகும் வாய்ப்பு உள்ளது.
சரியான புரிதலுக்குப் பின் வீட்டைப் பற்றிப் பேச ஆரம்க்கலாம். வீடு காலியாக இருக்கும்பட்சத்தில் நமது தேவைகள் அனைத்தையும் சொல்லி அதற்கேற்றார்போல வீடு இருக்கிறதா என உறுதி செய்துகொண்டு பின் நேரில் சென்று பார்க்க நேரம் கேட்கவேண்டும். சில நேரம் போனிலேயே தெரிந்துவிடும் நமக்கு இந்த வீடு ஒத்துவராது என்று. உதாரணத்திற்கு, பார்க்கிங் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீட்டிற்கு வெளியே தெருவில்தான் விடவேண்டியது இருக்கும். தண்ணி வசதி பற்றி கேட்டால், காலை மாலை வரும் என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீடு இரண்டாம் தளத்திலும் தண்ணீர் குழாய் முதல் தளத்திலும் இருக்கும். தண்ணீர் காலை 5 மணிக்கு வரும். ஆகவே எல்லாவற்றையும் தெளிவாகக் கேட்கவேண்டும்.

தேவைகள் சரியாக இருந்தால் நேரில் சென்று பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஒத்துவரவில்லையென்றால் வட்டம் போடு வைத்திருப்பதை அடித்து வைத்துக்கொள்ளவேண்டும். திரும்பத் திரும்ப ஒரே ஆளுக்கு போன் செய்வதைத் தவிர்க்கலாம். ஒரே விளம்பரம் வாரா வாரம் வரும். அதையும் கவனிக்க வேண்டும். சில நேரங்களில் முதலிலேயே சொல்லி விடுவார்கள், காலி இல்லை என்று. அப்போதும் அடித்துக்கொள்ளவேண்டும். நல்ல வீடு உடனேயே போய்விடும், அதற்கு எனது நண்பர்கள் போன்ற ஆட்கள்தான் காரணம்.

எனது நண்பர் ஒருவர் வீடு தேடும் அனுபவம் பற்றி சொன்னார். வியாழன் காலை 6 மணிக்கு பேப்பருடன் அந்த ஏரியாவுக்குச் சென்றுவிடுவார். இந்த மாதிரி ஓனர் கொடுத்த விளம்பரங்களுக்கு ஒவ்வொன்றாகப் போன் செய்து அப்போதே வந்து பார்க்க நேரம் கேட்பார். காலை என்பதால் எப்படியும் கிடைத்துவிடும். பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்கள் விரும்புவதும் காலை அலுவலகம் செல்லுவதற்கு முந்தைய நேரத்தைத்தான். சரியாக அமைந்துவிட்டால் அப்போதே முன்பணம் கொடுத்து வந்துவிடுவார். விளம்பரம் வந்த சூட்டோடு சூடாக வீடுகள் நிரம்பும் சூட்சுமம் இதுதான். அவரது நண்பர்களுக்கும் இப்படித்தான் பிடித்துக்கொடுக்கிறாராம். பின்பு நமக்கு எப்படி கிடைக்கும்?

இப்போது சில இணைய தளங்களும் இதுபோன்ற சேவையை அளிக்கின்றன. 99acres.com, indiaproperties.com, magicbricks.com, makaan.com, sulekha.com போன்றவை பயனளிக்கும் தளங்கள். இங்கும் புரோக்கர், ஓனர் விளம்பரங்கள் என்று தனித்தனியாக இருக்கும். நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து வாய்வழி விளம்பரம். நமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கலாம். அப்படியே வாய்வழியாகவே பரவி வீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல வீடுகள் கிடைக்காமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் நல்ல அபார்ட்மெண்டுகளில் பக்கத்துவீடு காலியாவது தெரிந்தால் மற்ற பக்கத்துவீட்டுக்காரர்கள் தமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி, அந்த வீடு காலியாவதற்கு முன்பே பேசி முடித்துவிடுவார்கள். வீடு காலியாவதற்கு முன்னமே அது அடுத்தவர் வருவதற்கு ஏற்பாடாகிவிடும். அதனால் நண்பர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள் அனைவரிடம் சொல்வதால் ஒன்றும் குறைந்துபோய்விடாது. முடிந்தால் புலம்பலாம், அது பார்த்து நமது நண்பர்கள் கொஞ்சம் கூடுதல் முயற்சி செய்து வீடு கிடைக்க ஏற்பாடு செய்யலாம். வலைப்பூ இருந்தால் அங்கு விளம்பரமாகப் போடலாம். பதிவர்கள் யாரும் பார்த்து உதவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

-பெஸ்கி.

புரோக்கர் - இந்தப் புண்ணியவான் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். மேலும், பின்வரும் விசயங்கள் பற்றியெல்லாம் இந்தத் தொடரில் சொல்லலாம் என்றிருக்கிறேன். உங்கள் அனுபவங்கள் வைத்து மேலும் ஏதாவது சேர்க்கவேண்டுமா எனத் தெரியப்படுத்தவும்.

புரோக்கர் பிரச்சனைகள்
தெரு - பார்க்கிங்
தண்ணீர்
இணைப்புகள்
கடை வசதிகள்
அக்கம்பக்கம்
வீட்டின் தன்மை
வசதிகள் - துணி உலர்த்த, பார்க்கிங், ஏசி, மீட்டர், ஜன்னல், சமையலறை ஜன்னல், ஆணிகள், குளியலறை வசதிகள்
வீட்டு ஓனர்
முகவரி மாற்றங்கள்
வீட்டில் தேவையில்லாமல் சேரும் பொருட்கள்


Share/Bookmark
Read More!

சொந்த வீடும் வாடகை வீடும்

வாடகை வீட்டுல இருக்குறதுனால நன்மைகளும் இருக்கு, கஷ்டங்களும் இருக்கு. வீடு நமக்குப் பிடிக்கலைனாலோ, பக்கத்து வீட்டுக்காரங்களப் பிடிக்கலன்னாலோ, தெருவைப் பிடிக்கலைனாலோ, வாசப்படி பிடிக்கலைனாலோ வீட்ட மாத்த முயற்சி பண்ணலாம். அல்லது வேற நல்ல வீடு கிடைச்சா வீட்ட மாத்திக்கலாம். வேற நல்ல வேலை, வேற ஊர்ல கிடைச்சாலோ, இந்த வீட்டுல தண்ணி வரல, அல்லது தண்ணி சரியா போகல (இது தண்ணி வரலங்கறத விட பெரிய பிரச்சனை) அப்டி இப்டின்னு பல காரணங்களுக்காக வாடகை வீட்டுல இருக்குறவங்க மாத்திக்கலாம். ஆனா சொந்த வீடுன்னா? அப்படியே பேத்து எடுத்துட்டுப் போகவா முடியும்? சொந்த வீட்ட விட்டுப் போக முடியலங்கிறதுக்காகவே பல வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர். அப்படியே விட்டுப் போகவேண்டிய சூழ்நிலை வந்தால் வீட்டை வாடகைக்கு விடனும், அதப் பாக்கனும், வர்றவங்க சரியா வச்சுக்குவாங்களான்னு கவலைப் படனும், இன்னும் எவ்வளவோ இருக்கு. அப்படி இல்லைனா, மத்தவங்களை வீட்டுல விட்டுட்டு நாம மட்டும் தனியா வாழனும். ஆனாலும் பாருங்க, வாடகை வீடா சொந்த வீடான்னு கேக்கும்போது “சொந்த வீடு”ன்னு சொல்லிறதுல ஒரு கெத்து இருக்கத்தான் செய்யிது.

இருந்தாலும் வாடகை வீட்டுல இருக்குறவங்க ரொம்ப சந்தோசமானவங்கன்னு நினைச்சுடக்கூடாது. எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். வாடகை வீட்டுல இருக்குறவனோட மொத குறிக்கோள் ஒரு சொந்த வீடு வாங்கனும் என்பதாகத்தான் இருக்கும். அதுவும் தங்கமணி ஆசை அதுவாகத்தான் இருக்கும். நமக்கு ”யாதும் ஊரே, எங்கேயும் வீடே”ன்னு வாடகை வீட்டுல இருக்குறதுதான் பிடிச்சிருக்கு. ஆனா தங்கமணி அப்பப்ப சொந்த வீட்டப் பத்திப் பேசி அடிக்கிற தம்ம விட்டுடலாமான்னு உள் மனச யோசிக்க வைப்பாங்க. அதுலயும் சில நேரம், “அவங்க சொந்த வீடு வாங்கப் போறாங்களாம்” அப்படின்னு சொல்லும்போது காதையே கழட்டி வச்சுடலாம் போல இருக்கும். இருந்தாலும் கேக்குற மாதிரியே ஹ்க்கும் போட்டுக்கனும். இந்தப் பாயிண்ட மட்டும் நல்லா நோட் பண்ணிக்கனும், இல்லன்னா வாடகை வீடோ சொந்த வீடோ, எந்த வீட்டுலயும் நிம்மதியா இருக்க முடியாது.


பிடிக்கலைனா வீட்ட மாத்திக்கலாம். ஆனா வீட்ட மாத்தும்போது எவ்வளவு விசயங்களைக் கவனிக்கவேண்டியது இருக்கு தெரியுமா? சரியா விசாரிக்காம வந்துட்டோம்னா அவ்வளவுதான், உடனே மாத்திகிட்டெல்லாம் போக முடியாது. பின்ன? சாமான் சட்டியை எல்லாம் ஏத்தி எறக்குற கொடுமை எங்களுக்குல்ல தெரியும். இப்பல்லாம் பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் அப்டின்னு நிறைய கம்பெனிகள் வந்துடுச்சாம். நாம இது வரைக்கும் இப்படி யாரு கிட்டயும் போனது இல்ல. ”தம்பிகள் உடையான் வீடு மாத்த அஞ்சான்”. ஆனா அடுத்த தடவ பேக்கர்ஸ்தான். அதையும் ஒரு தடவ பாத்துடலாம்.

