Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

ஒரு கரு நான்கு கதைகள்

முன்கதைச்சுருக்கம்:
அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர் (நிலாரசிகன், அடலேறு, ஜனா, அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம்.


குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,
அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. மற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை
பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


சுடர் - சிறுகதை


எங்களது வாழ்க்கை எப்போது சூனியமானது என்றே தெரியவில்லை. கொஞ்ச நாட்களாக இப்படித்தான். எனது கணவரைக் காணவில்லை. இரு குழந்தைகளில் ஒன்று மட்டுமே இருக்கிறது. எங்கள் வீடு இன்னேரம் தரைமட்டமாய் ஆயிருக்கும். கணவரும், பிள்ளையும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் தெரியாது. ஒன்று மட்டும் தெரிகிறது, நாங்களும் சாகப் போகிறோம்.

அடுத்த வேளை உணவு எப்படிக் கிடைக்கும், எது கிடைக்கும் என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை. அது கிடக்கட்டும். இப்போது உயிர் பிழைப்பது ஒன்றே நோக்கமாய் இருக்கிறது. ஒரு வேளை உணவில்லாமல் கூட இறக்கும் வாய்ப்புள்ளது. எவ்வளவு தூரம் ஓடுவது, உணவில்லாமல்? கிடைக்கும் சிறிது உணவு எனது குழந்தைக்கே போதவில்லையே! பெண் குழந்தை, ஆறு வயது. இவளாவது பிழைத்துத் தழைக்கட்டும். இருந்தாலும் மறுபுறம் யோசிக்கிறேன். எதற்கு இவளை வளர்க்க வேண்டும், ஏதும் சண்டாளன் வந்து நாசமாக்க?

உயிர் பிழைத்துவிட்டோமோ? சிறிது நாட்களாக குண்டுச் சத்தங்கள் இல்லையே! இப்படி மொத்தமாக அடைத்து வைத்திருக்கிறார்களே, கொல்வதற்கா? இன்னும் என் மகள் உயிருடன்தான் இருக்கிறாள், என்னுடன்.

எங்கும் ராணுவ வீரர்கள், கையில் ஆயுதங்களுடன். காலையில் எழும்போது கொட்டாவி விட்டபடி, சாப்பாட்டுக்காக ஏங்கும்போது ஏதோ ஏக்கமாய் பார்த்தபடி, உச்சி வெயிலில் ஏளனமாய் முறைத்தபடி, உணர்ச்சிவசப்பட்டால் கொலைவெறியுடன் அடித்துத் துவைத்தபடி, தூங்கும் முன் கதைத்தபடி... எப்போதும் இவர்களே தெரிகிறார்கள் என் கண் முன். இப்போது என் மகளை விட இவர்களைத்தான் அதிகம் பார்க்கிறேன், பயம். எப்போது என்ன செய்வார்களோ தெரியாது. இப்படி காட்டுமிராண்டிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோமே, நம் மனமும் இவர்களைப் போல் மாறி விடாதா? எனது குழந்தையை நினைத்துத்தான் கவலையாக இருக்கிறது, இதையெல்லாம் பார்க்கும் அவள் என்ன ஆவாளோ, இப்போதே அவளது மனதில் அழுகை, இரக்கம் எல்லாம் காணாமல் போயிருக்குமோ?

என்னால் எழுந்து நடக்க முடியவில்லை, மிகவும் பலவீனமாகிவிட்டேன் சில நாட்களாகவே. சாப்பாடு வாங்கக் கூட போக முடியவில்லை. எனது மகளுக்கு எப்படி உணவளிப்பது? அவள் உயிருடன் இருந்திருந்தால் கூட இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன், அவளை நினைத்து. இந்த முறை அவளே சென்றிருக்கிறாள், வேறு வழியில்லை. ஏதாவது கிடைத்தால் கண்டிப்பாக எனக்கும் கொண்டு வருவாள்.

அதோ வருகிறாள். கையில் ஒரு ரொட்டித் துண்டு. அவளுக்கு இருக்கும் பசிக்கு அங்கேயே தின்றிருக்கலாம், யாரேனும் பிடுங்கியிருக்கலாம் அல்லது உணவு கிடைக்காமல் கூட போயிருக்கலாம். எல்லாவற்றையும் மீறி ஏதோ கிடைத்துவிட்டது, இன்னும் ஒரு நாள் உயிர் வாழும் தன்னம்பிக்கை இப்போது வந்துவிட்டது. எனக்காகத்தான் கொண்டு வருகிறாள், எத்தனை முறை பட்டினி கிடந்து ஊட்டியிருப்பேன்?

நானோ இப்படி வாழ்வின் இன்னொரு நாளைப் பற்றி ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கிறேன். அவளோ சற்று தொலைவிலிருக்கும் ராணுவ வீரன் அருகே வந்தபோது நின்றுவிட்டாள், ரொட்டித் துண்டில் பாதியைப் பிய்த்து அவனை நோக்கி நீட்டியபடி, எனது சுடர்.

-அதி பிரதாபன்.

மற்ற மூன்று கதைகள்:
அடலேறு - மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்!
ஜனா - ஒரு கரு நான்கு கதைகள்!
நிலாரசிகன் - ஒரு கரு நான்கு கதைகள்!


Share/Bookmark
Read More!

நறுமண தேவதை - சிறுகதை

து டீதானா? இனிப்பா, உவர்ப்பா? இல்லை இதுதான் டீயின் சுவையா? ஒன்றும் புரியவில்லை சுதாகருக்கு. கலரைப் பார்த்தான், இதுவரை பார்த்திராத புது நிறமாய் இருந்தது. அதற்கு மேல் குடிக்க மனமின்றி, பாதியோடு வைத்துவிட்டான். நான்கு ரூபாயை வைத்துவிட்டுத் திரும்பினான். இது என்ன நறுமணம்? மெய்மறந்து ஒரு கணம் கண்களை மூடினான். சில்லரையை எடுத்துப் போட்டுவிட்டு கடைக்காரர் கேட்டார், ”சார், நாலு ரூபா குடுத்துட்டுப் போங்க”.

திரும்பினான். அந்த மணம் இப்போது இல்லை. ”இப்பத்தான இங்க வச்சேன்”, நிதானமாகக் கூறினான் சுதாகர். ”என்ன சார் இது, கிலாஸ வச்சுட்டு அப்படியே திரும்பிப் போறீங்களே”, கடைக்காரனும் நிதானமாகத்தான் கேட்டான். அவனுடைய பார்வைதான் குறுகுறுவென இருப்பதாகத் தோன்றியது சுதாகருக்கு.

”நல்லா பாருப்பா, ரெண்டு ரெண்டு ரூபா, மொத்தம் நாலு ரூபா”.
”ரெண்டு ரெண்டு ரூபா நாலு ரூபான்னு எங்களுக்குத் தெரியாதா?” இப்போது அவன் வம்பிழுப்பது போலவே தெரிந்தது.

சுற்றி நோட்டம் விட்டான். எங்கும் காமிராவை ஒளித்து வைத்துவிட்டு நோட்டம் விடுகிறார்களா என்று. பின்பு சண்டையெல்லாம் போட்டுவிட்டு வழியவேண்டியிருக்கும். எதற்கு வம்பு என்று நாலு ரூபாய் கொடுத்து திரும்பி நடந்தான்.

