அவதிப்படும் 100 அடி ரோடு

(படம் beta.thehindu.com லிருந்து எடுக்கபட்டது)

சென்னையில் வாகன நெரிசலைச் குறைக்க மேம்பாலங்கள் ஆங்காங்கே முளைத்துக்கொண்டே இருக்கின்றன. நல்ல விசயம்தான். ஆனால், அது கட்டி முடிக்கப்படும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில் சில பாதைகள் மறைக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் ஏற்படும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் சொல்லமுடியாத அயற்சியைத் தருகிறது. என்ன செய்ய? பல காலத்து நன்மைக்காக சில காலம் கஷ்டம் அனுபவிப்பதில் குறையேதுமில்லை. ஆனால் இதுபோன்று ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் துறை கூடுதல்/சிறப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கிறதா என்றால், சத்தியமாக இல்லை என்றே தோன்றுகிறது.

இப்போது 100 அடி சாலையில் மெட்ரோ ரயிலுக்காக சாலைக்கு நடுவே தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதில் வடபழனி முதல் கோயம்பேடு வரை உள்ள தூரத்தில் நான் கவனிப்பதைப் பற்றி மட்டும் கூறுகிறேன். தூண்கள் சாலைக்கு நடுவே அமைவதால், சாலைக்கு நடுவில் தடுப்புச் சுவர் அமைத்ததால் சாலையின் அகலம் பாதியாகக் குறைந்துவிட்டது. இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலை நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. காரணம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எந்த சிறப்பு/கூடுதல் ஏற்பாடும் இல்லை.

கோயம்பேடு பேருந்து நிலையம் - வடபழனிக்கு இடையே மொத்தம் 4 சிக்னல்கள். முதலில் SAF Games Village வாசலில் இருக்கும் சிக்னல். இங்கு இதுவரை தொல்லை ஏதும் பார்த்ததில்லை. சிக்னல் விளக்குகள் வேலை செய்கின்றன. சில நேரங்களில் ஒரு காவலரும் அருகில் இருக்கிறார்.

அடுத்து, MMDA சிக்னல். பாலம் கட்டும் வேலை காரணமாக சிக்னல் விளக்குகள் வேலை செய்வது இரண்டு வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டது. போக்குவரத்துக் காவலர் எப்போதும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் சில நேரங்களில் ஓரமாக நின்று யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கிறார். சிலர் நெரிசலைச் சரிசெய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால் பேருக்குத்தான் கைகளை காட்டிக்கொண்டு இருக்கின்றனர். மக்கள் எல்லா பக்கத்திலிருந்தும் வந்து முட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஒரே ஒருவரால் இந்த நான்முக சந்திப்பை சரி செய்வது இயலாத காரியம்.

அடுத்து, திருநகர் சிக்னல். இங்கு இருந்த சிக்னல் விளக்குகளைப் பெயர்த்து இடம் மாற்றி, ஓரமாக வைத்துள்ளனர். இருந்தும் பிரயோசனமில்லை, வாகன ஓட்டிகளின் பார்வைக்கு ஏதுவாக வைக்கப்படவில்லை. போக்குவரத்துக் காவலர் ஒருவரைக்கூட இங்கு பார்த்ததில்லை. மக்கள் தாமாகவே முட்டி மோதி, ஒருவரை ஒருவர் திட்டி, ஒருவழியாகக் கடந்துபோகின்றனர்.

அடுத்து அம்பிகா எம்பயர் முன்பு உள்ள சிக்னல். இங்கும் சிக்னல் விளக்குகள் காலி. இங்கு காவலர்களை விட முனைப்பாக ஒரு பொதுஜனம் போக்குவரத்தைச் சரிசெய்ய உதவி செய்துகொண்டிருப்பார். காவல்துறை நண்பர்கள் போன்ற வகையாக இருப்பாரோ?, தெரியவில்லை. சம்பளம் வாங்கும் காவலர்கள் கூட ஓரமாகத்தான் நிற்பார்கள், இவர் அங்குமிங்கும் ஓடி வேலை செய்துகொண்டிருப்பார். சில நேரங்களில் வாகனங்கள், தான் சொல்வதை மதிக்காமல் செல்வது கண்டு திட்டிக்கொண்டிருப்பார். இப்போது இந்த சிக்னல் மூடப்பாட்டு, சற்று தள்ளி, பாதையின் நடுவே திறக்கப்பட்டுள்ளது.