வீடு மாறுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புதிதாகப் போகும் வீடு நம் மனதிற்குப் பிடித்ததாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீடு கிடைப்பது மிகவும் கடினம். அவ்வாறான வீட்டைத் தேடுவதும் மிகவும் கடினம். அவ்வாறு தேடும்போது எனக்கு வந்த பல பிரச்சனைகள், அனுபவங்களில் இருந்து இந்தத் தொடரை எழுதுகிறேன். வாடகை வீடு மாறும்போது என்னென்ன பிரச்சனைகள் வரலாம், என்னென்ன விசயங்களை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதே இந்தத் தொடர். முதலில் வீட்டு புரோக்கரிடம் இருந்து ஆரம்பிக்கலாம்...

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

சத்தம் போடாதே, நிசப்தம் கூடாதே!

வழக்கமாக வீட்டிற்கு வந்தவுடன், நேரமிருப்பின் ஏதாவதொரு படத்தைப் போட்டுப் பார்ப்பது வழக்கம். நல்ல தெளிவான சப்தம், ஆக்சன் மற்றும் த்ரில்லர் காட்சிகளில் வீடே அதிரும். இதுநாள் வரை எனக்கு அதில் பிரச்சனை இல்லை, இப்போது தங்கமணி. வழக்கமாக இந்த நேரங்களில் தங்கமணி சமையலறையில் இருப்பார். இங்கே சரவுண்டு சவுண்டு அதிகமாகும்போதெல்லாம் அங்கிருந்து டிடிஎஸ் எபெக்டில் வரும். “ஏங்க இப்படி சத்தமா வைக்கிறீங்க, கொஞ்சம் கொறச்சு வச்சுப் பாத்தா ஆவாதா? எத்தன வாட்டிதான் சொல்றது?”.

நான் என்ன வேண்டுமென்றா இப்படிச் செய்கிறேன். பேசும்போது சரியாகத்தான் இருக்கிறது, சண்டை வருபோதுதான் அதிகமாகிறது. கிட்டத்தட்ட எல்லா படத்தின் சவுண்டு எபக்ட்டுகளும் இப்படித்தான் இருக்கின்றன. சரி, சத்தத்தைக் குறைத்து வைத்துப் பார்க்கலாம் என்றால் பேசுவது கேட்காது. சண்டை வரும்போது மட்டும் எழுந்து சத்தத்தைக் குறைப்பது படத்தின் மீது படிந்திருக்கும் ஊடுருவலைக் குறைக்கிறது. டிவியில் பார்த்தால் பரவாயில்லை, ரிமோட் உபயோகித்து மாற்றிக்கொள்ளலாம், இது கம்ப்யூட்டர். படத்தில் சண்டை வரும்போதெல்லாம் வீட்டிற்குள்ளும் சண்டை வரும் அபாயம் இருந்தது.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. இதற்கு மாற்று வழி என்ன செய்யலாமென யோசித்தேன். கீபோர்டு வேறு பழையதாகி மாற்றும் தருவாயில் இருந்தது. ஒரு யோசனை! வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் வாங்கி விடலாம் என யோசித்தேன். ஏனெனில், மவுசையோ கீபோர்டையோ படம் பார்க்கும்போது மடியில் வைத்துக்கொள்ளலாம். சத்தம் கூடும்போது குறைத்துக்கொள்ளலாம் என்பது யோசனை.

ஒரு வழியாக பட்ஜெட் போட்டு வயர்லெஸ் கீபோர்டு, மவுஸ் வாங்கியாச்சு. அப்புறம் படம் பார்க்கும்போது சத்தத்தைக் குறைப்பது ஒன்றும் பெரிய விசயமாகத் தெரியவில்லை. ஆனால் திருப்தியில்லை. சில நேரங்களில் சத்தத்தைக் குறைக்க மறந்துவிடுகிறேன். சத்தத்தைக் குறைக்கும் மனநிலை கொண்டால் படத்தில் ஒன்ற முடியவில்லை. எல்லாம் சரியாகச் செய்தாலும் சண்டை வருபோது அதிராமல் இருப்பது என்னவோ இழந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது. “திட்டம் ஆ” பற்றி மனது யோசிக்கத்தொடங்கியது.

திட்டம் ஆ, திட்டம் அ வை விட அதிக பட்ஜெட்டில் வரும்போலத் தோன்றியது. ஏற்கனவே இதற்கு பட்ஜெட் போட்டு தங்கமணியிடம் வாங்கிக் கட்டியிருப்பது அவ்வப்போது திட்டம் ஆ வை குழிக்குள் தள்ளும். இருந்தாலும் அடுத்தது தயார். வயர்லெஸ் ஹெட்போன். அதை வாங்குவதற்குத் திட்டமிட்டபோது இன்னோரு யோசனை. திட்டம் ஆ, திட்டம் ஆ-2 ஆக மாறியது. வயர்லெஸ் ஹெட்போன் வாங்கினால் இதற்கு மட்டும்தான் உபயோகிக்க முடியும். அதுவே ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்செட் வாங்கினால் மொபைலுக்கும் உபயோகிக்கலாம். அப்படியே ஒரு ப்ளூடூத் டாக்கில் வாங்கி கம்ப்யுட்டரில் பொருத்தி, இரண்டையும் இணைத்து படமும் பார்க்கலாம்.

இதைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன். எவரும் மொபைலுக்கு வாங்கிய ப்ளூடூத் ஹெட்செட்டை கம்ப்யூட்டருடன் இணைத்த அமைப்பை செய்து பார்த்ததாகத் தெரியவில்லை. நாம்தான் முதன்முதலாக முயற்சி செய்ய வேண்டுமா? பரவாயில்லை, முயன்று பார்க்கலாம் என அடுத்த மாதத்துக்கான பட்ஜெட்டில் திட்டம் போட்டு வைத்தேன். ஈபேயில் வாங்கிக் கொண்டிருக்கும்போதே பார்த்த தங்கமணி கேட்டார், கண்டிப்பாக இதற்காக் நீ என்னைப் பாராட்டுவாய் என்று ஒரு பிட்டையும் போட்டு வைத்தேன், என்னவென்று சொல்லவில்லை.

திட்டத்தைச் முதன்முதலாய்ச் செயல்படுத்தும் நாள் வந்தது. வழக்கம்போல தங்கமணி சமையலறையில் இருந்தார். அனைத்தையும் அமைத்து சோதித்துப் பார்த்தேன். நன்றாக வேலை செய்தது. மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி. தங்கமணியிடம் சொல்லி பெருமைபட்டுக்கொள்ளலாம். அமைதியாகப் படத்தை ஆரம்பித்தேன்.
”சத்தம் போடாம அப்படி என்னதான் பண்றீங்க?”, தங்கமணி.
நான் படத்தை நிறுத்திவிட்டு, “பாத்தியா, இந்த ப்ளூடூத் ஹெட்செட்ட கம்ப்யூட்டரோட கனெக்ட் பண்ணிருக்கேன், நா நல்லா சத்தத்தோட படம் பாப்பேன், சத்தம் வெளியவும் கேக்காது, அப்படியே இத போனுக்கும் யூஸ் பண்ணிக்கலாம், எப்டி ஐடியா?”, என்றேன் பெருமையாக.
வித்தியாசமாகப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார். நான் மீண்டும் படத்தில் ஆழ்ந்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார் தங்கமணி,
“என்னங்க, சத்தமே இல்லாம என்னமோ மாதிரி இருக்குங்க, நீங்க சத்தமா வச்சே படம் பாருங்க. வீடு அமைதியா நல்லாவே இல்ல, சரியா?”, என ஹெட்செட்டைக் கழட்டிவிட்டு மீண்டும் சமையலைறைக்குள் சென்றார்.

அடுத்து, திட்டம் இ.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

தாதர் எக்ஸ்பிரசும் குழம்(/ப்)பிய ரயில்வேயும்


மும்பையிலிருந்து நான் மட்டும் தனியே வந்துகொண்டிருந்தேன். தாதர்-சென்னை எக்ஸ்பிரஸ், கிட்டத்தட்ட 24 மணி நேரப் பயணம். சென்னையிலிருந்து அதிகபட்சம் 12 மணி நேரம் மட்டுமே பயணம் செய்து பழக்கப்பட்டிருந்த நமக்கு இந்தப் பயணம் புதுசு. அதுவும் தெற்கு நோக்கி மட்டுமே பயணம், இரவு தூங்கி எழுந்தால் ஊர் வந்திருக்கும். ஆனால் இங்கு மூன்று வேளைச் சாப்பாட்டைப் பார்க்கவேண்டியது இருக்கும். அதாவது பரவாயில்லை, மும்பை போகும்போது பகலில் நிம்மதியாகப் பயணம் செய்யவே முடியாது, அதுவும் ஆணாக இருந்தால் முதல் பயணம் விழி பிதுங்கி விடும்.

பிச்சைக்காரர்கள் வரிசையாக வந்துகொண்டே இருப்பார்கள், பிச்சையிடுவதே வெறுத்துவிடும். ஒரு சிலர் பரவாயில்லை, தரையைத் தூய்மை செய்துவிட்டு காசு கேட்பார்கள். அதிலும் கொடுமை ஒன்று இருக்கிறது, நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல, பிடுங்கும் கூட்டம், அரவாணிகள். அவர்கள் வந்தால் தனியே வந்திருக்கும் அல்லது இள வயது ஆண்கள் பாடு திண்டாட்டம்தான். ஐந்து ரூபாய் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அதுவும் கேட்காமலேயே கொடுத்துவிட்டால் அதிகம் கேட்கும். சில நேரம் சில்லரை இல்லாமல் மாட்டிக்கொண்டால், அங்கே இங்கே கையை வைக்கும், பாவாடையைக் கூட தூக்கும் அபாயம் உண்டு. அடுத்த முறை செல்லும்போது ஒரு 100 ரூபாயை மாற்றி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்துவிட்டேன்.