நான்கு ரூபாய் இழந்தது சுதாகர் மனதை உறுத்தவே இல்லை. காரணம் அந்த நறுமணம். அன்று முழுவதும் அதே சிந்தனைதான். ”நேற்றும் இதே வாசம் அடித்ததே! அப்போ என்ன செய்துகொண்டிருந்தோம்?” யோசித்தான். அலுவலகத்தில் கணினி முன் உட்கார்ந்திருந்ததாய் ஞாபகம். அப்போது கடந்து சென்ற ப்ரியாவிடமிருந்து வந்திருக்கலாமென நினைத்திருந்தான். மறுநாளும் அதே வாசம் அதே நேரம் வருமென்றே தோன்றியது.

அலுவலகம் விடுமுறைதான். இதற்காகவே மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டான். கைக்கடிகாரத்தின் நேரத்தை சரியாக வைத்துவிட்டு வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தான். ஐந்து மணிக்கு அருகே என்பது அவனது கணிப்பு. கையிலிருக்கும் கடிகாரத்தையே பார்த்துகொண்டிருந்தான்.

சுதாகரின் அம்மா உள்ளே இருந்து எட்டிப் பார்த்தார். ”டிவி சும்மா ஓடுது, இவன் கையையே பாத்துட்டு இருக்கனே! சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கனும்”, முனுமுனுத்தவாரே வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

சுதாகர் கவனமெல்லாம் கடிகாரத்தின்மீதே இருந்தது. நேரம் ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. நொடிமுள் பதினொன்றைத் தாண்டிக்கொண்டிருந்த நேரம், அம்மா கேட்டார் ”டேய், அப்பா மொபைல எடுத்து எங்கடா வச்ச?” மணி சரியாக ஐந்து ”டிவி மேல இருக்கு பாரும்மா” அன்னிச்சையாக பதில் வந்தது சுதாகரிடமிருந்து. டிக் டிக் டிக் டிக் டிக்... சரியாக ஐந்து நொடிதான் நறுமணம் நிலைத்தது.

"அப்பா மொபைல எங்க வச்சன்னு கேக்குறேன்ல, பதில் சொல்லாம அப்படி என்னடா பண்ணிட்டு இருக்க?"
"டிவி மேல இருக்கும்மா" குழப்பத்துடன் கத்தினான்.

இரவு அனைத்தையும் கணக்கு போட்டுப் பார்த்தான். அவனது கணிப்பு இதுதான். சரியாக ஐந்து மணியிலிருந்து ஐந்து நொடிகள் ஒரு நறுமணம் மிகுந்த தேவதை அவன் அருகில் வருகிறது. அந்த நேரம் அவன் செய்யும் செயல் அனைத்தும் மறைந்து விடுகிறது அல்லது மற்றவர்கள் மறந்து விடுகிறார்கள். இது அந்த தேவதையின் வரமாக இருக்கலாம். மறுநாள் சோதித்துப் பார்க்கலாமென முடிவு செய்தான்.

மறுநாள், அலுவலகத்தில் வேலை எதுவுமே ஓடவில்லை. மாலை ஐந்து மணி எப்போது வரும் என காத்துக்கிடந்தான். சிறிய அளவில் ஏதும் செய்து பார்க்கலாமென முடிவு செய்திருந்தான்.ஐந்து மணி ஆகப்போகிறது, அலுவலகத்துக்கு வெளியே, எதிரே இருக்கும் டீக்கடைக்கு கிளம்பினான்.

டீக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிவிட்டு கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தான். ஏற்கனவே கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்தாயிற்று. அருகில் இருவர் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தனர். பீப் பீப்... ஐந்து மணி. பேசிக்கொண்டே கடைக்குள் எட்டி ஒரு சிகரேட் பாக்கெட்டை ”ஒரு பாக்கெட் எடுத்துக்கிறேன்” என்றவாறே எடுத்து பாக்கெட்டுக்குள் வைத்தான். நறுமணம் மறைந்ததை உறுதி செய்துகொண்டு திரும்பி நடக்கலானான். சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தான். கடைக்காரர் அவர் வேலையை செய்துகொண்டிருந்தார்.

வீட்டிற்கு வந்து அதனையே ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.  திடீரென ஒரு சந்தேகம். அவர்தான் மிகவும் தெரிந்தவராயிற்றே, நாளை வாங்கிகொள்ளலாம் என விட்டிருப்பாரோ? அல்லது, நமக்குத் தெரிந்தவர்கள் திட்டமிட்டு இப்படி நம்மை நம்பச் செய்கிறார்களா? அப்படியென்றால் அந்த நறுமணம் எப்படி? கொஞ்சம் குழப்பம்தான். மறுநாள் அவனைத் தெரியாத இடத்திற்குச் சென்று சோதிக்கலாமென முடிவு செய்தான்.

மாலை நான்கு மணி. அலுவலத்திலிருந்து கிளம்பி, பைக்கில் வளைந்து நெளிந்து சென்றான். அறிமுகமே இல்லாத ஒரு கடையைத் தேர்வு செய்தான். நேரம் ஐந்தை நெருங்கும்போது கடையை நெருங்கி ”ஒரு மொசாம்பி” என்றான். கடையின் முன்பு சில கண்ணாடி பாட்டில்கள் கண்ணை உறுத்தின. முறுக்கு, கடலை மிட்டாய், பர்பி என வரிசையாக அடுக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், சில வாடிக்கையாளர்கள் அருகில், காத்திருந்தான். பீப் பீப்... ஒரு கண்ணாடி பாட்டிலை அப்படியே கையால் மேலே தூக்கி, தரையில் ஓங்கி அடித்தான். கடைக்காரர் அலறினார், ”எதுக்குய்யா இப்படி ஒடைக்கிற”. பக்கத்தில் இருந்தவர்களோ விலகி நின்று ஒரு மாதிரி பார்த்தனர். ஒரு நொடி ஒன்றும் யூகிக்க முடியவில்லை சுதாகருக்கு. அடுத்து, ”எப்படி கீழே விழுந்தது?”, இது கடைக்காரர். ”தெரியல பாஸ், ஓரத்துல இருந்துருக்கும், அப்படியே கீழ விழுந்திருக்கும்போல இருக்கு”, பக்கத்தில் நின்றிருந்தவர்.

உறுதி செய்துகொண்டான். இது நிச்சயமாய் நமக்குக் கிடைத்த வரம்தான். இந்த ஐந்து நொடி நாம் என்ன நினைத்தாலும் செய்யலாம். மீண்டும் அலுவலகம் வந்து, பின் வீடு செல்லும் வரை ஒரு கவலை கூட இல்லை. இனி என்ன இருக்கிறது கவலைப்பட, இதை வைத்து என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாமே என்ற நினைப்புத்தான். அடுத்து என்னவெல்லாம் செய்யலாமென திட்டம் போட்டது சுதாகரின் மனது.

