முடியாது = தெரியாது - பாகம் 1

சென்னைக்கு அவன் வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. பைக் இன்சூரன்ஸ் முடியப் போகிறது, புதுப்பிக்க வேண்டும். அதுவரை அந்த மாதிரியான தேவைகளை அப்பாவே பார்த்துக் கொள்வார். லைசன்ஸ் எடுப்பது, இன்சூரன்ஸ், வெள்ளை அடிப்பது... எல்லாம் அப்பாவே விசாரிப்பார், பேசுவார். அவன் தேவைப்பட்டால் ஏதாவது நேரில் சென்று கொடுப்பது, அல்லது மேலும் விசாரிப்பது. அவ்வளவே. தானே முடிவு எடுக்கும் காலம் வரும் என்று அப்போது அவன் நினைத்துக் கொள்வான்.

இன்று அந்த நிலையில்தான் இருக்கிறான். ஆனால் பிடிக்கவில்லை. அப்பா செய்ததில் தெரிந்த சந்தோசம் இப்போது தான் செய்யும்போது இல்லை. சென்னையின் எந்த வேலையானாலும் நெருக்கடியான் பல சாலைகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். அப்படியே சென்று சேர்ந்தாலும், பார்க்கிங் இடம் தேட வேண்டும், கிடைத்த சிறிது இடைவெளியில் சொறுகி நிருத்த வேண்டும். நிறுத்தும்போதே 2 இடங்களில் கோடு விழும். அதன்பின் சென்று வரும்வரை பைக் மற்றும் ஹெல்மெட் ஞாபகமாகவே இருக்கும். அதனாலேயே ஹெல்மெட்டை பைக்கில் விட்டுச் செல்வதில்லை. திரும்பி வரும் போது 1, 2 கோடுகளோடு இருந்தால் சந்தோஷம், போலீஸ் தள்ளிக்கொண்டு போகாமலிருந்தால் ரொம்ப சந்தோஷம். இதில் 1 லட்சத்தில் கார் வேறா? அவனுக்கு இலவசமாக கொடுத்தால் கூட வேண்டாம். அப்புறனம் கார் பார்க்கிங்கோட வீடு தேட வேண்டியிருகும்.

இப்படியே அலை பாய்ந்துகொண்டே இன்சூரன்ஸ் அலுவலகம் வந்து சேர்ந்தான். பார்க்கிங்கு ரொம்ப கஷ்டப்படவில்லை. உள்ளே நாலைந்து மேசை, நாற்காலிகள். ஒரு தனி மானேஜர் அறை. முதலில் இருந்த மாமியிடம் சென்று கொண்டுவந்திருந்த இன்சூரன்ஸை காண்பித்தான்.
‘அவரிடம் போய் கேளுங்கள்’
என்று 3வது மேஜையைக் காண்பித்தார். அவனுக்கு ‘ஆரம்பிச்சிட்டாங்கய்யா....’ என்றிருந்தது. இப்படி ஒரு தடவை நடந்திருக்கிறது. அவரிடம் கேள், அவரிடம் கேள் என்று அலைக்கழித்து, முதலில் கேட்ட நபரிடமே வந்திருக்கிறான். கோபமாகக் கேட்டிருக்கிறான் ‘முடியுமா, முடியாதா?’, அவர் கொஞ்சம் கூலாகவே சொல்லியிருக்கிறார் ‘முடியாதுப்பா’. உண்மையிலேயே முடியாது என்ற வார்த்தைக்கு ’தெரியாது’ என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

வித்தியாசமான, புதிய வேலை வந்தால் அதைப் பற்றி விசாரித்து செய்துகொடுக்கும் அலுவலர்கள் மிகவும் குறைவு. வழக்கமாக செய்யும் வேலையைத் தவிற வேறு எதையும் புதிதாக செய்திட அவர்களுக்கு விருப்பமில்லை போலும். அதாவது பரவாயில்லை, தெரியாது என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம், முடியாது என்று சொல்லி அனுப்பப்படுவது அவனவன் விதி.

3வது மேஜைக்குச் சென்றான்
‘இது இங்க போட்டது இல்லையே... எங்க போட்டது சார்?’
‘தூத்துக்குடி’ என்றான்.
‘அங்க போய்தான் சார் ரினீவல் பண்ண முடியும், இங்க முடியாது சார்’
‘தாங்க் யூ’, திரும்பினான்.

இன்னும் ஒரு வாரம் இருப்பதால் ஊருக்கு அனுப்பி பண்ணிக்கலாம் என எண்ணினான். ஆனாலும் ’இந்தியா முழுவதும் கிளைகள் இருப்பதால் என்ன பயன் இவர்களுக்கு? இதின் கம்ப்யூட்டர்கள் வேறு! அனைத்தையும் இணைக்கும் வழிகள்தான் எத்தனை! எப்போதுதான் முன்னேறப் போறாங்களோ?’ குமுறிக்கொண்டே வந்தான்.

ஆனால் அந்த இன்சூரன்ஸ் கம்பெனி வெப்சைட்டில் அவர்களது அனைத்து கிளைகளின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கிடைத்தன. தூத்துக்குடியில் இருக்கும் கிளைக்குப் போன் செய்து விசாரித்து விட்டு, அங்கிருக்கும் நண்பனுக்கு தேவையானவற்றை அனுப்பி வைத்தான். இரண்டு நாள் கழித்து நண்பனிடமிருந்து போன். இது இங்க வாங்கினது இல்லை, ‘அம்பை’ல வாங்கினது என்று. உடனேயே அப்பாவுக்கு போன் போட்டான்,
‘என்னப்பா இது? எதுக்கு அங்க போய் வாங்குனீங்க?’
‘எனக்கு என்னப்பா தெரியும், நா ஏஜண்ட்கிட்ட குடுத்தேன், அவன் அங்க போய் எடுத்துருப்பான் போல இருக்கு!’ - அவன் அப்பா.
அந்த ஏஜண்ட் ஏன் நூறு கிலோமீட்டர் தள்ளிப் போய் வாங்கினான் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ‘டொக்’ என கட் செய்தான். செல்போன் எதற்கு உதவுகிறதோ இல்லயோ, எழுந்த கோபத்தை அடுத்த நொடியே கொட்டித் தீர்த்து, மனதை சாந்தியடையச் செய்ய ரொம்ப உதவுகிறது. அப்படியே அதன் தொடர்ச்சியாய் ஒரு தம் அடித்தால் போதும், மூளை சூடாகி மனது குளிர்ந்துவிடும் அவனுக்கு.

அடுத்து ‘அம்பை’ கிளைக்கு போன் போட்டான். அங்கு சொன்னது கேட்டு நொந்தேபோய்விட்டன்!

தொடரும்...


Share/Bookmark

2 ஊக்கங்கள்:

பிச்சைப்பாத்திரம் said...

why blood? same blood. :-)

Beski said...

சேம் ஃபீலிங்.
:-)