மேலும், பொது வகுப்புப் பயணிகள், படுக்கை வகுப்புக்குள் வந்து கிடைக்கும் இடத்தில் அமர்ந்துகொள்வர். சிலர் சொல்வது கேட்டு சென்று விடுவர், சிலர் என்ன சொன்னாலும் அசைக்க முடியாது. அவரவர் இஷ்டம்தான். அதிலும் சிலர் குழந்தையுடனும், வயதானவர்களுடனும் வந்தால் நாமாகவே இடம் கொடுக்கும் சூழ்நிலையும் உருவாகும். என்ன ஒன்று, சட்டி பொட்டியைப் பார்த்துக்கொண்டே முழித்திருக்க வேண்டும். இப்படியான பகல் நேரப் பயணத்தில் சாப்பிடுவதற்கு விதவிதமான, என்னவென்றே தெரியாத ஐட்டங்கள் வந்துபோகும். சாப்பிடுவதா வேண்டாமா என்று யோசித்து யோசித்தே நேரம் போய்விடும்.

ஒரு வழியாக சென்று சேர்ந்தாயிற்று. நல்ல மழை. வெளியில் அதிகம் செல்ல முடியவில்லை. ஒரு வழியாக திரும்பும் நாள் வந்தது. வரும்போது பரவாயில்லை, தேர்டு ஏ.சி. யில் டிக்கட் போட்டிருந்தேன். ஏறியது இரவு நேரம். ஒரு குடும்பம் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக என்னையும், என்னருகில் இருந்த இன்னொரு இளைஞரையும் இன்னொரு இடத்திற்குப் பந்தாடியது. நானாவது பரவாயில்லை, அவர் ஏற்கனவே ஒரு இடத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டவர். ஒரு வழியாக இரவு உணவு முடிந்து அவரவர் இடத்தில் முடங்கிப் படுத்தோம் அடுத்த நாள் நடக்கப்போகும் கூத்துக்கள் தெரியாமலேயே.

பொழுது புலர்ந்து எவ்வளவு நேரம் ஆனது என்பது சத்தத்திலிருந்தும், அங்கு குழுமியிருந்த மணத்திலிருந்தும் தெரிந்தது. காலை உணவு நேரம். நமக்கு எதுக்கு இதெல்லாம், நேராக மதிய உணவில் பார்த்துக்கொள்ளலாம் என அப்படியே இருந்துவிட்டேன். இரவு எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்துவிடும். எங்கேயோ நின்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் தூங்கி எழுந்து பார்த்தேன் அப்போதும் நின்றுகொண்டே இருந்தது. எழுந்து விசாரித்ததும் முதல் இடி விழுந்தது.

இப்போது ரயில் நிற்கும் இடம் குண்டக்கல். அதற்கு மேல் செல்ல முடியாது. ஏனென்றால் சற்று தொலைவில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டுவிட்டது. சில செக்கச்செவேர் என்றிருக்கும் குடும்பங்கள் தங்களது பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தனர். அவர்களெல்லாம் திருப்பதி செல்லும் பக்தர்களாம். வடக்கிலிருந்து இவ்வளவு பேர் திருப்பதி நோக்கிச் செல்வதைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் ரேணிகுண்டாவில் இறங்கிச் செல்லவேண்டியவர்களாம். அருகில் இருந்த இளைஞர்தான் சொன்னார்.

அவர் ஒரு முஸ்லீம் இளைஞர். பெயர் XXXகலாம். பேரைக் கேட்பதற்கு முன்பே கணித்துவிடலாம், அந்த முகமும், நிறமும், மீசையில்லாத தாடியும் அப்படி. 24 வயது இருக்கும், ஒல்லியான உருவம். சிரித்த முகம், அனைவரிடமும் சீக்கிரமே பழகி விடுகிறார். துபாயில் வேலை, ஒரு வருடத்திற்குப் பின் வீட்டிற்குச் செல்கிறார். நிறைய பேசிக்கொண்டே வந்தார், நிறைய கதைகள் சொன்னார் அவர், அனைவரிடமும்.

மேலும் சொன்னார், இதற்கு மேல் போக முடியாதாம், ரயில் அப்படியே வந்த வழியே திரும்பிச் சென்று, பின்பு செகுந்திராபாத் சென்று ஒரு வழியாகச் சுற்றி சென்னை சென்று சேருமாம், மறுநாள். எனக்கு கிர்ர்ர்ர் என்று சுற்றியது. 24 மணி நேரத்தை நினைத்தாலே எரிச்சலாய் இருக்கும். இப்போது அதற்கும் மேலேயா? ஏசி வேறு நின்றுவிட்டது, எப்போது கிளம்பும் எனத் தெரியாமல் வெளியே நடந்துகொண்டும், பேசிக்கொண்டும், அவ்வப்போது ஆங்காங்கே அமர்ந்துகொண்டும் பொழுதைக் கழித்தோம். திருப்பதி செல்பவர்கள், தங்களது பொருட்களை பிலாட்பாரத்தில் வைத்து விட்டு, விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

திடீரென திருப்பதி பார்ட்டிகள் மறுபடியும் பொருட்களை உள்ளே அள்ளிப் போட்டனர். விசாரித்தோம். ரயில் கிளம்பப் போகிறதாம், சுற்றிச் செல்லும் வழியில் குடூர் என்ற இடத்தில் இறக்கிவிடுவார்களாம், அங்கிருந்து அவர்கள் திருப்பதி செல்லலாமாம். நிறைய இடங்கள் காலியானதே, கொஞ்சம் ஃப்ரீயாகப் போகலாம் என்றிருந்த எனது எண்ணத்தில் மீண்டும் இடி. மீண்டும் கிளம்பியது, எப்போது சென்று சேருவோம் என்று தெரியாமலேயே.

வண்டி கிளம்பியதும் ஏ.சி. வேலை செய்தது. அதற்குள் நமது தமிழர்கள் ஆங்காங்கே அறிமுகம் ஆகியிருந்தார்கள். நானும் அந்த கலாமும் அனைவரிடமும் அறிமுகம் ஆகியிருந்தோம். ஆளாளுக்கு கதைகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தோம். புத்தகங்கள், சார்ஜர்கள், நொருக்குத்தீணிகள், எண்ணங்கள் இடம் மாறிக்கொண்டிருந்தன. மதிய சாப்பாட்டை முடித்த பிறகு ஒரு தூக்கம். பின்பு செகுந்திராபாத் வந்து சேர்ந்தோம் இரவு நேரம்.

எதிர்ப் பக்கம் அப்பர் பெர்த்தில் இருந்த மாமிக்கு வயது 50 இருக்கும், அவரது கணவரோடு வந்திருந்தார். இவர் ஒரு மூலையில் அவர் ஒரு மூலையில், அவ்வப்போது வந்து பேசிச் செல்வார். அவர்களது உறவினர் செகுந்திராபாத்தில் இருந்திருக்கிறார், பார்க்க வந்தார் இட்லிகளுடன். அவர்களுக்கு அமர்ந்து பேச எங்களது இடங்களைக் கொடுத்துவிட்டு பிலாட்பாரத்தில் இறங்கி வேடிக்கை பார்த்தோம். பிரியானி வியாபாரம் அமோகமாக நடந்துகொண்டிருந்தது. எனக்குச் சாப்பிடவே பிடிக்கவில்லை. இந்நேரம் போய்ச் சேர்ந்து ஒரு பீரைப் போட்டுவிட்டு படுத்திருக்கலாமே என்ற நிராசைகள் அலைமோதின, இரவு எப்படி தூங்கப்போகிறேன் என்ற பயம் இருந்தது. கலாம் அவர் பங்குக்கு ஏதோ வாங்கி வைத்துக்கொண்டார். நான் பிரெட்டும் தண்ணீரும் வாங்கிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் வந்த மாமி, எங்களை அழைத்து அவர்கள் வைத்திருந்த இட்லியைச் சாப்பிடச் சொன்னார். முதலில் மறுத்தேன், விடாப்பிடியாக இருந்தார். சரி என சாப்பிடலானோம். அவருக்கு உதவி செய்ததால் எங்களைப் பிடித்துவிட்ட்டதெனத் தோன்றியது. இட்லியும், மிளகாய்ப்பொடியும், ம்ம்ம்ம் அருமை. காய்ந்துபோய்த் தூங்க வேண்டிய நாங்கள் அருமையான இட்லியுடன் இரவை முடித்தோம். மீண்டும் பிலாட்பாரம். பல மணி நேரங்கள் கழித்து மீண்டும் பயணம் துவங்கியது. வாங்கி வைத்திருந்த இதழ்கள் அனைத்தையும் படித்தாயிற்று, மேலும் மூவர் உட்பட. மீண்டும் தூக்கம்.

இரண்டாவது சூரிய உதயம், அதே ரயிலில். ரயில் ஓடிக்கொண்டுதான் இருந்தது. சந்தோசம். ஏதோ ஒரு புதிய உற்சாகம் என்னுள் இருந்ததை உணர்ந்தேன், அதே உற்சாகம் மற்றவர்களிடமும் இருந்தது. காலை உணவு ஏதோ முடிந்தது. மீண்டும் அரட்டை. எப்படியும் மதியம் போய்ச் சேர்ந்துவிடுவோம் எனச் சொன்னார்கள். எதிரே இருந்த கல்லூரி மாணவன் ஒருவன் PSP ஒன்றை வைத்திருந்தான், கேட்டவர்களிடம் அதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தான். அவன் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். பூர்வீகம் தமிழ், வளர்ந்தது ஆந்திரா, இப்போது மும்பையிலிருக்கும் அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு வந்துகொடிடுக்கிறான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்தும் பேசுகிறான். சில ஹிந்திக்காரர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு போன் செய்து லேட்டாகிறது என்பதை சொல்வதற்கும், பதில் பெறுவதற்கும் அவனையே நாடினர், ஏனெனில் எதிர்ப்பக்கம் தெலுங்கில் மட்டுமே பேசியதாம். அன்று காலை கல்லூரிக்குச் செல்லவேண்டிய அவன், இந்தத் தாமத்தால் செல்ல முடியாமல் பயணித்துக்கொண்டிருக்கிறான்.