பைக் வாங்கனும், இல்லை கார் வாங்கலாம், இந்த சக்தியை எப்படி பயன்படுத்துவது. யோசித்தான், ஒன்றும் பிடிபடவில்லை. பணத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு ஓடலாம். எங்கு பணத்தை எடுக்கலாம், எப்படி எடுக்கலாம்? பெட்டிக்கடையில் எடுக்கலாம். அங்கே குறைவாகத்தானே இருக்கும். இல்லையெனில் ஒயின் ஷாபில் எடுக்கலாம். கத்தையாக எடுத்து பைக்குள் வைத்துவிடலாம். ஐந்து நொடி கழித்து எடுத்தது தெரியவா போகிறது? கடன் வாங்கும் போது இந்த ஐந்து மணி பார்த்து வாங்க வேண்டும். ஆபீஸில் யாரிடம் கடன் வாங்கலாம்? நமக்குப் பிடிக்கதவர்களிடம் மட்டுமே வேலையைக் காட்ட வேண்டும். பின்பு, அதிகமாக குடைச்சல் குடுக்கும் டீம் லீடரை மூக்கில் ஒரு குத்து குத்தலாமா?

இப்படியே யோசித்துக் கொண்டிருந்த சுதாகரின் எண்ணங்கள் ப்ரியாவில் வந்து நின்றது. திமிர் பிடித்தவள். பாசுக்கு தெரிந்தவள் என்பதால் ரொம்பத்தான் ஆணவம். ஆம்பிளை நம்மளை மதிக்கிறாளா? ப்ராஜக்ட் மேனேஜர் என்றால் எல்லோரையும் மட்டம் தட்டித்தான் பேசவேண்டுமா? இவள் திமிரை அடக்க வேண்டுமே. ஆனால் அதெல்லாம் சாத்தியமா? சும்மா சொல்லக்கூடாது, செம பிகருதான். முதலில் நமது ஆசையைத் தீர்த்துக்கொள்வோம். நமது ரகசிய நேரத்தில், அவளது உதடு கிழிய ஒரு முத்தத்தை பதித்துவிட வேண்டும், முடிந்தால் செல்போனில் வீடியோ எடுத்துவிடவேண்டும்.

சுதாகர் இவ்வாறு பல திட்டங்களை வகுத்தபின், நாளை என்ன செய்வதென்று முடிவு செய்தான். அனைவர் முன்னிலையில், ப்ரியாவின் உதட்டில் நச்சென்று நான்கு நொடிக்கு ஒரு முத்தம் பதிப்பதென்று. அடுத்த நொடி யாருக்குத் தெரியப்போகிறது. ஆனால் அவளுக்கு மட்டுமே தெரிய வைக்க வேண்டும், யாரோ பல் பதித்திருக்கிறார்கள் என்று.

எவ்வளவு திட்டங்கள் உதிக்கின்றன, நமக்குள் இவ்வளவு எண்ணங்கள் இருக்கிறதா என அவனுக்கே ஆச்சர்யம். கொஞ்சம் தூங்குவோம் என கண்களை மூடினான். ப்ரியாவின் பரிதாப முகமே அவனது மனதுக்குள் ஆடியது. நினைத்துக் கொண்டான் ”கேட்காமலேயே வரம் தந்த நறுமண தேவதையே, நீ வாழ்க”.

தேவதை சிரித்தாள், ”இந்த ஐந்து நொடி வரம் ஐந்து நாளைக்குத்தானப்பா கொடுத்தேன்”!

---

-அதி பிரதாபன்.

சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டிக்காக எழுதியது

Share/Bookmark
Read More!

நிறம் மாறும் உறவுகள்

”ஏங்க போய்த்தான் ஆகணுமா”

“வேற என்ன செய்யச் சொல்ற”

“நாம இங்க ஏதாவது வியாபாரம்...”

“என்ன வியாபாரம் பண்ண முடியும் அப்படி பண்றதா இருந்தாலும்பணத்துக்கு எங்கே போறது”

“வெளிநாட்டுக்கு போக செலவு செய்யிற காசுல வியாபாரம் ஆரம்பிக்கலாமில்லையா”?


“ஆரம்பிக்கலாம்,ஆன வருமானம் அதிகமாக ஒன்றும் வராதே”

“கிடைக்கிறத வச்சுட்டு,நாமும் பிள்ளையும் ஒரு வேளை கஞ்சி குடித்தாவது நிம்மதியா இருக்கலாம்

“இந்தாப்பாரு உனக்கு இப்போ ஆறு மாதம்,அடுத்த மாதம் நீ உன் அம்மா வீட்டுக்கு
போயிடுவ அப்படி ஒரு 6 மாதம்,அதுக்கப்புறம் குழந்தைக்கு ஒன்று ஒன்றர வயசாகும்போது நான் திரும்பி வந்துவிடுவேன்”


இப்படி ஒரு வழியாக தன் மனைவியை சமாதானப்படுத்தி அரபு நாட்டுக்கு
வேலைக்கு கிளம்பினான் அந்த கணவன்.

இடையிடையே குழந்தையின் புகைப்படத்தை மின் அஞ்சலில்
பார்த்து,அங்கிருந்து இங்கு வருபவர்களிடம் பரிசுப்பொருட்கள்
கொடுத்தனுப்பி கடந்தது இரண்டு வருடம்.

தாயகம் திரும்பினான் ஒரளவு சம்பாத்தியத்துடன் சிறிது நிலம்
வாங்கினான், குழந்தையின் பேரில் வைப்பு முதலீடு செய்தான்.

“இனி இருக்கிற பணத்தை வைத்து இங்கேயே ஒரு வியாபாரம்
செய்யலாமுன்னு யோசிக்கிறேன்”

“ஏங்க நீங்க வந்து 3 மாசம் ஆகுது,இப்போ நான் 1 மாதம்
முழுகாமலிருக்கிறேன்,எப்படியும் என்னால் 2 வருடம் ஓட்ட
முடியும்,இங்கே வியாபாரம் பண்ணி கஷ்ட்ப்படுறதை விட
அங்க போய் வந்தீங்கன்னா, சின்னதா ஒரு வீடு கட்டி நாம்
தனியாகப்போய்,பின் வியாபாரம் செய்யலாமில்லையா”

இம்முறை மனைவி கணவனை சமாதனப்படுத்தி அனுப்பினாள்
அரபு நாட்டுக்கு?!

ஏழு எட்டு மாதங்களுக்குப் பின், இரண்டாவது குழந்தையும் பிறந்தது .

சிறிது நாட்களுக்கு பின் ஊர் திரும்பினான் கணவன் உயிரற்றவனாக.

கதறி அழுதனர் குடும்பத்தினர், கடைசியாக மனைவியும்.

“நான் அப்பவே சொன்னேன் போக வேண்டாம், போக வேண்டாம் என , கடைசியில் இப்படி போயிட்டியே, பிள்ளைங்க அப்பா எங்கேன்னு கேட்டா
நான் என்ன பதில் சொல்வேன்”

கூடியிருந்த கூட்டம் அதைக்கண்டு கண்ணீருடன் கலைந்தது.