சிக்னல்களைக் கடப்பதற்குள் இந்தப் பகுதி மக்கள் ஒருவழியாகிவிடுகிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவர் கூட இந்தப் பகுதியில் பயணம் செய்ததில்லையா? கூடுதல் காவல்துறை பணியாளர்களை நியமிக்கவேண்டும் என ஒருவருக்குக் கூட தோன்றவில்லையா? அங்கு பணிபுரியும் காவலர்கள் எவரும் மேலதிகாரிக்கு இந்த ஆள் பற்றாக்குறை, விளக்குகள் வேலை செய்யாததைப் பற்றிச் சொல்லவில்லையா? அல்லது பணியாளர் பற்றாக்குறையா? ஒன்றும் புரியவில்லை. அடுத்து மக்கள். ஒரே ஒரு போக்குவரத்துக் காவலர் நின்று கஷ்டப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்கிறாரே, கொஞ்சம் ஒத்துழைபோமே என்று ஏன் ஒருத்தருக்கும் தோன்றவில்லை? எல்லோரும் சென்று முட்டிக்கொண்டு நின்றால் ஒருவரும் போக முடியாது என ஏன் இந்த மரமண்டைகளுக்கு உரைக்கவில்லை? கொஞ்சம் நின்று வழிவிட்டுப் போனால்தான் என்ன? - இப்படி ஒவ்வோரு முறையும் தோன்றிக்கொண்டே இருக்கிறது இந்த MMDA சிக்னலைக் கடக்கும்போது.

-அதி பிரதாபன்.

Share/Bookmark

10 ஊக்கங்கள்:

Thamira said...

தேவையான பகிர்வு. மக்கள் முதலில் ஒழுக்கம் பேணவேண்டும்.

Joe said...

"சிவப்பு விளக்கு எரிந்தால் நில், பச்சை விளக்கு எரிந்தால் செல்" என்பது பின்பற்றுவதற்கு அவ்வளவு கடினமான விதியா? அப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு வேகமாக ஒட்டி என்ன கிழித்து விடுகிறார்கள் நம்மவர்கள்?

சென்ற வருடம், ஹால்டா சிக்னல் ராஜீவ் காந்தி சிலையை தாண்டிய பிறகு, போக்குவரத்துக் காவலர் நடுவில் வந்து நின்று வண்டிகளை நிறுத்தி, பாதசாரிகளை சாலையைக் கடக்க வைப்பார். (ஆறுதடங்கள் கொண்ட சாலையை ஒருவழிப் பாதையாக்கும் கூர்மையான புத்தி கொண்ட போக்குவரத்து வல்லுனர்கள் நம் நாட்டில் மட்டுமே இருப்பார்கள்) பல்லவன் பேருந்து ஓட்டுனர் வேகமாக ஒட்டி, அவரை நசுக்கிக் கொன்ற பிறகு, அங்கேயொரு சிக்னல் நிறுவப்பட்டது. ஆனால் இப்போதும் காவலர்கள் இரண்டு பேர், மாறி மாறி நின்று கொண்டு தான் இருக்கிறார்கள். சற்றுபுத்திசாலித்தனமாக , சிவப்பு விளக்கு போட்ட பிறகும் தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளை, "சிக்னல் பாத்து ஓட்டுறா டேய்" என்று கத்த மட்டும் செய்கிறார்கள்.

எல் கே said...

//அடுத்து அம்பிகா எம்பயர் முன்பு உள்ள சிக்னல். இங்கும் சிக்னல் விளக்குகள் காலி. இங்கு காவலர்களை விட முனைப்பாக ஒரு பொதுஜனம் போக்குவரத்தைச் சரிசெய்ய உதவி செய்துகொண்டிருப்பார். காவல்துறை நண்பர்கள் போன்ற வகையாக இருப்பாரோ?, தெரியவில்லை. சம்பளம் வாங்கும் காவலர்கள் கூட ஓரமாகத்தான் நிற்பார்கள், இவர் அங்குமிங்கும் ஓடி வேலை செய்துகொண்டிருப்பார். சில நேரங்களில் வாகனங்கள், தான் சொல்வதை மதிக்காமல் செல்வது கண்டு திட்டிக்கொண்டிருப்பார். இப்போது இந்த சிக்னல் மூடப்பாட்டு, சற்று தள்ளி, பாதையின் நடுவே திறக்கப்பட்டுள்ளது.//

ithu daily naan parkiren

பனித்துளி சங்கர் said...

100 அடி ரோடு" உண்மை நிலையை அழகாக படம் பிடித்து கட்டி இருக்கிறது உங்களின் பதிவு பகிர்வுக்கு நன்றி

வால்பையன் said...

பாலம் எப்ப தான் கட்டி முடிப்பாங்களாம்!?

Ashok D said...

//ஏன் இந்த மரமண்டைகளுக்கு உரைக்கவில்லை?//

பல இடத்தல அப்படிதான்.. attitudes have to change :)

Beski said...

நன்றி ஆதி அண்ணே,
ஒழுக்கம் எப்படி வருமென்று தெரியவில்லை.

Beski said...

நன்றி ஜோ,
இந்தப் பகுதியிலும் ஏதாவது உயிர் விழுந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என நினைக்கிறேன்.

நன்றி எல்கே.

நன்றி சங்கர்.

நன்றி தல,
ரெண்டு வருசம் இதே நெலமதான்னு சொல்றாங்க, எப்படியும் மூனு வருசம் ஆகும்னு நினைக்கிறேன்.

Beski said...

நன்றி டாக்டர்,
மாற வேண்டும்.

Beski said...

test...