அந்த உற்சாகத்தைக் குலைக்கும் வகையில் மீண்டும் ஒரு இடி. திடீரென்று ஆங்காங்கே பரபரப்பானார்கள், சன்னல்கள் வழியே வெளியே பார்த்து ஒருவருக்கொருவர் புலம்பினார்கள். திருப்பதி செல்பவர்களை இறக்கி விடுவதாகச் சொன்ன குடூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் தொடர்ந்து ரயில் சென்றுகொண்டிருந்ததே இதற்குக் காரணம். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தார்கள், நாங்களும்தான். சிறிது தூரம் சென்று திடீரென ரயில் நின்றுவிட்டது, யாரோ அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்திருக்கவேண்டும்.

நின்ற இடம் ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில், சுமார் இரண்டு கிலோமீட்டர் இருக்கும். கற்களும் முட்செடிகளுமாய் இருந்தது. மழை பெய்து பூமியெல்லாம் ஈரம், ஆங்காங்கே தண்ணீர், மந்தமான வெளிச்சம், சிறிது தூரல். திருப்பதி செல்லும் குடும்பங்கள் அவரவர் மொழியில் புலம்பியவாறே பொருட்களுடன் இறங்கினர். பிலாட்பாரம் இல்லாத அந்த இடத்தில், வயதானவர்களும் பெண்களும் இறங்க மிகவும் சிறமப்பட்டனர். நாங்கள் சிலர் அவர்களுக்கு உதவி செய்தோம். சாரை சாரையாக, எல்லா பெட்டிகளில் இருந்தும் மக்கள் இறங்கி ஊருக்குள் நடக்கலாயினர். அந்தத் தூரலில் அழகான பெண்கள் சோகமாக நடந்து செல்வது மனதை ஏதோ செய்தது. நிறிது நேரம் அப்படியே நின்றபின் ரயில் நகரத்தொடங்கியது, பின்னோக்கி.

ரயில் அப்படியே பின்னோக்கிச் சென்று நிற்காமல் சென்ற குடூர் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. வழக்கம்போல் இறங்கி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். ரயில் நிலைய அதிகாரியுடன் ஒரு குடும்ப உறுப்பினர்கள் மிகவும் ஆக்ரோசமாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். மொழி தெரிந்தவர்கள் அருகே சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

திடீரென சில கேமராக்கள் ஓடி வந்தன. அங்கே வாக்குவாதம் செய்தவர்களுடன் பேசி, பேட்டி எடுத்தனர். சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதம் செய்த கும்பல் பயங்கரமாக குதூகலித்துக் கொண்டாடியது. இது அடுத்த இடி. அவர்கள் கேட்டுக்கொண்டபடி மீண்டும் சுற்றி ரேனிகுண்டா செல்லுமாம் ரயில். அப்படிச் செல்வதானால் இன்னும் ஒரு நாள் ஆகலாம் சென்னை செல்ல. ஒரு பக்கம் கேமராக்கள் சூழ பரபரப்பான பேட்டிக்கள் ஓடிக்கொண்டிருந்தன, அவரவர் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தனர். இன்னும் இரண்டு மணி நேர தூரத்தில் சென்னை, என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்போதுதான் அந்தக் கல்லூரி மாணவன் சொன்னான். சென்னைக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையம் வழியே செல்லுமாம். இப்போது சென்னை செல்லும் மக்கள் அடித்துப் பிடித்து எங்களது பொருட்களை இறக்கினோம். ரயில் நிலைய அதிகாரியிடம் எங்களது டிக்கட்டிகளைக் கொடுத்து கையொப்பமும் சீலும் வாங்கிகொண்டோம். அந்த ரயிலுக்கு டிக்கட் எடுக்கவேண்டியதில்லை.

கொடுமையிலும் கொடுமையாகத் தெரிந்தது. குண்டக்கல்லில் இறங்கிய திருப்பதி செல்பவர்களை, குடூரில் இறக்கி விடுகிறேன் என ஏற்றி வந்து நிறுத்தாமல் சென்றது எப்படி என்றே தெரியவில்லை. அவர்களில் பலர் இறங்கி ஊருக்குள் சென்றுவிட்டனர். அங்கு வாதாடியது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே. அவர்களுக்காக ஒரு ரயிலையே திருப்பி விடுவதா? இவ்வளவுக்கும் திருப்பதி செல்லும் இன்னோரு ரயில் அடுத்த பிலாட்பாரத்திலேயே நின்றுகொண்டிருந்தது. இருந்த கொஞ்ச பேரை அந்த ரயிலில் ஏற்றி நேரே திருப்பதிக்கே அனுப்பியிருக்கலாம். சில பேருக்காக, சென்னை செல்லவேண்டிய பல பேர் இறங்கி நின்றோம். பெரும்பாலான வெற்றுப் பெட்டிகளுடன் அந்த ரயில் வந்த வழியிலேயே திரும்பிச் சென்றது. அதில் எத்தனை சென்னை செல்பவர்கள் தெரியாமல் சென்றுகொண்டிருந்தார்களோ, அந்த ரயில் எபோது சென்னை வந்து சேர்ந்ததோ தெரியவில்லை.

நாங்கள் ஒரு வழியாக சென்னை செல்லும் அந்த ரயிலைப் பிடித்து ஏறி அமர்ந்தோம். சிறிது நேரம் ஒரு வித அமைதி நிலவியது அனைவரிடமும். பின்பு வழக்கம்போல அரட்டைதான். சென்னை வந்ததும் அனைவர் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி இருக்கிறதே, பார்க்கப் பார்க்க நமது மகிழ்ச்சி கூடியது. சரியாக விலக்காத பல்லைக் காட்டிக்கொண்டு சந்தோசமாகக் கை குலுக்கிப் பிரிந்து சென்றோம். எனக்குள் நினைப்பெல்லாம், இன்னொரு முறை இவர்களில் எவரையாவது பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும் அந்த சந்திப்பு?

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

எக்மோர் இரயில் நிலையமும் ஒரு பயண அனுபவமும்

முதன்முறையாக எக்மோர் இரயில் நிலையம் சென்றிருந்தபோது பிரமித்துப் போனேன், எவ்வளவு இரயில்கள், அத்தனையும் சரியாக வருகின்றன போகின்றன, அதற்கான அறிவிப்புகளும் சரியாக வருகின்றன என்று. அதன்பின் பல தடவைகள் சென்றிருந்தபோதும் ஏதும் குறைபாடு கண்டதில்லை.

ஆனால் நேற்று,
மும்பையிலிருந்து வந்த தங்கமணியை அழைத்துவரப் போயிருந்தேன். இரவு 7.45க்கு வரவேண்டிய இரயில். அட்டவணையில் அதே நேரத்திற்கு வரும் என்றிருந்தது. ஆனால் நடைமேடை எண் இல்லை. ஒருவழியாக விசாரித்து, 7வது நடைமேடையில் வரும் என்று அறிந்து அங்கு சென்று நின்றேன் 7.30 க்கு. குறித்த நேரத்திற்கு அறிவிப்பும் இல்லை, இரயிலும் வரவில்லை. 7வது நடைமேடையிலிருந்து, இரயில் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் விசாரணை மேசைக்கு வந்து அங்கிருந்தவரிடம் கேட்டேன், ”தாதர் எக்ஸ்பிரஸ் லேட்டா சார்?”. அவர் சொன்னார், “தாதர் லேட் எல்லாம் இல்லை, இன்னேரம் 7வது பிலாட்பாரத்தில் வந்திருக்கும்”. அவர் சொன்னதை நம்...பி, திரும்பவும் 7வது நடைமேடைக்குச் சென்றேன், இரயில் வந்ததற்கான அறிகுறி இல்லை. திரும்பவும் விசாரணைக்குச் சென்று, “தாதர் இன்னும் வரல சார்”.அதற்கு அவர், “அதெல்லாம் அப்பவே சரியான நேரத்திற்கு வந்துட்டு சார். அனௌன்ஸ்மெண்டும் சொல்லியாச்சு”, என்று எரிந்தார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கொஞ்சம் வயதானவர், ஏதும் கடிந்து சொல்வதற்கும் மனமில்லை. திரும்பவும் 7வது நடைமேடைக்குச் சென்று அங்கு காத்துக்கொண்டிருந்த ஒருவரிடம் தாதர் எக்ஸ்பிரசுக்குத்தான் காத்திருக்கிறார் என்பதை உறுதி செய்துகொண்டு அமர்ந்திருந்தேன். இரயில் 30 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்தது, தாமதமாக வந்ததன் அறிவிப்பு ஏதும் இல்லாமல்.

என்ன ஆயிற்று எக்மோர் இரயில் நிலையத்திற்கு? எப்போதாவது ஒரு தடவை இப்படி நடக்கத்தான் செய்யும் என மனம் சமாதானமாகவில்லை. ஏனெனில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகத்தையே கேவலமாக நினைக்கச் செய்திருந்தது...

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

அவதிப்படும் 100 அடி ரோடு

(படம் beta.thehindu.com லிருந்து எடுக்கபட்டது)

சென்னையில் வாகன நெரிசலைச் குறைக்க மேம்பாலங்கள் ஆங்காங்கே முளைத்துக்கொண்டே இருக்கின்றன. நல்ல விசயம்தான். ஆனால், அது கட்டி முடிக்கப்படும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில் சில பாதைகள் மறைக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் ஏற்படும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் சொல்லமுடியாத அயற்சியைத் தருகிறது. என்ன செய்ய? பல காலத்து நன்மைக்காக சில காலம் கஷ்டம் அனுபவிப்பதில் குறையேதுமில்லை. ஆனால் இதுபோன்று ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் துறை கூடுதல்/சிறப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கிறதா என்றால், சத்தியமாக இல்லை என்றே தோன்றுகிறது.