ஒரு வருடத்திற்குப்பின் யாரோ முதல் குழந்தையிடம் கேட்டார்கள், அப்பா எங்கே என்று.
“அங்க அம்மாவோடு படுத்து தூங்குறாங்க” என இறந்த கணவனின் ஆயுள் காப்பீடு மற்றும் இழப்பீடு பணத்தில் கட்டிய வீட்டின் படுக்கை அறையை காட்டி சொன்னது இரண்டாவது குழந்தையை அரவணைத்தபடி.

பி.கு:-

இது முற்றிலும் கதையல்ல, 95% உண்மை.


---கி.கி



Share/Bookmark
Read More!

கதையின் சுதந்திரம்

மாப்ள, நேத்து உன்னைப் போல் ஒருவன் படம் பாத்தேன்டா. இதெல்லாம் ஒரு படமா? பிடிக்கவேயில்லடா எனக்கு. தீவிரவாதத்தை தீவிரவாதத்தாலயே அழிக்கிற மாதிரி ஒரு கதை. தீவிரவாதின்னாலே முஸ்லிமாத்தான் காட்டனுமா? ஏன், இந்துத் தீவிரவாதியக் காட்டி, அவன அழிக்கிற மாதிரி காட்டக் கூடாதா?

அப்போ தீவிரவாதின்னாலே இந்துதானான்னு கேக்க மாட்டியா?

அப்போ ரெண்டு இந்து, ரெண்டு முஸ்லிம்னு காட்டிருக்கலாம். சரி சமமா போய்ருக்கும்.

அப்போ கமல் இந்து முஸ்லிம் பிரச்சனையக் கிளப்புறார்னு ஒன்னு கண்டுபிடிக்க மாட்டீங்களா?

இல்ல மாப்ள. இப்படி பல பேர நேரடியா போய் சேர்ற ஊடகத்துல, இப்படியெல்லாம் மக்கள் மனசுல தப்பான எண்ணங்கள்லாம் பதிஞ்சுறாது?

இதுக்கு முன்னாடி அரசியல்வாதிங்க பன்ற தப்பு பத்தி படமே வரலியா? அதான் அரசியல்வாதிகள யாரும் தட்டிக் கேக்க மாட்டேங்குறாங்களா? அட போடா, படம் முடிஞ்சவொடனே விட்ட பைக்கு ஒழுங்கா இருக்குமோ இருக்காதோ, நைட்டு என்ன சாப்பிடலாம், நம்ம ஆளுட்ட இருந்து மெசேஜே வரலியே, பஸ் கெடைக்குமோ கெடைக்காதோ, நைட்டு சரக்குக்கு எவன் கிட்ட ஆட்டயப் போடலாம் இப்டி நினைக்க அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு. இதெல்லாம் மூளையில ஏத்த மனுசனுக்கு ஏதுடா எடம்? அண்ணன் தம்பி கல்யாணத்துக்குக் கூட ஊருக்குப் போக முடியாம வேல வேலன்னு கெடக்குறானுக, இதுல சிந்திச்சிட்டாலும்.

நீ என்ன வேணா சொல்லு, இது மனசுக்குள்ள பதிஞ்சு கிடக்கும், ஏதாவது கலவரம் வரும்போதுதான் எபக்டு தெரியும்.

ஆமா, நீ சிறுகதைப் பட்டறைக்கு வந்தல்ல?

ஆமா.

எழுத்தாளனுக்கு முழு சுதந்திரம் உண்டு, எதப் பத்தி வேணா எழுதலாம், உண்மை சம்பவத்த எழுதலாம், கற்பனைய எழுதலாம், உண்மையும் கற்பனையும் கலந்து எழுதலாம், என்னோட எழுத்து அவனுக்குப் பிடிக்கலன்னா என்ன? போட்டுட்டுப் போய்கிட்டே இருக்கட்டும், பிடிக்கிறவன் படிச்சாப் போதும்னு யுவன் சொன்னதுக்கெல்லாம் தலயத் தலய ஆட்டுனல்ல?

அதுக்கு என்ன இப்போ?

அதே மாதிரி ஒருத்தன் ஒரு கதைய சொல்லிருக்கான். பிடிக்கலன்னா போ கழுதன்னு பாதியிலயே எந்திரிச்சுப் போக வேண்டியதான? இவ்வளவுக்கும் கத முன்னாடியே தெரியும். அத வுட்டுட்டு, முழுசா வொக்காந்து பாத்துட்டு அது சரியில்ல இது சரியில்லன்னு பொலம்பிட்டு இருக்க!

ரூவா குடுத்து டிக்கட்டு வாங்கிருக்கேன்ல?

பொக்கிஷம் படத்துக்குக் கூடத்தான் ரூவா குடுத்து டிக்கட் வாங்கின. கடைசி வர இருந்தியா என்ன?

...

அது உனக்குப் பிடிக்கல. இது உன்ன கடைசி வர வொக்காந்து பாக்க வச்சுதுல்ல?

படம் நல்லாத்தான் இருக்கு. அதுக்காக இந்த மாதிரி மதக்கலவரத்தத் தூண்டுற மாதிலாம் எடுக்குறத ஒத்துக்க முடியாது.

டேய்! மதக்கலவரம்னு சொல்லி நீயா ஏதாவது தூண்டி விட்டுறாதடா. நாட்டப் பத்தி இவ்வளவு அக்கறையா பேசுறியே, இன்கம்டாக்ஸ் ஒழுங்கா கட்டுனியா நீயி?

...

சரி விடு. இந்தமாதிரியாவது கொஞ்சம் நாட்டு மேல அக்கறை இருக்குற மாதிரி பேசுறியே! அது வரை சந்தோசம்.

எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்குல்ல?

கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

சிறுகதைப் பட்டறையில் பா.ரா.

சிறுகதைப் பட்டறை - எனது பார்வையில் - இதற்கு முன்னால் எழுதியது.

சிறுகதைப் பட்டறையில் பா.ராகவன் அவர்களுடைய பகுதி இதோ. பவர் பாயிண்டில் அவர் அளித்ததை முடிந்த அளவு குறிப்பு எடுத்து இங்கு அளித்திருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கு எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது கண்டிப்பாகப் பயன்தரும்.

---

சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவமுள்ள நண்பர்களுக்கு இது உதவாது, வார இதழ்களில்/பத்திரிக்கைகளில் எழுத விருப்பம் உள்ளவர்களுக்கே இது.