இப்போது 100 அடி சாலையில் மெட்ரோ ரயிலுக்காக சாலைக்கு நடுவே தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதில் வடபழனி முதல் கோயம்பேடு வரை உள்ள தூரத்தில் நான் கவனிப்பதைப் பற்றி மட்டும் கூறுகிறேன். தூண்கள் சாலைக்கு நடுவே அமைவதால், சாலைக்கு நடுவில் தடுப்புச் சுவர் அமைத்ததால் சாலையின் அகலம் பாதியாகக் குறைந்துவிட்டது. இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலை நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. காரணம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எந்த சிறப்பு/கூடுதல் ஏற்பாடும் இல்லை.

கோயம்பேடு பேருந்து நிலையம் - வடபழனிக்கு இடையே மொத்தம் 4 சிக்னல்கள். முதலில் SAF Games Village வாசலில் இருக்கும் சிக்னல். இங்கு இதுவரை தொல்லை ஏதும் பார்த்ததில்லை. சிக்னல் விளக்குகள் வேலை செய்கின்றன. சில நேரங்களில் ஒரு காவலரும் அருகில் இருக்கிறார்.

அடுத்து, MMDA சிக்னல். பாலம் கட்டும் வேலை காரணமாக சிக்னல் விளக்குகள் வேலை செய்வது இரண்டு வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டது. போக்குவரத்துக் காவலர் எப்போதும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் சில நேரங்களில் ஓரமாக நின்று யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கிறார். சிலர் நெரிசலைச் சரிசெய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால் பேருக்குத்தான் கைகளை காட்டிக்கொண்டு இருக்கின்றனர். மக்கள் எல்லா பக்கத்திலிருந்தும் வந்து முட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஒரே ஒருவரால் இந்த நான்முக சந்திப்பை சரி செய்வது இயலாத காரியம்.

அடுத்து, திருநகர் சிக்னல். இங்கு இருந்த சிக்னல் விளக்குகளைப் பெயர்த்து இடம் மாற்றி, ஓரமாக வைத்துள்ளனர். இருந்தும் பிரயோசனமில்லை, வாகன ஓட்டிகளின் பார்வைக்கு ஏதுவாக வைக்கப்படவில்லை. போக்குவரத்துக் காவலர் ஒருவரைக்கூட இங்கு பார்த்ததில்லை. மக்கள் தாமாகவே முட்டி மோதி, ஒருவரை ஒருவர் திட்டி, ஒருவழியாகக் கடந்துபோகின்றனர்.

அடுத்து அம்பிகா எம்பயர் முன்பு உள்ள சிக்னல். இங்கும் சிக்னல் விளக்குகள் காலி. இங்கு காவலர்களை விட முனைப்பாக ஒரு பொதுஜனம் போக்குவரத்தைச் சரிசெய்ய உதவி செய்துகொண்டிருப்பார். காவல்துறை நண்பர்கள் போன்ற வகையாக இருப்பாரோ?, தெரியவில்லை. சம்பளம் வாங்கும் காவலர்கள் கூட ஓரமாகத்தான் நிற்பார்கள், இவர் அங்குமிங்கும் ஓடி வேலை செய்துகொண்டிருப்பார். சில நேரங்களில் வாகனங்கள், தான் சொல்வதை மதிக்காமல் செல்வது கண்டு திட்டிக்கொண்டிருப்பார். இப்போது இந்த சிக்னல் மூடப்பாட்டு, சற்று தள்ளி, பாதையின் நடுவே திறக்கப்பட்டுள்ளது.

சிக்னல்களைக் கடப்பதற்குள் இந்தப் பகுதி மக்கள் ஒருவழியாகிவிடுகிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவர் கூட இந்தப் பகுதியில் பயணம் செய்ததில்லையா? கூடுதல் காவல்துறை பணியாளர்களை நியமிக்கவேண்டும் என ஒருவருக்குக் கூட தோன்றவில்லையா? அங்கு பணிபுரியும் காவலர்கள் எவரும் மேலதிகாரிக்கு இந்த ஆள் பற்றாக்குறை, விளக்குகள் வேலை செய்யாததைப் பற்றிச் சொல்லவில்லையா? அல்லது பணியாளர் பற்றாக்குறையா? ஒன்றும் புரியவில்லை. அடுத்து மக்கள். ஒரே ஒரு போக்குவரத்துக் காவலர் நின்று கஷ்டப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்கிறாரே, கொஞ்சம் ஒத்துழைபோமே என்று ஏன் ஒருத்தருக்கும் தோன்றவில்லை? எல்லோரும் சென்று முட்டிக்கொண்டு நின்றால் ஒருவரும் போக முடியாது என ஏன் இந்த மரமண்டைகளுக்கு உரைக்கவில்லை? கொஞ்சம் நின்று வழிவிட்டுப் போனால்தான் என்ன? - இப்படி ஒவ்வோரு முறையும் தோன்றிக்கொண்டே இருக்கிறது இந்த MMDA சிக்னலைக் கடக்கும்போது.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

காட்டுநிற நாட்கள்

கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் என வாழ்க்கையை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம் (க.மு., க.பி.) என்கிறான் நண்பனொருவன். ஏனென்றால் கல்யாணத்திற்குப் பின் பெரிய மாற்றம் இருக்குமாம். மேலும் அவன் கூறியது... ”கல்யாணத்திற்குப் பின் ஒரு ஆணின் சுதந்திரம் அனைத்தும் பறிபோய்விடும். ஆனால் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் கிடைக்கும். கல்யாணம் ஆன முதல் இரு மாதங்களுக்கு உன்னை வெளியில் பார்க்கவே முடியாது. பின் சில நேரங்களில் பார்க்கலாம். சில வருடங்கள் கழித்து நீயே என்னை போன் செய்து அழைப்பாய் - மாப்ளஎங்கயாவது பாருக்கு போய் பேசலாம்டா என்று”.

இன்னொரு நண்பன் கூறியது... ”கல்யாணத்துக்கு அப்புறம்தாண்டா நா ஜாலியா இருக்கேன். அன்னைக்கி மட்டும் இவளப் புடிக்கலன்னு சொல்லிருந்தேன்னா இவ்வளவு சந்தோசமா இருந்திருக்கவே மாட்டேன். என் பிரண்ட்ஸ் எல்லாத்தையும் அவ பிரண்ட்ஸ் மாதிரி பழகுறா. எல்லாரும் நா குடுத்துவச்சவன்னு சொல்றாங்கடா...”.

வாங்க வாங்க, வந்து கிணத்துல விழுந்துருங்க...

வாய்யா, வந்து இந்த வருத்தப்படும் வாலிபர் சங்கத்துல வந்து சேந்துக்க...

கல்யாணத்துக்கு அப்புறம்தான்யா உனக்கு வாழ்க்கையே இருக்கு, அது ஒரு சுகமான சுமை...

அப்படி இப்படின்னு அவங்கவங்க கருத்துக்களை நம்ம மேல அள்ளித் தெளிச்சுக்கிட்டே இருக்காங்க. இதுல, பிரபல பதிவர் ஒருத்தர், கல்யாணம் ஆனதுல இருந்து, குழந்தை பிறக்குற வரை என்ன நடக்கும்னு வெளாஆஆஆஆவரியா புட்டு புட்டு வச்சாரு. அப்படியே அசந்து போயிட்டேன், மனுசனுக்கு இவ்வளவு அடியா அனுபவமா?

சரி சரி, வரப்போறவ எப்படி இருக்குறாங்கிறதப் பொருத்துத்தான் நம்ம வாழ்க்கை அமையும்னு ஒரு முடிவா இருந்துட்டேன். அதுலயும் ஒருத்தன் வந்து ஒரு குண்டத்தூக்கிப் போட்டான்.”டேஏஏஏய், இவ வரும்போது என்ன மெண்டாலிட்டில இருந்தா தெரியுமா? கொஞ்சம் கூட மெச்சுரிட்டியே இல்லடா. அப்றம், கொஞ்ச கொஞ்சமா நம்ம வழிக்கு கொண்டுவந்தேன். எல்லாம் நம்ம கைலதான் மாப்ள இருக்கு...”.

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. ஆனா இவன் சொன்னதுல ஒன்னு எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. எல்லாம் நம்ம கைலதான் இருக்கு. ஆனா அவளுக்கும் கை இருக்குன்னு நெனச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. அந்த அளவுக்குப் போகாது. அப்படியே போனாலும் “போய்க்கிட்டேஏஏஏ இருடா ஏனாஓனா”ன்னு போய்கிட்டே இருப்போம்ல.

கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பதைக் கொஞ்சம் தள்ளி வைக்கலாம். கல்யாணத்திற்கு முன்பு செய்த ஒருசிலவற்றை செய்ய இயலாது எனபது நூத்துக்கு நூறு உண்மை. அப்படி என்ன செய்திருப்போம்? பெருசா ஒன்னும் இல்லை. நினைத்ததை, நினைத்த நேரத்தில் செய்திருப்போம். எப்போதும் முதுகில் ஒரு பை. அதில் சில அத்தியாவசியப் பொருட்கள். நகரத்தின் ஒரு மூலையில் இருக்கும்போது, இன்னொரு மூலையிலிருந்து அழைப்பு வரும். “நைட்டு வந்துர்றேன் மாப்ள”, என்றபடி அலுவகத்திலிருந்து வழக்கமான பாதை மாறிப்போகும் வண்டி. இரு நாட்களாக வீட்டுக்குச் வீட்டுக்கு அறைக்குச் செல்லவில்லையென்றாலும் கவலைப்படாத மனம். ஞாயிரு விடுமுறை கொண்டாடச் சென்று, செவ்வாய் மாலை அறை திரும்பும் அசால்ட்டு. இவையெல்லாம் விட்டுவிடுவேன் என்றல்ல, இவை என்னை விட்டுவிட்டுப் போய்விடும்.

இப்படி நினைத்ததைச் செய்வது என்ன பெரிய விசயமா? என்ற சந்தேகம் வரலாம். அப்படியல்ல, இப்படி நினைத்ததைச் செய்த சில காரியங்களை நினைத்தால் இப்போதும் மனது லப்டப்லப்டப் என வேகமாக அடித்துக்கொள்ளும், ஓரத்தில் புன்முறுவல் பூக்கும், இனி இப்படி செய்யக்கூடாது என்ற உறுதிகொள்ளும். அதுபோன்று என்னவெல்லாமோ செய்தோம். அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போதுதான் இப்படியொரு தலைப்பு மனதில் தோன்றியது.

காட்டுநிற நாட்கள்...

-அதி பிரதாபன்.


Share/Bookmark
Read More!

தூக்கம் உன் கண்களை...

ஒரு நாள் இரவு, வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெகு நேரம் பேசிய பின்பு, ”காலையில் எழுதிருக்கனும், நா தூங்குறேன்”, என்றார். சரி என்று கணினியிடம் திரும்பினேன். இரண்டு பின்னூட்டங்கள் படித்திருப்பேன், திரும்பிப் பார்த்தால் நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில். கொடுத்துவைத்தவர். இப்படித்தான் சிலபேர். நினைத்தவுடன் தூங்கிவிடுவர். நமது கதையோ வேறு. இரவு 12 மணிக்குமேல் தூங்கலாமென முடிவெடுத்தபின், படுக்கையில் ஒரு அரை மணி நேரம் புரண்டபின்தான் தூக்கம் வரும். அதுவும் நல்ல காற்று வீச வேண்டும். வெளிச்சம் இருக்கக் கூடாது, போன்ற நிபந்தனைகளுடன்.

காற்று என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. சிலருக்கு மின்விசிறி இல்லாமல் தூக்கமே வராது. காற்றுதான் காரணம் என்று நினைக்க வேண்டாம். அந்த மின்விசிறியில் காற்றே வராது. கொர கொர என்று சத்தம்தான் வரும். அந்த சத்தம் நின்றுவிட்டால் உடனே விழித்துவிடுவார்கள். எனது நண்பன் சுரேஷ் நான்கு பேருடன் ஒரு வீட்டில் வசித்துவந்தான். இரவு வெகு நேரம் கழித்துதான் வீட்டிற்கு வருவான். வந்து பார்த்தால் மின்விசிறி உள்ள அறையில் மற்ற நால்வரும் படுத்துவிடுவர். அவன் மின்விசிறியில்லாத அடுத்த அறையில்தான் படுக்கவேண்டும். ஆனால் காலை மட்டும் இந்த அறைக்குள் நீட்டியிருப்பான், காற்றுக்காகவாம். எப்போதாவது மின்விசிறியை அனைத்தால் போதும், உடனே எழுந்து போடச்சொல்வான். ”ஏண்டா, அங்கதான் காத்தே வராதே, அப்புறம் எதுக்கு ஃபேன்”, என்று கேட்டால், பதில் சொல்லத்தெரியாது. மின்விசிறி ஓடினால்தான் தூக்கம் வருமென்பது அவனது நினைப்பு.

சிலருக்கு போர்த்தினால்தான் தூக்கம் வரும், குளிர்காலத்தில் மட்டுமல்ல. கொளுத்தும் வெயில்காலத்தில் கூட சிலர் போர்த்திக்கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறேன். குளிர் காலத்தில் மின்விசிறியையும் போட்டு நடுக்கத்துடன் போர்த்திக்கொண்டு தூங்குவர் சிலர். மின்விசிறியை அனைத்தால் தூக்கம் வராது. சிலருக்கோ மல்லாந்து படுத்தால்தான் தூக்கம் வரும், சிலருக்கு வலதுபுறம் சரிந்து, சிலருக்கு இடதுபுறம்.

சிலருக்கு கட்டிலில் படுத்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு தலையணை இல்லாமல் தூக்கம் வராது. சிலருக்கு வெளிச்சம் இல்லாமல் இருந்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு சப்தம் ஏதும் இருந்தால் தூக்கம் வராது. சிலருக்கு குறிப்பிட்ட சபதம் கேட்டால்தான் தூக்கம் வரும், சிலருக்கு குறிப்பிட்ட சப்தங்கள் மட்டும் தொந்தரவைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, குறட்டை சத்தம் கேட்டால் ஒன்றும் தொந்தரவில்லை. அதே நபருக்கு சுவற்றில் மாட்டியிருக்கும் நாட்காட்டி (அல்லது ஏதாவது தாள்) உரசும் சப்தம் கேட்டால் தூக்கம் வராது. சிலருக்கு தூங்குவதற்கு முன் ஒரு சிகரெட் குடித்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கோ தண்ணி. சிலருக்கு வேறு வகை போதை.

இன்னும் சில வித்தியாசமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவனுக்கு பக்கத்தில் இருப்பவர் மேல் கால் போட்டால்தான் தூக்கம் வரும். பயந்த சுபாவம் உள்ளவனென்று நினைக்கிறேன். பக்கத்தில் யாரேனும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இன்னோருவன், சின்ன வயதில் பக்கத்தில் இருப்பவரின் காதைப் பிடித்துக்கொண்டுதான் தூங்குவானாம். பல தடவைகள் இப்படி அம்மாவின் காதைப் பிடித்து கம்மலை கழட்டிவிட்டிருக்கிறான். இதேபோல சின்ன வயதில் சிலர் கை சூப்பிக்கொண்டுதான் தூங்குவர். விரலை எடுத்தால் போதும் டபக்கென்று விழித்துக்கொள்வர். எப்படித்தான் தூங்கும்போது தெரியுமோ தெரியவில்லை. இன்னோரு நண்பன் காலை(மட்டும்தான்) ஆட்டிக்கொண்டேதான் தூங்குவானாம்.

இதில் பொதுவான சில விசயங்களும் இருக்கின்றன. புதிய இடத்தில் தூக்கம் சரியாக வராது. பேருந்து பிரயானத்தில் சன்னலோரம் இருந்தால் தூக்கம் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. அதிக உடல்வலியுடன், தூக்கமே இல்லாது இருக்கும்போது தூங்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த சூழ்நிலையிலும் தூக்கம் அமோகமாக வரும்.

அதிலும் கல்யாணம் ஆன சிலரிடம் கேட்டேன். ஒருத்தருக்கு மனைவியை வயிற்றோடு கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வருமாம். இன்னொருத்தருக்கு மார்போடு அனைத்துத் தூங்கும் பழக்கமாம். இன்னொருவர் காலை தூக்கிப் போட்டுக்கொண்டுதான் படுப்பாராம். ஒன்று மட்டும் உறுதி, கல்யாணமானவர்கள் மனைவியைக் கட்டிப் பிடித்துக்கொண்டுதான் தூங்குகிறார்கள். :)

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

புதுத்தகம்

கதிரவன் ஸ்டோர். பள்ளி நாட்களில் மறக்க முடியாத கடை. இந்தக் கடை முதலாளி பெரும்பாலன மாதங்கள் ஈ ஓட்டிக்கொண்டிருப்பார். கடையில் ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பார். ஆனால் ஜூன் மாதம் வந்துவிட்டால் அவருக்கும் அவரது கடைக்கும் தனி மவுசு வந்துவிடும். கடையில் அதிகமாக மூன்று பேரைப் போட்டிருப்பார். கடையில் கூட்டம் நிரம்பி வழியும். சொந்தபந்தம், தெரிந்தவர்களெல்லாம் இப்போதுதான் தங்களது நெருக்கத்தைக் காண்பித்துக்கொண்டிருப்பார்கள், கடை வாசலில். கதிரவன் ஸ்டோர் ஒரு புத்தகக் கடை.

புத்தகக் கடை என்றதும் சென்னையிலிருப்பது போல இலக்கியவாதிகள் வந்துபோகும் புத்தகக் கடை என்று நினைத்துவிட வேண்டாம். எங்களது ஊரில் புத்தகக் கடை என்றால் பள்ளிக் குழந்தைகளுக்கான நோட்டுகள், புத்தகங்கள் கிடைக்கும் கடை. பள்ளி ஆரம்பித்தவுடன் நோட்டுகளின் விறபனை சூடு பறக்கும். நோட்டுகளுடன் பேனா, பென்சில், டப்பா இன்ன பிற துணை ஆயுதங்களும் கிடைக்கும். பாடப் புத்தகம்தான் அதிக கிராக்கியாக இருக்கும்.

அப்போதெல்லாம் பாடப் புத்தகங்கள் பள்ளி ஆரம்பித்தவுடன் கடைகளில் கிடைக்காது. சிறிது நாட்கள் கழித்துதான் வரும். அதுவரை கடந்த வருட பழைய புத்தகத்தை வாங்கி வைத்து காலம் செல்லும். சிலருக்குத்தான் கிழியாத புத்தகம் கிடைக்கும். சில வீட்டில் அண்ணனோ அக்காவோ இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் மூத்தவர் இல்லாத வீடுகளில் இருப்பவர்களோ, இளையவர்கள் இல்லாத ஆட்களாகப் பார்த்து கொக்கி போடவேண்டியதிருக்கும். சிலர் விலைக்குக் கூட கொடுப்பர். சிலரோ ஓசிக்கே கொடுத்துவிடுவர். பெரும்பாலும் அது கிழிந்த புத்தகமாகவே இருக்கும். கிழிந்த புத்தகமென்றால் அட்டையில்லாத புத்தகம்.

பழைய புத்தகம் வாங்குவதில் இரண்டு வகை உண்டு. சிலர், புது புத்தகம் வாங்குவது வரை ஒப்பேத்த பழைய புத்தகத்தை உபயோகிப்பர். அவர்கள் பெரும்பாலும் கிழிந்த புத்தகத்தையே வைத்திருப்பர். மற்றவர்கள் நல்ல பழைய புத்தகத்தை ஒரு விலை கொடுத்து வாங்கி விடுவர். அவர்களுக்கு புது புத்தகம் வாங்கும் எண்ணம் கிடையாது. அவர்களது வீட்டு பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்காது. அரசு தரும் இலவசப் புத்தகம் கிடைக்கும்தான். ஆனால் அது எத்தனை மாதங்கள் கழித்து வருமென்பது யாருக்கும் தெரியாது.