நல்ல சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது
  • உண்மையை எழுதுங்கள்
  • பாசாங்கின்றி எழுதுங்கள்
  • எளிமையாக எழுதுங்கள்
  • உங்களுக்கென்று ஒரு மொழி முக்கியம்

என்ன வேண்டும்? ஏன் பத்திரிக்கை?
  • பெயர் அச்சில் வரனும்
  • புகழ் வேண்டும்; பிரபலமாக வேண்டும்
  • எழுதி சம்பாதிக்க வேண்டும்
  • ஆத்ம திருப்தி
  • பகிர்ந்துகொள்ளும் சந்தோசம்
(பா.ரா. இதைப் பற்றி கேட்டதற்கு, முதல் இரண்டுக்குத்தான் அமோக ஆதரவு. சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு நிறைய பேர் தயங்கினார்கள், பா.ரா. இதில் தயக்கம் கூடாது என்றார், முதலில் எதற்காக எழுதுகிறோம் என்பதை நாமே அறிந்துகொள்வது முக்கியமாம், அது பணத்துக்காகக் கூட இருக்கலாம். நமக்கு கடைசி இரண்டு காரணங்கள், இதற்கும் கொஞ்சம் ஆதரவு இருந்தது)

பத்திரிக்கைகளைப் புரிந்துகொள்ளுதல்
  • நம்மை விட வயது, அனுபவம் அதிகம்
  • லட்சக்கனக்கான மக்களிடம் நேரடியாகச் செல்கிறது
  • விமர்சனம் இன்றி அனுகுங்கள்
  • முன்னுக்கு வர பத்திரிக்கை ஒரு படிக்கட்டு

யார் வாசகர்கள்?
  • பெண்கள் அதிகம்
  • வயதானவர்கள் அதிகம்
  • சராசரிகள் அதிகம்
  • பொழுதுபோக்காகப் படிக்கிறவர்கள்
  • தேர்ந்தெடுக்கும்போது ஆசிரியர்களுக்கு இது மனதில் நிற்கும்
(நம் கதையை யார் படிப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்)

உதவி ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்
  • பெரும்பாலும் அடிபடவர்கள், கஷ்டஜீவிகள்
  • பெரும்பாலும் இரக்க சுபாவம் உடையவர்கள்
  • பெரும்பாலும் நல்லவர்கள்
  • பெரும்பாலும் விரக்தி கொண்டவர்கள்
  • பெரும்பாலும் குடும்ப கதையை விரும்புபவர்கள்
  • பெரும்பாலும் நல்ல முடிவுகளை விரும்புபவர்கள்
  • பெரும்பாலும் நல்ல எழுத்தாளரைக் கண்டுபிடிக்க மாட்டோமா என ஏங்குபவர்கள்

எப்படிப்பட்ட கதைகள் வரும்
  • வடிவமற்ற கதைகள்
  • காலப் பிரக்ஞையற்ற கதைகள்
  • பேரா பிரிக்கத் தெரியாதவர்களின் கதைகள்
  • நாவல்களின் சுருக்கங்கள்
  • நீதி சொல்லும் கதைகள்
  • அர்த்தமற்ற திடீர் திருப்பமுள்ள கதைகள்
(இப்படிப்பட்ட கதைகளைப் படித்துப் படித்து நொந்துபோய் இருப்பார்கள். நம்ம கதை நல்லாயில்லைனு நமக்கே தோனுச்சுன்னா கண்டிப்பா அனுப்ப வேண்டாம். கண்டிப்பா அடுத்த கதைக்குப் போயிடுவாங்க.)

அனைத்தையும் படிப்பர்களா?
  • அனேகமாக 100 கதைகள் வரும் தினமும்
  • அனைத்தையும் பார்ப்பார்கள்
  • முதல் பாராவைப் படிப்பார்கள்
  • ஆர்வம் தூண்டினால் மட்டுமே மேலே படிப்பார்கள்
(ஆக, முதல் பாராதான் முக்கியம், அது எப்படி இருக்கவேண்டுமென்பது இனி)

முதல் வரி முக்கியம்
  • பளிச்சென்று இருக்க வேண்டும்
  • புதிதாக இருக்க வேண்டும்
  • ஆர்வம் தூண்டும் விதமாக இருக்க வேண்டும்
  • கட்டிப்போடும் விதமாக இருக்க வேண்டும்
  • எளிமையாக, கூர்மையாக, அர்த்தம் பொதிந்து இருக்க வேண்டும்
  • மையக்கருவுக்கு தொடர்புடையதாக இருக்க வேண்டும்
(மேலே கூறிய வொவ்வொன்றுக்கும் ஒரு உதாரணம் தரப்பட்டது, முழுவதும் சேகரிக்க இயலவில்லை)

பளிச்சென்று இருக்க வேண்டும்
“தீக்குழி இறங்குவது, அலகு குத்தி ஆடுவது, கத்தி போடுவது இவற்றுக்குச் சமமான ஒரு புனிதப் பணிதான் தினசரி செய்தித்தாள் படிப்பதும் என்பது இஸ்மாயிலின் அபிப்ராயம். தன்னைத்தான் துன்புறுத்திக்கொண்டு இன்புறும் காரியம்”. (யுவன் எழுதியது)

புதிதாக இருக்க வேண்டும்
“கடவுளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். விசயம் ஒன்றும் பிரமாதமில்லை. தம்பி மலையாளத் திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறான். நான் தாய்லாந்தில் வறுத்த மீன் விற்றுப் பணம் அனுப்புகிறேன்”
(இரா. முருகன் எழுதியது)

கதை எழுதும் கலை
  • எழுதும் முன் சொல்லிப் பாருங்கள், சொல்லும் முறையிலேயே எழுதுங்கள்
  • கதையில் அதிக பட்சம் மூன்று பாத்திரங்களுக்கு மேல் வேண்டாம்
  • பிரச்சனை என்ன என்பதை முதலில் சொல்லுங்கள், யாருக்கு என்பது அடுத்து, பின் தீர்வை நோக்கிச் செல்லுங்கள்.
  • வர்ணனை முக்கியம். விவரணை அவசியம். அதிக வர்ணனை வேண்டாம், தேவை - குறைந்த சொற்கள், தெளிவான படம்.
  • நுணுக்கமான விவரங்கள் மனம் சேர்க்கும். ஆனால் விவரங்களோடு நிற்கக் கூடாது.
  • கருத்தைத் திணிக்காதீர்கள், காட்சியில் புரிய வையுங்கள். (உதாரணத்திற்கு: அவர் ரொம்ப நல்லவர் என்றெல்லாம் சொல்ல வேண்டாம், உணர்த்தினால் போதும்.)
  • சிறுகதை என்பது வசனங்கள் அல்ல. குறைவாகப் பேச விடுங்கள். கூர்மை முக்கியம்.
  • நீதி சொல்லாதீர்கள், நீதிக்கதைகள் எழுதாதீர்கள்
  • அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து கதைகளை எடுக்கவும்.
  • தீர்வு சொல்வது சிறுகதையின் வாலையில்லை (கடைசி பாராவில் ஆகவே என ஆரம்பித்து ஒரு கருத்து சொல்வது... நல்லா இருந்த முதல் பாரா கூட, இப்படிப்பட்ட கடைசி பாராவால் விழுங்கப்பட்டுவிடும்)
  • பத்திரிக்கைகளில் பிரசுரமாக இதெல்லாம் அவசியம். இந்த அம்சங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல கதையில் இருக்கும்.
  • ஆனால், நல்ல கதை என்பது இவற்றைக் கடந்தது. 
 (புரிகிறதா? இந்த குறிப்புகளெல்லாம் பத்திரிக்கைகளுக்கு அனுப்ப ஆர்வமுள்ளவர்களுக்குத்தான், கொஞ்சம் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் உங்களை விட்டு ஓடிப்போய்விடும், கதை எழுதும் கலை தானாக வளர்ந்துவிடும்)