இப்படி பள்ளி ஆரம்பித்த சில நாட்களாகப் புத்தகம் வாங்கும் வேட்டை நடந்துகொண்டிருக்கும். புது புத்தகம் வாங்கும் நபர்களோ கதிரவன் ஸ்டோருக்கு புத்தகம் வந்ததா என்பது குறித்து விசாரணையிலேயே இருப்பர். ”நேற்று ஐந்தாம் வகுப்பு தமிழ் புத்தகம் வந்துவிட்டதாம் தெரியுமா?”, என்பது போன்ற ஆச்சர்யமிக்க அவரச் செய்திகள் காற்றில் பறந்துகொண்டிருக்கும். ஆம், ஒரு வகுப்பிற்கான புத்தகங்கள் மொத்தமாக வராது. தவணை முறையில்தான் வரும். ஒரு பாடமோ, அதற்கு மேற்பட்ட பாடங்களோதான் ஒரு சமயத்தில் வரும். மொத்தமாக வந்ததாய் சரித்திரம் கிடையாது.

சிலருடைய பெற்றோர் வெளியூரில் வேலை செய்துகொண்டிருப்பர். அவர்கள் அருகிலுள்ள பெரிய ஊர்களில் இருந்தால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சீக்கிரம் புது புத்தகங்கள் கைகளில் தவழ வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு அந்த சமயத்தில் நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுடைய கைகளிலும் சில நாட்களில் புது புத்தகம். அந்த சில பேரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், படம் பார்க்க. மற்றவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்துவிட்டால் அதன் பிறகு அவர்களைச் சீண்ட ஆள் இருக்காது.

இதாவது பரவாயில்லை. சில நேரங்களில் பாடத்திட்டம் மாறி, முந்தைய வருடத்திலிருந்து முழுவதும் வேறான புத்தகத்தை அரசு வெளியிடும். அபோதுதான் நமக்குக் கொண்டாட்டமே. புத்தகம் வாங்கியாச்சா என்ற ஆசிரியரின் நச்சரிப்பு அவ்வளவாக இருக்காது. அவருக்கு மட்டும் எங்கிருந்தாவது ஒரு புத்தகம் கிடைத்திருக்கும். அது எங்காவது தூரத்திலிருக்கும் உறவினர் மூலமோ நண்பர் மூலமோ கிடைத்திருக்கலாம். மீண்டும் ஒரு நாள் கதிரவன் ஸ்டோருக்கு புது புத்தகம் வந்துவிட்டது என்ற செய்தி காட்டுத்தீ போல பரவும். உடனே அப்பாவை அழைத்துக்கொண்டு கடைக்கு படையெடுப்புகள் தொடங்கும். காலியாவதற்குள் வாங்கவேண்டுமே!

இப்படியெல்லாம் வாங்கிய புத்தகங்களை இப்போது தேடவேண்டுமென்கிறது மனது. ’ஈறு போதல், இடை உகரம் ஈயாதல்’, ‘இரட்டைக்கிளவி’, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’, ‘பண்புத்தொகை’, ‘நேர் நேர் தேமா’ போன்றவை இலக்கணப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது கேட்கும். சரி, இலக்கணம் பற்றி எழுதலாமென்றால், அந்த புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அடுத்தமுறை ஊருக்குச் செல்லும்போது அவற்றைத் தேடி எடுத்துவரவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போது நண்பனிடமிருந்து வந்தது மின்னஞ்சல் ஒன்று, தமிழ்நாடு அரசுப் பாடநூலகள் இணையத்தில் இருக்கிறது, டவுன்லோடு செய்து பிரிண்ட் பண்ணி ஏழைக்குழந்தைகளுக்குக் கொடுங்கள் என்று (அல்லது இந்த மின்னஞ்சல் வந்த பின் இவையனைத்தும் மனதில் ஓடின எனவும் கொள்ளலாம்). முடிந்தவர்கள் செய்யலாம், இங்கே (textbooksonline.tn.nic.in) சென்று பார்க்கவும். முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்துப் புத்தகங்களும் PDF வடிவில் இருக்கின்றன. தமிழ் இலக்கணம், செய்யுளும் இங்கே இருக்கிறது, அருஞ்சொற்பொருள் விளக்கத்துடன். செய்யுள் பகுதிகளை அசைபோட நினைப்பவர்கள் சென்று பார்க்கலாம். இலக்கணமும் இருக்கிறது. ஆனால் நாம் எதிர்பார்த்த பகுதி இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் பாடத்திட்டம் அனைத்தும் மாறி இருக்குமே.

பெஸ்கியின் டிஸ்கி: இனி இலக்கணம் பற்றிய பதிவுகள் வரலாம்.

(பதிவிற்கு சம்பந்தமில்லாத)பெஸ்கியின் டிஸ்கி: ஆணி அதிகம்; ஆதலால் பதிவு உலா குறைவாகத்தான் இருக்கும்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

நிறம் மாறும் குணங்கள்

சிறு வயதில் பேய்ப்படம் பார்ப்பது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும். அன்றைய தினங்களில் (3 - 6 வகுப்புகள் படிக்கும்போது) டிவி டெக் வாடகைக்கு எடுத்துப் படம் பார்க்கும் வழக்கம் ஒன்று உண்டு. ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்தால் 4-5 கேசட்டுகளை வாங்குவார்கள். அதில் ஒரு ஆங்கில ஆக்சன் படமோ பேய்ப்படமோ கட்டாயம் இருக்கும். ஆக்சன் படம் என்றால் ஜாக்கிசான், புரூஸ்லி படம். பேய்ப்படம் என்றால் இவில் டெட். அவ்வளவுதான் அப்போதைய ஹாலிவுட் அறிவு.

யார் வீட்டிலாவது பேய்ப்படம் (இவில்டெட்) ஓடுகிறது என்றால் கட்டாயம் நமது விஜயம் அங்கு இருக்கும். வேறெதுவும் கற்பனை செய்துவிட வேண்டாம். நானும் ரவுடிதான் எனக் காட்டிக்கொள்ளவே. மற்றபடி எங்க வீட்டிலேயே அதிபயங்கர பயந்தாங்கொள்ளி நான்தான். ஏதோ ஆர்வத்தில் டிவி முன்பு அமர்ந்துவிடுவேன். பேய் கூட இன்னும் வந்திருக்காது. பின்னணி இசைக்கே பயம் வந்து தொற்றிக்கொள்ளும். விரல்களால் கண்களை மூடிக்கொள்வேன். சத்தம் குறைவாக இருக்கும்போது, மெதுவாக விரல்களை விலக்கி, சிறு இடுக்கு வழியே பார்ப்பேன். சத்தம் கொஞ்சம் கூடினால் போதும் விரல்களையும் கண்களையும் சேர்த்து மூடிக்கொள்வேன். பயங்கர சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்னும் இரு கைகள் இருந்தால் நலம் எனத் தோன்றும்.

15 நிமிடத்தில் மனம் திக் திக் என அடிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் ஒரு நிமிடம் கூட பார்த்திருக்க மாட்டேன். மெதுவாகத் திரும்பி பக்கத்திலிருக்கும் (எனது வயதுடைய) மணியைப் பார்ப்பேன். அவன் ஆ என்று வாயை (கண்களையும்தான்) பிளந்து பார்த்துக்கொண்டிருப்பான். ஆச்சர்யமாய் இருக்கும். நம்மால் ஏன் முடியவில்லை? அடுத்த 5 நிமிடத்தில் வீட்டிலிருந்து ஏதும் அழைப்பு வருமா என மனம் ஏங்கும். வராத பட்சத்தில், அடுத்த 2வது நிமிடத்தில் பிறந்திருக்காத காரணத்திற்காக வீட்டிலிருப்பேன்.

அதோடு முடிந்தால் பரவாயில்லை. சாதாரணமாகவே இருட்டு என்றால் பயம். அதுவும் பேய்ப்படம் பார்த்த (கேட்ட) அடுத்த ஒரு வாரத்திற்கு மிகவும் பயமாய் இருக்கும். கொல்லைப்புறத்தில் தனியே ஒன்னுக்கு போகக்கூட பயம். அம்மா வந்து பின்னால் நின்றால்தான் வரும். அப்பப்போ திரும்பி அம்மா இருக்காங்களான்னு பார்ப்பதும் உண்டு. “ஆம்பளப் புள்ள, இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்கியே!”, என்று அம்மா திட்டுவார்கள். அப்படியே நாட்கள் ஓடிற்று.

இன்று நிலைமையே தலைகீழ். வீட்டில் பேய்ப்படம் தனியே. தூக்கம் தனியே. வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது என்று இரவு விளக்கு கூட போடுவது கிடையாது. இப்போது அதே கொல்லைபுறத்தில் அம்ம குரல் கேட்கிறது, “லைட்டப் போட்டுட்டு போனா என்னடா?”.

நினைத்துக்கொள்வேன். சிறு வயதில் சிலருக்கு பயம் இருக்கும். வளர வளர சரியாகிவிடுமென்று, சென்ற மாதம் வரை.

சென்ற மாதம் ஒரு நாள், தங்கை அழைத்தாள்..
”என் கூட அந்த ரூமுக்கு வாயேன்”
”எதுக்கு?”
”தண்ணி குடிக்கனும்”, போனேன்.
”??? அதுக்கு எதுக்கு நான்?”
”இருட்டா இருக்குல்ல, பயமா இருக்கு”
எனக்கு இருந்த அதே பயம், கேட்டேன்
”பேய்ப்படமெல்லாம் பாப்பியா?”
”பாப்பேனே”
”எப்படிப் பாப்ப, பயமா இருக்காதா?”
”இருக்கும். கைய வச்சு இப்படி மறச்சிக்கிட்டு பாப்பேன்.”