ஆளுக்கொரு விதம்?
  • ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு உண்டு
  • குமுதம் - திருப்பம் நிறைந்த கதைகள்
  • மங்கையர்மலர் - பெண்கள் கண்ணீர் வடிக்கும் கதைகள்
  • (இப்படி ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒவ்வொரு விதம் உண்டு, அதற்கேற்றார்போல எழுதி அனுப்பினால் தேர்வாக வாய்ப்பு அதிகம் என்ற அபிப்ராயம்)
  • மேலே சொன்னவை எல்லாம் பிரமை
  • எந்த பத்திரிக்கையும் இப்படியான வரையரை வைத்துக்கொள்வதில்லை.
  • படித்தால் கவர வேண்டும். முடிந்ததும் ‘அட’ என்று சொல்லவைக்கவேண்டும். அவ்வளவுதான்

அடிப்படை ஒழுக்கங்கள்
  • கையில் கிடைக்கும் அனைத்தையும் படியுங்கள், நல்ல கதைகளைப் படியுங்கள்
  • அதிகம் பாதித்த கதையை எடுத்து அலச வேண்டும்
  • வாழ்வையும், வாசிப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்
  • ஒருமுறை எழுதியது நல்லா இருந்தாலும், வேறு வடிவத்தில் எழுதிப் பாருங்கள். 3 முறையாவது மாற்றி எழுதிப் பார்க்காமல் நல்ல கதை உருவாகாது
  • கவரிங் லெட்டரில் காவியம் (வேண்டாம்)
  • தெளிவாக, போதிய இடைவெளி விட்டு எழுதுங்கள்
  • இருபுறமும் எழுதப்பட்ட தாள்களை யாரும் வாசிப்பதில்லை
  • 4, 5 பக்கங்களுக்கு மேல் போகக் கூடாது (தோராயமாக 900 சொற்கள்)
  • ஒரே கதையை பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பாதீர்கள், திரும்பி வந்தாலொழிய. 
(ஒரு வேளை இரு பத்திரிக்கைகளிலும் உங்களுடைய ஒரே கதை பிரசுரமானால், அதன்பின் உங்கள் கதைகளை அந்தப் பத்திரிக்கைகள் எப்போதும் நிராகரித்துவிடுவார்கள். ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பி மூன்று மாதம் பொறுத்துப் பாருங்கள், பிரசுரமாகவில்லையென்றால் பதில் வரும். பதில் ஏதும் இல்லையென்றால், அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு வேறு பத்திரிக்கைக்கு அனுப்பவும்)

இறுதியாக
  • நிபந்தனைக்குட்பட்ட சிறுகதைகள் எழுதுவது நல்ல பயிற்சி
  • 50 படித்து, 1 எழுதுவது பலன் தரும் (நிறைய வாசிக்க வேண்டும்)
  • தினசரி எழுதுவது நல்லது, 4 பக்கங்களாவது. (பா.ரா. தினமும் நாலு பக்கமாவது, எதையாவது எழுதிவிடுவாராம்)
  • பத்திரிக்கை இறுதி இலக்கல்ல, ஒரு நல்ல தொடக்கம்
  • அனுபவமே இலக்கியமாகிறது
  • எனவே, அடிபடுவது பற்றிக் கவலை வேண்டாம்

---

பா.ராகவன் அவர்களுக்கு நன்றி.
 -ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

புரிதலில்லாக் காதல்

அன்று இளசுகள் நாம். காதலுக்கு அர்த்தம் தெரியுமா நமக்கு? நாம் செய்ததுதான் காதல் என நம்பிக்கொண்டிருந்தோம். நெடுநாள் வாழ்ந்த நம் நட்புக்குள், ஏதோ ஒரு இன்பம், மெல்லிதாகப் படர ஆரம்பித்தது. அது நமக்கும் பிடித்திருந்தது. லேசாகப் படர்ந்ததினை, உரம் போட்டு வளர்க்க நாமொன்றும் அஞ்சவில்லை. நமது நண்பர்கள் கூட அவரவர் பங்குக்கு லேசாக தண்ணீர் தெளித்தனரே! படர்ந்த அந்தக் கொடி, நம் காலைச் சுற்றிய பாம்பு என நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் வலுத்த சமயம், பெரிய சச்சரவு ஒன்று நமக்குள்ளே. அது நம் நட்பெனும் போர்வையைக் கிழித்தெறிய வாய்ப்பாய்ப்போனது. மறைமுகமாய் வளந்த அந்தக் கொடியில், முதல் பூ பூத்தது போன்ற உணர்வு. நாளொருமுறை தவறாமல் பார்ப்பதும், குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவதும் கடமைகளாக்கிக்கொண்டோம். பார்த்தோம், சிரித்தோம், பயணித்தோம், காதலித்தோம், களித்தோம், தோம், தோம், தோம்... பெற்றோரின் கடமை முடிந்து என் கடமை உலகம் திறந்த காலம் அது. புருசலட்சணம் தேடி நான் பிரிந்த நாள் ஞாபகம் இருக்கிறதா உனக்கு? ‘நாளை முதல் எப்படிப் பார்க்காமல் இருக்கப் போகிறேன்’ என்றாய். ‘பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு சென்றதாக நினைத்துக்கொள்’ என்றேன், அதையும் ரசித்தாய் அழுகையுடன். காலங்கள் மாறின. நாம் பேசும் நேரம் குறைந்தது. திடீரென ஒரு நாள் ‘மறந்து விடு’ என்றாய். அதற்கு என்னதான் நீ காரணங்கள் சொன்னாலும், புரிந்தது எனக்கு, நம், புரிதலில்லாக் காதல்.

காதலின் சக்தியை உணர்த்தினாய், ஏமாற்றத்தின் விளைவுகளைக் நீ கண்டிருக்க வாய்ப்பில்லை. பக்க விளைவுகளின் பக்க விளைவுகள், வாந்திகளாய்க் கொட்டின. நல்லவேளை, அப்போது நீ என் அருகில் இல்லை. ’இப்படிச் செய்த நீ நன்றாகவா இருக்கப் போகிறாய்? கடவுள் இருந்தால் உன்னைச் சும்மா விடுவாரா?’ என்றெல்லாம் நீ படப்போகும் துன்பங்கள் மனதில் கரு நிழல்களாக வலம் வந்தன. தொடரும் பயணம், நம்மை, கூடவே வரும் மனிதர்களின் வாழ்க்கையோடு தொய்த்து எடுக்கின்றது, அவர்தம் அனுபவங்களையும் நம்முடன் பிணைத்துக்கொள்கிறது. இன்னும் முழுமையாக உணரவில்லை உலகம், ஆயினும், இன்று எண்ணுகிறேன், நீயும் எங்காவது வாழ்ந்துகொண்டிருப்பாய், என்னைவிட நல்ல கணவனுடன், இன்னொரு உலகத்தை உனக்குக் காட்டும் உன் குழந்தையுடன், பழசை மறந்து உன்னுடன் உறவாடும் உன் குடும்பத்துடன் என்று. வெறுப்பேதும் இல்லை உன்மேல், நம்புகிறேன், இப்போது நீயும் என் நலம்விரும்பியே என்று. ஹ்ம்ம்... காதலில்லாப் புரிதல். நட்புடனே இருந்திருக்கலாம், நம் பிள்ளைகளாவது இருந்திருக்கும், புதுப் பெயர்களுடன்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா

’என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா - அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. சாதாரணமாய், காதலர்கள் மாதிரியா பழகினோம்? கணவன் மனைவி போலல்லவா இருந்தோம். புருசா என்றும் பொண்டாட்டி என்றுமல்லவா அழைத்துக்கொண்டோம். மொபைலில் கூட பெயருக்கு பதில் அப்படித்தானே பதிந்து வைத்திருந்தோம். நீதாண்டா என் உயிர், நீ இல்லாம என் வாழ்க்கைய நெனச்சுக்கூட பாக்க முடியலடா, என்றெல்லாம் சொன்னாளே! இப்போது உயிராவது, மயிராவது என்றல்லவா போய்விட்டாள்’.