இன்னும் சில கேள்விகள். அப்படியே ஒத்துப்போகின்றன.
”சின்ன வயசுலயும் இதே மாதிரிதானா?”
”ஆமா”
”மாறலையா?”
”இல்லையே, அப்படியேதான் இருக்கு!”
ஓஹோ, அப்போ சிலருக்கு குணம் மாறாது போலருக்கு.

இன்னொரு நாள், அதே தங்கை. மதிய உணவு நேரம்...
”அண்ணா, இத எடுத்துக்க”
”வேணாம்”
”ஏன், நான் எது குட்த்தாலும் வாங்கவே மாட்டேங்குற?”
”அட. உன்கிட்ட மட்டும் இல்ல. யார் தட்டுலயும் கை வைக்க மாட்டேன். சின்ன வயசுல இருந்தே இப்படித்தான்.”

இதுவும் என்னை பல நேரங்களில் யோசிகக் வைக்கும். சிறு வயதில் எனது சாப்பாட்டில் யாரும் கை வைப்பது பிடிக்காது. அப்படி வைத்தால் சாப்பிட மாட்டேன். யாரும் எனக்கு ஊட்டிவிட்டதாய் ஞாபகமே இல்லை. இப்போது மற்றவர்கள் எனது சாப்பாட்டை எடுத்தால் ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால், இன்னும் அடுத்தவர் சாப்பிடுவதை எடுத்து சாப்பிடத் தயங்குகிறேன். மற்ற நண்பர்கள் அடுத்தவர் உணவை எடுத்துச் சாப்பிடும்போதெல்லாம் நினைப்பேன், நமக்கு ஏன் இது கூச்சமாகவே இருக்கிறது என்று.


”நான் கூட சின்ன வயசுல அப்படித்தான் இருந்தேன். ஆனா, இப்போ மாறிட்டேன். எப்படின்னு தெரியல!”, என்றாள் அவள்.

எதையும் முடிச்சுப் போட்டு இதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை. எனக்கு மாறிய குணம் அவளுக்கு ஏன் மாறவில்லை? அவளுக்கு மாறுவது எனக்கு ஏன் மாறவில்லை? குணம் மாறுதலின் குணம் பாலினம் சார்ந்ததா? சூழ்நிலை சார்ந்ததா? மரபணு சார்ந்ததா? என்று பார்த்தால், மூன்றும்தான் என்றே தோன்றுகிறது. இது சரியெனில், இவ்வுலகில் எவரும் நிரந்தரமான நல்லவருமில்லை, நிரந்தரமான கெட்டவருமில்லை.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

கல்லூரி பூக்கள்

அழகிய கல்லூரி பூக்களில்



ல்வியே சிறந்தது என கற்கும் சில,



காதல்தான் எல்லாம் என அலையும் சில,



கிண்டலால் பிறர் மனதை வருத்தும் சில,



கீழான பழக்கங்களால் வருத்தும் சில,



குற்றம் கூறியே குறைபடும் சில-வேண்டா



கூட்டம் கூடியே அழியும் சில- தானும்



கெட்டு அருகிலுள்ளதையும் அழிக்கும் சில,



கேவலமான வாழ்க்கையை விரும்பும் சில,



கையாலாகாதவை என் பட்டம் பெறும் சில,



கொட்டமடித்தே தினம் வட்டம் போடும் சில,



கோபமே கொள்ளாமல் அமைதியாய் சில,



கெளரவமாய் நடந்து காட்டும் அதிசயமாய் சில,



என பல உள்ளத்தில


எதிலும் பொருந்தாமல்


நித்தமும் வாடியும்


உதிராமல் இருக்கின்றாயே!



என் இனிய பூவே!



N B:
இதில் ’பூவே என்று அழைத்திருப்பது பூவுள்ளம்
படைத்த சில மனிதர்களை ,
அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம் (94 டிசம்பரில் கிறுக்கியது)

---

-கிகி.

Share/Bookmark
Read More!

எங்கே இருக்கின்றாய்

என்னவளே

நெற்றிக்கு பொட்டு வைத்தாய்;

நிலவையே நீ தொட்டு வைத்தாய்;

என்னை மட்டும் ஏன் விட்டு வைத்தாய்?




கண்ணுக்கு மை தீட்டுகின்றாய்;

கண்ணானவன் எனை மட்டும் ஏன் வாட்டுகின்றாய்?





உன் உதடுகள் மின்னுதடி சாயத்தில்;

என் உள்ளமன்றோ உருகுதடி காயத்தில்;




ஆயிரம் கவிதைகள் கிடைத்துவிட்ட ஆதாயத்தில்;

பல்லாயிரம் கற்பனையில் மிதக்கின்றேன் ஆகாயத்தில்;



ஆகாயத்தில் கார்மேகங்கள்

சூழ்ந்த்தால் ஆலாபனை பாடுகிறேன் வாடி

முகத்தில் கருரோமங்கள்

சூழ்வதால் ஆகிவிடுகின்றன தாடி




காதலை தேடிப்போனேன் கவி பாடி

காதலி உன் பெயரை உரைக்குதே என் நாடி,



சொன்னதை மறந்துவிட்டு போனாய் நீ ஓடி,

சுகராகம் பாடுகின்றாய் யாரோடோ கூடி,



வானத்துக்கு பூமியின் மீது காதல்,

வஞ்சி உனக்கு என்னோடு மோதல்,





ஏனோ என் விழி கண்ணீரால் நனையுதடி,

எப்படி பொறுக்கின்றாய்

எங்கே இருக்கின்றாய்?




N B: என் நண்பனின் வருத்தம்


என் கவிதை வழியாய்(95-ஆம் ஆண்டு கிறுக்கியது)


---கி.கி

Share/Bookmark
Read More!

நிறம் மாறும் உறவுகள்

”ஏங்க போய்த்தான் ஆகணுமா”

“வேற என்ன செய்யச் சொல்ற”

“நாம இங்க ஏதாவது வியாபாரம்...”

“என்ன வியாபாரம் பண்ண முடியும் அப்படி பண்றதா இருந்தாலும்பணத்துக்கு எங்கே போறது”

“வெளிநாட்டுக்கு போக செலவு செய்யிற காசுல வியாபாரம் ஆரம்பிக்கலாமில்லையா”?


“ஆரம்பிக்கலாம்,ஆன வருமானம் அதிகமாக ஒன்றும் வராதே”

“கிடைக்கிறத வச்சுட்டு,நாமும் பிள்ளையும் ஒரு வேளை கஞ்சி குடித்தாவது நிம்மதியா இருக்கலாம்

“இந்தாப்பாரு உனக்கு இப்போ ஆறு மாதம்,அடுத்த மாதம் நீ உன் அம்மா வீட்டுக்கு
போயிடுவ அப்படி ஒரு 6 மாதம்,அதுக்கப்புறம் குழந்தைக்கு ஒன்று ஒன்றர வயசாகும்போது நான் திரும்பி வந்துவிடுவேன்”


இப்படி ஒரு வழியாக தன் மனைவியை சமாதானப்படுத்தி அரபு நாட்டுக்கு
வேலைக்கு கிளம்பினான் அந்த கணவன்.

இடையிடையே குழந்தையின் புகைப்படத்தை மின் அஞ்சலில்
பார்த்து,அங்கிருந்து இங்கு வருபவர்களிடம் பரிசுப்பொருட்கள்
கொடுத்தனுப்பி கடந்தது இரண்டு வருடம்.

தாயகம் திரும்பினான் ஒரளவு சம்பாத்தியத்துடன் சிறிது நிலம்
வாங்கினான், குழந்தையின் பேரில் வைப்பு முதலீடு செய்தான்.

“இனி இருக்கிற பணத்தை வைத்து இங்கேயே ஒரு வியாபாரம்
செய்யலாமுன்னு யோசிக்கிறேன்”

“ஏங்க நீங்க வந்து 3 மாசம் ஆகுது,இப்போ நான் 1 மாதம்
முழுகாமலிருக்கிறேன்,எப்படியும் என்னால் 2 வருடம் ஓட்ட
முடியும்,இங்கே வியாபாரம் பண்ணி கஷ்ட்ப்படுறதை விட
அங்க போய் வந்தீங்கன்னா, சின்னதா ஒரு வீடு கட்டி நாம்
தனியாகப்போய்,பின் வியாபாரம் செய்யலாமில்லையா”

இம்முறை மனைவி கணவனை சமாதனப்படுத்தி அனுப்பினாள்
அரபு நாட்டுக்கு?!

ஏழு எட்டு மாதங்களுக்குப் பின், இரண்டாவது குழந்தையும் பிறந்தது .

சிறிது நாட்களுக்கு பின் ஊர் திரும்பினான் கணவன் உயிரற்றவனாக.

கதறி அழுதனர் குடும்பத்தினர், கடைசியாக மனைவியும்.

“நான் அப்பவே சொன்னேன் போக வேண்டாம், போக வேண்டாம் என , கடைசியில் இப்படி போயிட்டியே, பிள்ளைங்க அப்பா எங்கேன்னு கேட்டா
நான் என்ன பதில் சொல்வேன்”

கூடியிருந்த கூட்டம் அதைக்கண்டு கண்ணீருடன் கலைந்தது.

ஒரு வருடத்திற்குப்பின் யாரோ முதல் குழந்தையிடம் கேட்டார்கள், அப்பா எங்கே என்று.
“அங்க அம்மாவோடு படுத்து தூங்குறாங்க” என இறந்த கணவனின் ஆயுள் காப்பீடு மற்றும் இழப்பீடு பணத்தில் கட்டிய வீட்டின் படுக்கை அறையை காட்டி சொன்னது இரண்டாவது குழந்தையை அரவணைத்தபடி.

பி.கு:-

இது முற்றிலும் கதையல்ல, 95% உண்மை.


---கி.கி



Share/Bookmark
Read More!