’எத்தனை முறை என்னுடன் படுத்திருப்பாள்? உன் நெஞ்சு என் மஞ்சம் என்றும், உன் மடி என் சொர்க்கம் என்றெல்லாம் கொஞ்சினோமே! கொஞ்சம் கூட வெக்கம், மானம் இல்லையா இந்தப் பெண்களுக்கு?’, அவள் மேல் உள்ள கோபம், மொத்தப் பெண்ணினத்தின் மீதே பாய்ந்தது.

’அப்பனுக்கு ஹார்ட் அட்டாக், அம்மா தற்கொலை பண்ணிக்கப் போறாங்க... இப்போ பல காரணங்கள் சொல்கிறாளே! எல்லாம் பொய்யாயிருக்கும். மொதல்லயே திட்டம் போட்டுத்தான் பண்ணியிருப்பா. என்னுடையது எல்லாவற்றையும் அனுபவித்தாளே, உடல் உள்ளம் உட்பட! வீட்டிற்குக் கூட பணம் அனுப்பாமல் எல்லாவற்றையும் இவளுக்காகவே செலவு செய்தோமே, சண்டாளி!’

‘இருக்கட்டும், நீ மட்டும்தான் இன்னொருவனுடன் படுப்பாயா? நானும் இன்னொருத்தியுடன் உல்லாசமாய் இருப்பேன். அதே நாள், அதே இரவு’, கோபம், ஏமாற்றம், குரோதம் என எல்லா சாத்தான்களும் அவன் மனதில் பிளாட் போட்டு தங்கிவிட்டன.

எல்லாம் ஏற்பாடு செய்தாயிற்று. ரூமுக்கு தனி, பிகருக்கு தனி, மாமாவுக்கு கன்சல்ட்டிங் பீஸ் தனி, வழிகாட்டியவனுக்கு குவாட்டர் செலவு வேறு. உள்ளே வந்தாள் அவள், அவனுக்கோ அதுவே குறி, ‘இன்றோடு இவளை மறந்துவிட வேண்டும்’... மனதுக்குள்... காமமும் புகுந்தது. ஆரம்பித்தான்... அவளது முகமே மனதில், அவளுடனான கலவையின் உணர்ச்சித் ததும்பல்களே உடலில்... அதற்கு மேல் முடியவில்லை.

‘நமக்கே கஷ்டமாய் இருக்கே, அவ எப்படி அடுத்தவன் கூட...’, இப்போது அவன் மனது வெற்றாய் இருந்தது, அழுகையைத் தவிர ஏதுமில்லை அவனிடம்.
--
உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது
--
லக்கிலுக்குக்கு நன்றி
--

Share/Bookmark
Read More!

சின்ன மனசு - போட்டிக்கான சிறுகதை

சுரேஷ் ரயில் நிலையம் நோக்கி வேகமாக நடந்தான். அவனுக்கு, இஷ்டப்பட்ட வாழ்க்கை கிடைக்கப் போகும் சந்தோசம் மனது முழுதும் நிரம்பியிருந்தது. ‘நாளைலருந்து காலைலயே எந்திரிக்க வேணாம், சுப்பம்மா டீச்சரோ பாட்டியோ அடிக்க மாட்டாங்க, இஷ்டம்போல வெளாடலாம், ஆத்திலோ குளத்திலோ குளிக்கலாம், நெனைச்ச நேரம் ஐஸ்கிரீம் சாப்டலாம், எதையும் கண்டிக்க அப்பா இருக்க மாட்டார்’ என்று எண்ணியவாறே ரயில் நிலையம் உள்ளே நுழைந்தான்.

சுரேஷ், வயது 11, ஆறாம் வகுப்பு படிக்கிறான். அப்பா, அம்மா அரசு வேலையில். சொந்த வீட்டில் இருப்பு. ஒரு தம்பி மற்றும் ஆச்சியும் சேர்த்து வீட்டில் மொத்த்ம் ஐந்து பேர். கேட்டது கிடைக்கும் அளவுக்கு நல்ல வசதி. இவ்வளவு இருந்தும் இந்த சின்ன வயதில் வாழ்க்கையை வெறுத்தவன் அவனாகத்தான் இருப்பான். ரொம்ப நாளாகவே வீட்டை விட்டு ஓடிவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். இன்று சுப்பம்மா டீச்சர் அடித்த அடி சற்று அதிகமாக வலித்தது போலிருந்தது, கிளம்பிவிட்டான்.

உள்ளே நுழைந்ததும் சுற்று முற்றும் பார்த்தான், கூட்டம் அதிகம் இல்லை.சற்று தூரத்தில் சிறிய வரிசை ஒன்று. ’டிக்கட் எடுக்கிறார்கள்’ அவனது யூகம். ‘நாமளும் எடுக்கனுமோ? சரவணன் போகும்போது டிக்கட் எடுத்தமாரி சொல்லலியே?!’

சரவணன், ஒன்னாம் வகுப்பிலிருந்தே இவனது உற்ற தோழன். பள்ளி தவிர விடுமுறைகளிலும் ஒன்றாகவே சுற்றுவார்கள். ஆனால் சரவணன் அளவுக்கு சுரேஷுக்கு சுதந்திரம் கிடையாது. சுரேஷ் எங்கே போனாலும் வீட்டில் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும், சாப்பிடும் நேரம் வீட்டிலிருக்க வேண்டும், இருட்டியபின் வீட்டிற்கு வெளியே இருக்கக் கூடாது... இப்படி தனக்கு இருப்பது போல சரவணனுக்கு இல்லாதது சுரேஷுக்கு எப்போதும் ஏக்கமாய் இருக்கும். சரவணனுக்கு என்ன குறையோ, வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். ஆறு மாதம் கழித்துத் திரும்பி வந்து , சுரேஷிடம் தனது அனுபவங்களை, சிந்துபாத் கதை ரேஞ்சுக்கு அடுக்கினான். அதிலிருந்தே இவனுக்கும், தானும் எங்காவது சென்று சுதந்திரமாக வாழவேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டிருந்தது.

’எங்க போனாலும் சின்னப் பசங்கள யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்கன்னு அவன் சொல்லிருக்கானே!? சரி, நமக்கு டிக்கட் தேவல்ல’, என்றவாறு உள்ளே முன்னேறினான். முதல் பிளாட்பாரம், ரயில் ஏதும் இல்லை. இன்னும் அரை மணி நேரத்தில் வரும் என அவன் அறிந்திருந்தான், முன்னமே தகவல்களைத் திரட்டியிருந்தான். செலவுக்கு, சேர்த்து வைத்திருந்த பத்து ரூபாய் இருந்தது. ‘இந்தப் பையை ஏந்தான் கொண்டுவந்தமோ?! இங்கேயே விட்டுட்டுப் போய்றவேண்டியதான்’, தோளிலிருந்த பையை இறக்கி பெஞ்சில் வைத்துவிட்டு அருகே உட்கார்ந்துகொண்டான்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் சுற்று முற்றும் பார்த்தான், ஆங்காங்கே மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். யாரும் தன்னை கவனிக்காதது கண்டு சுதந்திரக் காற்றை நிம்மதியாய் சுவாசித்தான்.

‘நாம நல்லாத்தான படிக்கிறோம்! அப்புறம் ஏன் நம்மளப் போட்டு இப்படி அடிக்கிறாங்க? அதுலயும் அந்த சுப்பம்மா டீச்சர், ஆச்சி ஃப்ரண்டாமே! எதுக்கெடுத்தாலும் அடிக்கிறாங்க. வீட்டுல மாத்திரை சாப்பிடலன்னா ஸ்கூல்ல அடிக்கிறாங்க, ஸ்கூல்ல தண்ணில வெளாண்டா வீட்டுல அடிக்கிறாங்க. எல்லா பசங்களும் தெருவுல எட்டு மணி வர வெளாடுறாங்க, நான் மட்டும் ஆறு மணி வரதான் வெளாடனுமா? குளத்துல குளிக்கப் போனா அடி, ஆத்துல மீன் பிடிக்கப் போனா அடி, ஏந்தான் இப்படி கொடுமைப்படுத்துறாங்களோ!’

தற்கொலை கூட செய்துகொள்ளலாம் என எண்ணியிருந்தான். ‘மருந்தக் குடிச்சா, வயிறு எரியுமாம்டா, உடம்புக்குள்ள இருக்குற எல்லாம் அழுகிப் போயிருமாம். செத்துட்டாப் பரவாயில்ல, ஆனா பொழச்சிட்டா ரொம்ப கஷ்டமாம்டா’, என சரவணன் கூறியதே அதைச் செய்யாததற்குக் காரணம். ‘சரவணன் நல்லா ஃப்ரீயாத்தான சுத்துனான்? அப்புறம் அவன் ஏன் வீட்டைவிட்டு ஓடிப்போகனும்?’, இதற்கு மட்டும் சுரேஷுக்கு பதில் தெரியவில்லை.

’மதுரை செல்லும் ரயில் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும்’, அறிவிப்பு ஒலித்தது. இப்போது மனசு கொஞ்சம் படபடப்பதாய் உணர்ந்தான். தூரத்தில் ஒரு சிறுமி, கந்தல் ஆடையும், கலைந்த தலையுமாய் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். பார்த்த அவனுக்கு, சரவணன் சொன்னது ஞாபகம் வந்தது, ‘பாம்பேலல்லாம், நம்மள மாதிரி பசங்கள கடத்திக்கிட்டுப் போயீ, கண்ணப் புடுங்கி, பிச்சையெடுக்க விட்டுருவாங்களாம்’. நெஞ்சில் படபடப்பு கூடியது. அந்தச் சிறுமியை நன்றாகப் பார்த்தான், கண் இருந்தது.

அப்போது, முறுக்கு மீசையும், வாட்டசாட்டமுமான ஆசாமி அவனைப் பார்த்துக்கொண்டே நெருங்கினார். ‘அய்யய்யோ! நம்மள கடத்திக்கிட்டு போகப் போறாங்க போலருக்கே!’... அருகில் வந்தவர் ‘மணி என்ன தம்பி?’ என்றார். அவனது வகுப்பிலேயே இருவர் மட்டுமே கைக்கடிகாரம் அணிந்தவர்கள். ஒன்று இவன், மற்றொருவர் சுப்பம்மா டீச்சர். பேச வார்த்தைகள் வராமல் கையைக் காண்பித்தான். ‘இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துரும்’, என்றவாறு தன் மனைவியை நோக்கிச் சென்றார். மீண்டும் படபட.

அவருடைய மனைவியைப் பார்த்ததும் அவனுடைய அம்மா ஞாபகம் வந்தது சுரேஷுக்கு. அம்மாதான் இவ்வளவு நாள் அவன் அந்த வீட்டில் இருந்ததற்குக் காரணம், இல்லையென்றால் எப்போதோ காணாமல் போயிருப்பான். அப்பா அடிக்கும்போது அம்மாதான் இடையில் புகுந்து காப்பாற்றுவார், சில நேரங்களில் விசயம் அப்பா காதுக்குப் போகாமலேயே பார்த்துக்கொள்வார். கேட்கும் பண்டங்கள் வாங்கித் தருவார். ஆனால் , ஆச்சி அடிப்பதை மட்டும் தடுக்க மாட்டாரே? அவர் மாமியாரல்லவா! அந்த விசயத்தில் மட்டும் அம்மா மேல் இவனுக்குக் கொஞ்சம் கோபம் உண்டு. என்னதான் மெத்தையெல்லாம் இருந்தாலும் அம்மா மடியில் படுத்துத் தூங்குவதில்தான் அவனுக்குத் தனி சுகம். மாதா மாதம் மளிகை சாமான் வாங்குவதற்கு அவனும் அம்மாவும்தான் போவார்கள். அனைத்துப் பொருட்களையும் பையில் போட்டு, சைக்கிள் கேரியரில் வைத்து உருட்டிக்கொண்டு வருவான். அன்று மட்டும் அம்மாவிடமிருந்து ஒரு ஸ்பெசல் கவனிப்பு உண்டு அவனுக்கு. ‘நாம இல்லன்னா அம்மா அழுவாங்களோ? அப்பா லேசா திட்டுனாக் கூட அழுதுருவாங்களே?!’.

அம்மாவை நினைத்துக் கொண்டிருக்கும்போதே தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. அனைவரும் அவனையே பார்ப்பது போல இருந்தது. நெஞ்சு படபடவென இன்னும் வேகமாய் அடித்தது. ‘அய்யய்யோ! இன்னிக்கி மளிகசாமான் வாங்க போனும்னு சொன்னாங்களே, நாம இல்லன்னா அம்மா எப்படி தனியாத் தூக்கிட்டு வருவாங்க? அப்பா கூட ஹெல்ப் பண்ண மாட்டாரே! அப்போ, இன்னிக்கிப் போயி வாங்கிக் குடுத்துட்டு, நாளைக்கி வந்து ஓடிப்போலாம்’, என்று எண்ணியவாறு பையை தூக்கித் தோளில் மாட்டினான். ரயில் நிலையம் விட்டு வெளியே வரும்போது, ஏதோ ஒரு நிம்மதி அவனது மனது முழுதும் நிறைந்திருந்தது. அந்த நிம்மதி, உள்ளே வரும்போது இருந்த மகிழ்ச்சியைவிட பல மடங்கு பெரிதாய் இருப்பதை அவன் உணர ஆரம்பித்தான்.
-x-




Share/Bookmark
Read More!